Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 40

நினைவு-40

காத்திருந்தேன் காத்திருந்தேன்

காலடி ஓசைகள் கேக்கும் வரை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை

நீங்காமல் உன்னை

நான் எண்ணி வாழ்ந்தேன்

நினைவில் பாதி கனவில் பாதி

நாள்தோறும் இதே நிலை

வெளியில் சொல்ல முடியாதென்றும்

நான் கூட அதே நிலை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை...

காரின் சத்தமும் அதைத் தொடர்ந்து சில கணங்களில் நுழைவு வாயிலில் கேட் திறக்கும் சத்தமும் திவ்யாவிற்கு நன்றாகக் கேட்டது. வருவது யாரென்றும் அவளின் உள்ளம் உணர்த்தியது.

பவளமல்லித் திட்டில் அமர்ந்திருந்தவளின் கைவிரல்கள் ஒன்றையொன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டன. கால்கள் தரையோடு அழுத்திக் கொண்டன.

மயங்காதே என்றது மனம். எனினும் இரக்கமற்ற இதயம் அவனுக்காக வேகமாகத் துடிக்க, மானங்கெட்ட மனமோ மயங்க முற்பட்டது. கண்கள் அவனைக் காண துடித்துக் கொண்டன.

நெருங்கி வரும் காலடியோசை, இவளின் இதய ஓசையை மத்தளமாய் மாற்றி இசைக்க, கண்களில் குளம் கட்டிய கண்ணீர் இதோ அதோ என‌ நேரம் பார்த்தது கரை உடைக்கத் தயாரானது.

தன்னவன் கால்பாதம் தன் கண்முன் வந்து நின்றது. எனினும் தலை நிமிரவில்லை கன்னியவள். இத்தனை நாட்களாக இருந்த தன்னவனுக்கான ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆவல், பரிதவிப்பு எல்லாம் இன்று முதல் கோபமாக பதவி உயர்வு பெற்று உச்சாணிக் கொம்பேறி நின்றன.

அவனது கோபமெல்லாம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்து போயிற்று, அசோகவன சீதையென தன்னவளின் தனிமை கண்டு... புத்தி பேதலித்து உள்ளம் பதைத்துப் போனது. 

ஆனால் இங்கு விட்டுச் சென்றதே ராமனாயிற்றே. யாருமற்று அவள் அமர்ந்திருந்த கோலம், அவனது நெஞ்சைக் கூறுபோட, அவள் முன் கால் மடக்கி கீழே அமர்ந்தான்.

இந்தத் தனிமை இன்று வாய்த்ததல்லவே! தனக்கானவனுக்கான தேடல் நாட்களில் எல்லாம் தனிமையே இனிமை…. அதே தனிமையே கொடுமை… தனக்கானவனுக்கான காத்திருப்பு நாட்களில்!

இதுநாள் வரை அத்தனை பேர் தன்னைச் சுற்றி இருந்தும்,‌ அவள் ஏங்கியது என்னவோ தன்னவனின் தோள் சாய்ந்து கொண்டு இளைப்பாறத் தானே!

அவனுக்கு எதுவும் நினைவில்‌ இல்லை. அவனவளுக்கோ தன்னவனைத் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை.  கிரகணம் விலகிய சூரியனாய், தனது கோபத்தை விட்டவன், தன்னவளிள் தாமரை முகத்தை, தாடை தொட்டு நிமிர்த்த, இமை பிரியாமல் வீம்பு செய்தது... ‘உன்னைப் பார்க்க மாட்டேன்’ என மிட்டாய் கேட்கும் சிறுபிள்ளையாய்! 

கரைகட்டிய கண்ணீர் கரை உடைக்க... மிளகாய்ப் பழமென மூக்கின் நுனி சிவந்து விடைக்க... துடித்த இதழ்களைக் கடித்து அடக்கினாள். 

மனம் தாளவில்லை தன்னவள் நிலைகண்டு மங்கையின் மணாளனுக்கு. சட்டென்று அவளை இறுக்கி அணைக்க, தொட்டவுடன் உதிரும் மணற்சிற்பமாய், தன்னவன் மார்பில் துவண்டவள், கேவலுடன் வெடித்து அழுதாள்.

