Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 41

நினைவு-41

எளிய முறையில் பதிவுத் திருமணத்தை முடித்துக் கொண்டு முறைப்படி மருமகளாக புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் திவ்யா. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த மூன்று நாட்களில் மனைவியை தன் கண் பார்வையில் வைத்துக் கொள்வதற்காக இத்தனை சீக்கிரமாய் இப்படியொரு ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தான் சத்யானந்தன்.

ஏற்கனவே கோவிலில் தாலி கட்டி திருமணம் முடித்திருந்தாலும் தொழில் நிர்வாகத்தில் மனைவியை அடையாளப் படுத்துவதற்காகவும் ஊராரின் கேள்விகளுக்கு பதிலாகவும் தங்களின் பந்தத்தை சட்டப்படி சாஸ்வதப்படுத்தி விட்டான். சண்முகமும் லட்சுமியும் மணமக்களை வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட கையோடு காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர்.

திவ்யாவின் உடல்நிலை இன்னும் இயல்பிற்கு வராமல் முகத்தில் சோர்வு அப்பட்டமாய் அப்பியிருந்தது. அவளால் பேச நினைத்தாலும் அவளை அமுக்கி எடுத்திருந்த மூச்சுத் திணறலின் தாக்கத்தால் இன்னும் அவளால் சகஜமாய் நடமாட முடியவில்லை.

மிகவும் தளர்ந்த குரலில் மெதுவான பேச்சு, சோர்வான நடை என இன்னும் நோயாளியாகவே சுற்றிக் கொண்டிருந்தாள். ஆனாலும் மலர்ந்த முகத்தோடு வளைய வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.

காலையில் பதிவுத் திருமணம் முடித்த கையோடு சத்யானந்தனும் உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி நின்றதும் மனைவியின் இயல்பான கோபம் தலை தூக்கிப் பார்த்தது.

கணவனை தடுத்து நிறுத்துபவளாய் அவன் முன்வந்து நின்றாள் திவ்யா. 'என்னவாம்?' என்ற கண் சுருக்கத்தோடு அவளையே பார்த்தவன், பின் அவளை தள்ளி நிறுத்திவிட்டு செல்வதற்கு முயற்சிக்க, "எதுக்காக என்னை அவாயிட் பண்றீங்க கண்ணன்?” என்று மெதுவாக ஆனால் அழுத்தமாகக் கேட்டாள்.

"அவாயிட் பண்றேனா! இதென்ன புதுசா இருக்கு?"

"நீங்க பண்றது எல்லாமே புதுசா தான் இருக்கு கண்ணா... இந்த ரெஜிஸ்டர் மேரேஜ், என்கிட்ட பேசாம ஒதுங்கிப் போறது, அப்புறம் என் சம்மந்தப்பட்ட விசயத்தை கூட என்கிட்டே ஷேர் பண்ணாம இருக்கிறதுன்னு நிறைய புதுசு உங்ககிட்ட நான் பாக்கறேன்" என்றவளின் முகமும் குரலும் அழுகைக்கு தாவ முற்பட, அவசரமாய் தடுத்தான்.

"ஹேய்... வெயிட், வெயிட்... கொஞ்சம் விட்டா என்னை ஆன்ட்டி ஹீரோவாக்கி ஒரு கதையே எழுதிடுவ போலிருக்கு! உன் கற்பனைக்கு நான் ஆளில்லடி என் ஆசை பொண்டாட்டி... நிக்கவும் நேரம் கிடைக்காம ஓடிட்டு இருக்கேன். அது ஏன்னு நீ கேக்கணும். இப்படியெல்லாம் தப்பு தப்பா யோசிக்க கூடாது" என்றவனின் குறும்புப் பேச்சில் மேலும் முறைத்துப் பார்த்தாள்.

"என் புத்தம் புது மனைவியோட ஹனிமூன் போயி திகட்ட திகட்ட ரொமான்ஸ் பண்ணணும்ன்ற பேராசையில தான் பக்காவா பிளான் பண்ணி இப்படி நிக்காம ஓடிட்டு இருக்கேன். இந்த பதில் போதுமா? என்னை நம்புறியா?" என்றபடி அவளைப் பார்த்து கண்சிமிட்ட, மெலிதாய் நாணத்தில் நெளிந்தவள்,

"நீங்க சொல்றது சரின்னு பட்டாலும், என்னைப் பார்த்து ஒதுங்கிப் போறீங்களே... அது எதுக்காம்? என்கிட்டே முகம் கொடுத்து சரியாக் கூட பேசுறதில்ல நீங்க!" என்று சலுகையாக முறுக்கிக் கொண்டாள்.