பொங்கிச் சிதறினாள். வெகு நாட்களுக்குப் பிறகு... மடிதாங்க பெற்றோரும், தோளணைக்க கொண்டவனும் இல்லை என இத்தனை நாட்களாக அடக்கிய உணர்வுகள், தன்னவன் தொட்டவுடன், இருந்த வீம்பு, வீராப்பு எல்லாம் அவளை கேலிக்குள்ளாக்கி, விடுதலை வாங்கிக் கொண்டது... போராட்டமின்றி!

அவனது சட்டையைப் பற்றிக்கொண்டு, மார்பில் முகம் புதைத்தவளது செய்கை, அவனுக்குள்ளயே புதைந்து விடுபவள் போல் இருக்க, அவனது கண்களில் இருந்தும் கண்ணீர் தன்னவளின், தனக்கான ஏக்கம் கண்டு! அவளது அழுகை அதிகமாக அதிகமாக, அவனது அணைப்பும் இறுகியது, ‘இனி உனை விடமாட்டேன்’ என்பது போல். 

அன்னையைக் கண்ட, விழுந்த குழந்தையென அவளது அழுகை அதிகமாக, தன்னை விட்டுப் பிரித்து நிறுத்தியவன், நொடியும் தாமதிக்காது, இதழணைத்தான் இதமாக… தன்னவளின் தனிமை ஏக்கத்திற்கு மருந்தாக!

சில கணங்களில் மென்மையில் வன்மை கூடியது, தனக்கான ஏக்கத்திற்கும் சேர்த்து... மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாக செய்து தன்னவளை ஆற்றுப்படுத்த, இதழொற்றல் நீண்டது இடைவேளை இல்லாமல்.

முதல் நீ முடிவும் நீ

மூன்று காலம் நீ

கடல் நீ கரையும் நீ

காற்று கூட நீ

மனதோரம் ஒரு காயம்

உன்னை எண்ணாத

நாள் இல்லையே

நானாக நானும் இல்லையே

வழி எங்கும் பல பிம்பம்

அதில் நான் சாய

தோள் இல்லையே

உன் போல யாரும் இல்லையே

தீரா நதி நீதானடி

நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

நீதானடி வானில் மதி

நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

பாதி கானகம்

அதில் காணாமல் போனவன்

ஒரு பாவை கால் தடம்

அதை தேடாமல் தேய்ந்தவன்

தூர தேசத்தில்

தொலைந்தாயோ கண்மணி

உனை தேடி கண்டதும்

என் கண்ணெல்லாம் மின்மினி

பின்னோக்கி காலம் போகும் எனில்

உன் மன்னிப்பை கூறுவேன்

கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்

பிழை எல்லாமே கலைவேன்

நகராத கடிகாரம்

அது போல் நானும் நின்றிருந்தேன்

நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

அழகான அரிதாரம்

வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

நீ கேட்கவே என் பாடலை

உன் ஆசை ராகத்தில் செய்தேன்

உன் புன்னகை பொன் மின்னலை

நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

முதல் நீ… முடிவும் நீ…

பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ! பேசவும் வேண்டுமோ!

‘இந்த நாள் கூடவா நினைவில் இல்லை’ என அவளும் அவன் மீது எவ்வளவுதான் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்தாலும், அவனது கையில் அடங்கியவுடன், அவளது பிரிவாற்றாமை ஆறுதல் தேடியது அவனிடம் தானே.

இரவில் நீண்ட இதழ் முத்தம், பாலைத்தினை கடந்து குறிஞ்சித்தினைக்குத் தாவ முற்பட, அவனுக்கு ஏனோ… ஆறுதல் தேடி நெஞ்சத்தில் சாய்ந்தவளை மஞ்சத்தில் சேர்க்க எண்ணம் வரவில்லை. 

காதலும் மோகமும் போட்டிபோட தன்னவளை ஆளவேண்டும் என எண்ணியவனாக, குமிழ் விட்டு கொதித்த உணர்ச்சிகளை அடக்கியவனாக, அவளை விடுவித்து கன்னம் துடைத்தான் அழுதது போதும் என்று!

அப்பொழுது தான் மலர ஆரம்பித்த பவளமல்லி மனம் பரப்பி உதிர்ந்து வாழ்த்த… அவளை எழுப்பி தோளணைத்துக் கொண்டே உள்ளே‌ அழைத்து சென்றான். 