அவளது தோளில் இயல்பாய் கைபோட்டவன், "அப்படியில்ல தியாகுட்டி! உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி செம்மையா ஃபார்ம் ஆகிருச்சுடி... நான் எதார்த்தமா உன்கிட்ட பேசப்போக, அதுல நீயும் பதார்த்தமா பதில் பேச கடைசியில பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு கதையாகிடக் கூடாது இல்லையா?" என்றவனின் விஷமப் பேச்சில் மனதில் கொஞ்சநஞ்சமாய் ஒட்டியிருந்த ஆதங்கம் எங்கோ காணாமல் போனது.

"அப்படி பத்திக்கிட்டா நல்லது தானே... நானும் எட்ட நின்னு தயங்கிப் பேசாம, பக்கத்துல வந்து கொட்டு வச்சுப் பேசலாம்" என்று மனதின் ஆசையை பூடகமாய் வெளிப்படுத்தினாள் திவ்யா.

"அடிப்பாவி... பெண்களுக்கே இருக்கிற அச்சம், மடம் நாணம், பயிர்ப்பு எல்லாம் உங்களுக்கு இல்லவே இல்லையாங்க மேடம்? இப்படி ஓபனா பேசுறீங்க!" என்ற வாயைப் பிளந்து கேலி பேசிட, இயல்பாய் அவன் கழுத்தில் கைகளை கோர்த்து கொண்டாள் திவ்யா.

"என் புருசன்கிட்ட நான் பேச எந்த புண்ணாக்கையும் பயிர் செய்ய வேண்டாம் மிஸ்டர்.கண்ணன்."

"நல்லவேளை புண்ணாக்கு தப்பிச்சது"

"கேலி போதும் கண்ணா!"

"ஹஹா... விட்டா நடுரோட்டுல கூட என்னை, நீ ஏலம் விடுவடி! இப்போதைக்கு ஆளை விடு!"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம போறீங்க கண்ணன்!" என்று மீண்டும் ஏக்கத்தோடு கணவனைப் பார்த்தாள் திவ்யா.

"உன் ஹெல்த் இப்போதைக்கு ஓகே இல்லடா! கொஞ்சநாள்... கொஞ்சமே கொஞ்சநாள் நீ நீயா மட்டுமே இரு! நமக்கான வாழ்க்கை காலம் முழுக்க காத்துட்டு இருக்கு தியா... எனக்கு நீ ரொம்ப முக்கியம்டி... எனக்காக கொஞ்சம் பொறுத்துக்கோடா!" என்று மெதுவாக நெற்றியில் முத்தமிட்டு அவளைச் சமாதானம் செய்ய, புரிந்து கொண்டவளாக சரியென்று தலையாட்டினாள்.

"ஆனா ரொம்பநாள் என்னை விட்டுத் தள்ளி இருக்காதீங்க கண்ணன்... என்னால தாங்க முடியாது" அவன் தோளில் சாய்ந்து கொண்டு தனது ஆசையை குறிப்பிட,

"எனக்கும் தான் தியா... பட், டாக்டர் அட்வைஸ் கேட்டுக்கணும் இல்லையா... கமான் மை கேர்ள்... பீ சியர் அப்!" என்று அவள் முகத்தை உயர்த்தி கன்னத்தை கிள்ளிய நேரத்தில்,

"இதுக்குதான் பேராண்டி ஹனிமூன் போகச் சொன்னேன். கேட்டியா நீ?" பின்னால் இருந்து தேவானந்தனின் குரல் கேட்க, அவசரமாய் பிரிந்தனர்.

"தாத்தா... நீங்க கரடியான சமாசாரத்தை இப்படியா என்கிட்ட போட்டு உடைக்கணும்?" என்றபடி அவரை நோக்கி வந்தான் சத்யா.

"வேற வழி? நானும் கொள்ளுப் பேரனுக்கு வழி பிறக்குமான்னு பாக்கறேன். நீ சாமியாரா தான் நிப்பேன்னு அடம் பிடிக்கிற! என்னவோ போடா... நீ சரியில்ல" என்று குறைபட்டுக் கொண்டார் பெரியவர்.

"ஏன் மாமா... என் பிள்ளைகிட்ட அப்படி என்ன குறை கண்டீங்க? இப்படி சலிச்சுக்கிறீங்க!" என மகனுக்கு வக்காலத்து வங்கிக் கொண்டு வந்தார் மங்கையர்க்கரசி.

"வாம்மா மருமகளே... இவன் எதுல எல்லாம் குறை வச்சான்னு நான் சொல்றேன். நீ லிஸ்ட் போடு!" என்றவர்,

திவ்யாவை பார்த்து, "நீயும் உக்காரும்மா... இந்த தாத்தா உனக்காக தான் பேசிட்டு இருக்கேன்." என்று வம்புச் சபையை கூட்டினார் தேவானந்தன்.