‘எப்படியும் இவள் சாப்பிட்டு இருக்க மாட்டாள்’ எனத் தெரியும். அடுக்களை சென்று பாலைக் காய்ச்சி எடுத்து வந்தவன் மல்லுக்கட்டி குடிக்க வைத்தான். 

படுக்கையறை சென்று தன் கைவளைவிலேயே அவளை வைத்துக் கொள்ள, தன்னவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,‌ நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியான உறக்கம் கண்களைத் தழுவ நிம்மதியாக உறங்கினாள் கூடுசேர்ந்த பறவையென!

அந்தநொடி வரை இனி இன்னல்கள் தீர்ந்ததென்று ஆசுவாசித்த இரு உள்ளங்களையும் தடம் புரளச் செய்தது அவளின் மூச்சுத் திணறல். சடுதியில் வேக மூச்சுக்களை எடுத்து விட்டவள், தலையை சாய்த்துக் கொள்ளவும் முடியாமல் சட்டென்று எழவும் முடியாமல் அவனது சட்டையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அணத்தத் தொடங்கினாள். பேசவும் வாய் வரவில்லை. கண்களும் இயலாமையில் சொருக ஆரம்பித்து, மூச்சடைத்து மயங்கிப் போனாள்.

நொடியில் அவளுக்குள் ஏற்பட்ட உடல் பின்னடைவைக் கண்டு ஒன்றும் யோசிக்கத் தோன்றாதவனாக, முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தான். சற்றே கண்விழி அசைந்து பயத்தை போக்கியது. உடனே கைகளில் அவளை ஏந்திக் கொண்டு காரில் முன்சீட்டில் பெல்ட் போட்டு அமர வைத்தான்.

“ஒன்னுமில்ல தியா... ரிலாக்ஸ்... ஹாஸ்பிடல் போயிடுவோம்” என்ற பேச்சோடு வேகமாக காரினை கிளப்பிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தடைந்தான்.

தீவிர சிகிச்சை பிரிவில் உடனே அனுமதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவர்களும் அந்த நேரமே அழைக்கப்பட்டனர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை வஞ்சனையில்லாமல் வாங்கும் பணத்திற்கு தக்கவாறு சிக்கிச்சையை துரிதமாக்கி செயல்பட்டது.

திவ்யாவிற்கு ஆக்சிஜன், பல்ஸ் மீட்டர், இசிஜி போன்ற பல கருவிகளை பொருத்தி இயல்பிற்கு கொண்டு வருவதற்கே இரண்டு மணி நேரங்கள் தேவைபட்டன. யாரையும் பார்க்க விடாமல் தீவிர கண்காணிப்பில் அவளின் சிகிச்சை தொடர்ந்தது.

இரவு நேரத்தில் மங்கையர்க்கரசி, சண்முகம் லட்சுமி என பலரும் மருத்துவமனைக்கு வந்து பதறிக் கொண்டிருந்தனர். தேவானந்தனிடம் பலவிதமாக சமாளிப்புகளை கூறி அவரை வீட்டிலேயே இருக்கச் சொன்னான் சத்யானந்தன்.

விஷ்வா அந்த நேரத்தில் வந்து அனைவரையும் பேசி சரிகட்டி நடுநிசி தாண்டிய நேரத்தில் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

‘ஏன்? எதற்கு? எதனால்?’ என்ற கேள்விகளுக்கெல்லாம், ‘அதீத சோர்வு, ஸ்ட்ரெஸ்’ என்ற சுருக்கமாக பதிலளித்து முடித்தனர் மருத்துவர்கள்.

“என்னடா நடந்தது? அன்னைக்கு குடவுன்ல வந்த மூச்சுத்திணறல் இன்னும் சரியாகலையா?” விஷ்வா நண்பனிடம் கேட்க, தெரியவில்லை என கைகளை விரித்தான் சத்யானந்தன்.

“நல்லாத் தான்டா இருந்தா... தோட்டத்துல இருந்து ரூமுல கூட்டிட்டு போயி படுக்க வச்சேன். சாப்பிட்டு இருக்க மாட்டான்னு தான் பால் சூடு பண்ணிக் குடுத்தேன். அவளும் எதுவும் சொல்லாம குடிச்சிட்டு படுத்தா... அடுத்த பத்து நிமிசத்துல தான் எப்டி எப்படியோ பண்ண ஆரம்பிச்சுட்டா... ரொம்ப கஷ்டப்பட்டுட்டா... அவளால பேசக் கூட முடியல” என்றவனின் கண்களில் கண்ணீர் தானாய் வழிந்தது.