"தாத்தா, நீங்க மெதுவா லிஸ்ட் போட்டு வைங்க... அதுக்குள்ள நான் ஆபீஸ் போயிட்டு வந்துடுறேன்" என்று சத்யா நழுவப் பார்க்க,

"பார்த்தியா... இவன் சைடு வீக்னு தெரிஞ்சதும் பய நழுவிட்டு போறத... பிடிம்மா அவனை... இன்னைக்கு அவனா நானானு பாக்கறேன்!" என்றபடி திவ்யாவை ஏவினார்.

"தாத்தா... கண்ணன் எதையும் காரணமில்லாம செய்ய மாட்டார். அதுவும் எனக்காக அவர் மெனக்கெட்டு செய்ற எதுவும் நல்லதுக்குனு நினைங்க... அவர் என்கிட்ட சொல்லிட்டார்." என்று தேவானந்தனை திவ்யா சமாதானப்படுத்த,

"போச்சு... இருந்த ஒரு ஓட்டும் அவன் பக்கம் போயிடுச்சா... டெபாசிட் காலியாகி கள்ளவோட்டு போடுறதுக்கு கூட ஆளில்லாம நிக்கிறேன்" என்று தாத்தா சோகப்பாட்டு படிக்க,

"உங்க ஓட்டும் எனக்குத்தான் தாத்தா... அதனால உங்க கட்சி திவாலானதா அனன்வுஸ் பண்ணிட்டு, எனக்கு தொண்டனா சேர்ந்துக்கோங்க... மூனு வேலை கஞ்சி நிம்மதியா குடிக்கலாம். இல்லன்னா, அம்மா பொண்டாட்டின்னு ரெண்டு ஹோம் மினிஸ்டர்சை விட்டு உங்களை ஓட ஓட விரட்டுவேன். பார்த்துக்கோங்க!" என்று சொன்ன நேரத்தில் மங்கை அடிப்பதற்காக வர, அவரிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு துள்ளிக் குதித்து ஓடி காருக்குள் ஏறிக் கொண்டான் சத்யானந்தன்.

வீட்டுச் சூழ்நிலை சிரிக்க வைத்தாலும் அவனது மனநிலை இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடித் தவித்தது.  மணமுடித்த ஆண்மகனாய் மனைவியுடன் ஆசையுடன் கழிக்க வேண்டிய பொழுதில் இப்படி வெறுமையில் உழன்று கொண்டிருப்பதை நினைத்து அவனுக்கே ஆற்றாமை மேலிட்டது.

ஆனால் இதெல்லாம் தனது உயிரானவளுக்காக... தனக்காக நாளும் பொழுதும் ஏங்கித் தவித்தவளுக்காக என்றெண்ணும் பொழுது இந்த சங்கடமும் கானல்நீராய் கரைந்து போனது. இதனைத் தான் காதல் செய்யும் மாயம் என்கின்றனரோ!

அவன் மனம் மருத்துவர், திவ்யாவை பற்றிச் சொன்னதை நினைத்துப் பார்த்து பெருமூச்சு விட்டது.

“உங்க வொய்ஃப் ரொம்ப நார்மலா இருக்காங்க அன்ட் ஹெல்தியாவும் இருக்காங்க... டோன்ட் வொரி!” என்று முதலில் அவனை சகஜமாக்கினார் மருத்துவர்.

“அப்புறம் எதுக்கு டாக்டர் இவ்வளவு சீரியஸ் கண்டிசன்ல இருக்கா?” என்று பதட்டம் விலகாமல் கேட்டான் சத்யா.

“சிம்பிள் சத்யா... அதிகமான வேலைப்பளு எப்படி நம்மோட உடலுக்கு ஒத்து வராதோ, அதே போல அதிகமான உணர்வுபூர்வமான நடவடிக்கைகளும் மனசுக்கு ஒத்து வராம மனுசனை ஆட்டிப் படைக்குது. மனசோட தவிப்பை சொல்றதுக்கு வார்த்தையோ துணையோ கிடைக்காத நேரத்துல உள்ளுக்குள்ளே போட்டு மருகுறவங்குக்கு அதுவே ஒவ்வாமையாகி உடம்பை அலைகழிக்குது. அதுதான் உங்க வொய்ஃப் திவ்யாக்கு நடந்திருக்கு. தொடர்ந்து வேதனை, வருத்தம், சோகம், ஏக்கம்னு உள்வாங்கிட்டு நொந்த மனசு திடீர்னு வந்த சந்தோஷத்தை ஏத்துக்கிட்டு பேலன்ஸ் பண்ணிக்க முடியாம மூச்சடைச்சு திணறிப் போயிடுச்சு!” என்று விளக்கமாக எடுத்துரைத்தார் மருத்துவர்.

“அப்படின்னா இப்ப அவ ஓகேதான டாக்டர்?”

“ஒகே தான், பட் நாட் ஓகே... கொஞ்சநாள் அவங்களோட உணர்வுகளுக்கு ஆசுவாசத்தை கொடுங்க... அதிகமான சந்தோசத்தையோ துக்கத்தையோ கொடுக்காம இருங்க... இந்த நிலையான சந்தோசம் உனக்கு மட்டுமே சொந்தமானதுன்னு அவங்க மனசுல ஆழமா பதிய வைங்க... எந்த காரணத்தைக் கொண்டும் அவங்க உணர்ச்சி வசப்படாம பார்த்துக்கிறது ரொம்ப நல்லது. மனதோட அதீத அலைகழிப்பு தான் இன்றைக்கு இவங்களோட உடல்நிலை பாதிப்புக்கு காரணம். நல்ல ரெஸ்ட் தேவை... ஐ மீன் உடல் ஒய்வு இல்ல மன ஒய்வு தேவை. இப்போதைக்கு இவங்களோட சந்தோசத்துக்கு பார்த்து செய்ற எந்தவொரு காரியமும் கூட இவங்க உடம்புக்கு சங்கடத்தை கொடுக்கலாம்.” 

“கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசம் கழிச்சு இப்போதான் வாழவே ஆரம்பிக்கப் போறாங்க டாக்டர்... அதுகூட திவ்யாவுக்கு பாதிப்பை கொடுக்குமா?” உடனிருந்த சண்முகம் வருத்தத்துடன் கேட்க, ஆமென்று தலையசைத்தார் மருத்துவர்.

“நிச்சயமா... அதிகப்படியான சந்தோஷத்தை தாங்குற சக்தி அந்த பொண்ணுக்கு தற்சமயம் இல்ல... இதெல்லாம் கொஞ்சநாளுக்கு தான். அப்புறம் நார்மல் ஆகிடுவாங்க... தன்னை தாங்கிக்க யாருமில்லன்னு உள்ளுக்குள்ள அழுத்திகிட்ட மனசுக்கு ஒய்வு தேவை. அவ்வளவு தான்” என்று முடித்தார்.

“இதுக்கு டிரீட்மென்ட் எப்படி?”

“நார்மலா இருக்கலாம். வேலைக்கு போகலாம். அவங்க உணர்ச்சி வசப்படாம மட்டும் பார்த்துக்கோங்க... சில மெடிசன்ஸ் எழுதித் தர்றேன். அதை ஆறுமாசம் ஃபாலோ பண்ணட்டும். அது போதும். மாசத்துக்கு ஒரு தடவை செக்கப்புக்கு கூட்டிட்டு வாங்க!” என்று பேசி முடித்தவராக மருந்துகளை எழுதித் தந்தார்.

அடுத்த இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து மூச்சு சீரான பிறகு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் திவ்யா. அவளைத் தனியாக விட்டுச் செல்வதற்கும் தவித்துப் போனான் சத்யானந்தன்.

மருமகளை அருகில் வைத்துக் கொண்டு பார்ப்பதற்கு மங்கையர்க்கரசி செய்த யோசனை தான் உடனடியாக பதிவுத் திருமணத்தில் முடிந்தது. தேவானந்தனிடமும் திவ்யாவின் உடல்நிலை விளக்கி சொல்லப்பட்டு, தாலி கோர்க்கும் சம்பிரதாயத்தையும் எளிய முறையில் நடத்தி விடலாமென்று கூற அவரும் சரியென்று சம்மதித்தார். 

அதன்படியே திருமணத்தை முடித்து, அடுத்த இரண்டு நாட்களில் சத்யானந்தனின் பூர்வீக வீட்டில் வைத்து தாலி கோர்க்கும் வைபவத்தையும் நடத்திட முடிவு எடுக்கப்பட்டது.

திவ்யாவிற்கு முழு ஓய்வினை கொடுத்த சத்யானந்தன் எதைப் பற்றியும் அவளிடம் கலந்தாலோசிக்கவில்லை. ‘நான் என்ன சொல்கிறேனோ அதை கேட்டுக் கொள்... எல்லாம் உன் நன்மைக்கே!’ என்று செயலின் மூலம் காண்பித்து அவளை பார்வையால் தழுவிக் கொண்டே இருந்தான்.

அவளுக்குமே தனது நிலை யாரும் சொல்லாமலேயே நன்றாகப் புரிந்து போக, எந்தவொரு வீண் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாமல் கணவன் சொல்வதை கேட்டு, சம்மதமாக தலையாட்டுவதை வாடிக்கையாக்கிக் கொண்டாள்.

எக்காரணம் கொண்டும் அவள் அதிகமாய் உணர்ச்சிவசப்படாமல் இருக்க தனது உணர்சிக்களை கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தனது மனைவிக்காக தன்னுள்ளம் கவர்ந்த பெண்ணிற்காக தவமிருக்க தொடங்கி விட்டான் சத்யானந்தன்.