“டேய் சத்யா... என்னடா இது? வொரி பண்ணிக்காதே, கமான் மேன்!”

“இல்லடா விஷ்வா... அவளை இப்படி பார்க்க என்னால முடியலடா!” என்று நண்பனின் தோளில் சாய்ந்து கொண்டான் சத்யா.

“எல்லா வேதனையையும் அவளுக்குள்ளயே அழுத்திட்டு இருக்கா போலிருக்கு விஷ்வா... அதான் ஸ்ட்ரெஸ்னு சொல்றாங்க!”

“அதான் எல்லாமே சரியாகிடுச்சே! இந்த நேரத்துல என்னடா ஸ்ட்ரெஸ் வரப் போகுது? சிஸ்டருக்கு வேற எதாவது இஷ்யூ இருக்கான்னு டீடெயிலா செக்கப் பண்ணச் சொல்லு! ஃபாமிலி லைஃப் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எல்லாம் கியூர் பண்ணிக்கிறது தான் பெஸ்ட்னு நினைக்கிறேன்”

“ஆமாடா... நாளைக்கே இதைப்பத்தி கேட்டு வேற அட்வான்ஸ்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயி கூட டிரீட்மென்ட் கண்டினியூ பண்ணலாம்” என்று சத்யாவும் நண்பனின் பேச்சினை ஆமோதித்தவனாக முடிவெடுத்தான்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு மேலே கண்ணை விழித்துப் பார்த்தாள் திவ்யா. லட்சுமி, மங்கையர்க்கரசியைப் பார்த்து சோபையாகச் சிரித்தாள். அருகில் நின்றிருந்த சத்யானந்தனைப் பார்த்தாள். தவிப்பாய் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

“இப்ப எப்படி இருக்கு தியா?” கேட்டவனின் நடுங்கும் குரலே அவன் எந்தளவிற்கு கலங்கிப் போயிருக்கிறான் என்பதைச் சொன்னது.

தனது முகத்தில் இருந்த மாஸ்கை எடுத்து விட்டு, “இப்ப பெட்டரா இருக்கு கண்ணா...” மிக மெதுவாக உள்ளடங்கிய குரலில் பேசும் போதே இருமல் வந்து இம்சித்து மூச்சு வாங்கியது.

பதறிப்போய் அவளுக்கு மீண்டும் மாஸ்கை மாட்டி விட்டான். “ஒன்னும் பேசாத தியா... நீ சிரிக்கிறதுலயே நல்லா இருக்கேன்னு தெரியுது. ஸ்டெயின் பண்ணிக்காதே! கண்ணை மூடித் தூங்கு!” என்று கூறிவிட்டு வெளியில் வந்து விட்டான்.

இரு அன்னையரையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மருத்துவரின் வருகைக்காகவே தவமிருக்க ஆரம்பித்தான்.

“டேய் சத்யா... வீட்டுக்கு போயி குளிச்சு பிரெஷ் ஆகிட்டு வாடா... ஃபர்ஸ்ட் டிபன் சாப்பிடு!” விஷ்வா அழைக்க,

“இல்லடா... டாக்டரை பார்த்துட்டு போறேன்” என்று அடம் பிடிக்க,

“நீ தெம்பா இருந்ததா தானே தம்பி அவளையும் நல்லா பார்த்துக்க முடியும். போ கண்ணா... போயி ஒரு வாய் சாப்பிட்டு வா! அப்புறமா கூட நீ வீட்டுக்கு போகலாம்.” சண்முகம் வலியுறுத்திச் சொல்ல, மனமில்லாமல் நண்பனை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்கு சென்றான்.

தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாய் இட்லியும் உள்ளே இறங்க மறுத்த வேளையில், ஹாஸ்பிடலில் இருந்தே அவனது செல்பேசிக்கு அழைப்பு வந்தது.

“மிசஸ்.திவ்யா பேஷசன்ட் அட்டென்டரா?”

“எஸ்”

“சர்... டாக்டர் வந்துட்டாரு... இன்னும் பத்து நிமிசத்துல நீங்க வந்து அவரைப் பாக்கலாம்.” என்று செய்தி சொல்லி முடிக்க, தட்டை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு மருத்துவரின் அறைக்கு விரைந்தான் சத்யானந்தன்.