Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 35

நினைவு-35

சத்யானந்தனின் மனதிற்குள் குழப்ப வெள்ளோட்டம் சுனாமியாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. என்ன செய்தும் அதன் வேகம் தணிந்த பாடில்லை. ஆயிரமாயிரம் கேள்விகளுடன் அங்கிருந்த அனைவரையும் பார்த்திருந்தான்.

"அப்ப... நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல?"

"..."

"கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்கு மேல அம்னீசியாவால எல்லாத்தையும் நான் மறந்துருக்கேன்?"

"...."

"இவங்க கூடத்தான்... அதுவும் இந்த வீட்ல தான் நான் இருந்திருக்கேன்!"

"...."

"அப்ப தான் இவளை லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போயிருக்கேன்!"

"..."

"இப்படி எல்லோரும் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?" தலையை அழுத்திக் கொண்டே தனது குழப்பத்திற்கெல்லாம் விடை தேடுபவனாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

யாருக்கும் பதில் சொல்லும் தைரியம் இல்லை. அமைதி விடுமுறை கேட்கப் பயந்து அன்றையதினம் ஓவர் டைம் பார்த்தது அங்கு.

இத்தனை நாட்களாகத் தன்னைச் சுழற்றிய சூறாவளியின் திசை அறிந்து, சத்தியப் புயல் மையம் ‌கொண்டிருந்தது திவ்யாவின் வீட்டில்!

சத்யாவின் தாத்தா தேவானந்தன் உட்பட அனைவரும் ஹாலில் கூடி இருக்க, காலைச் சூரியனாய் இருக்கும் அவனது முகம் சித்திரைமாத கத்திரி வெயிலாய்த் தகிக்க, அவளுக்கோ உள்ளுக்குள் மார்கழிப் பனியாய் குளிரெடுத்தது. 

காளையவனுக்கோ இத்தனை நாட்களாகத் தன்னை ஆட்டிப் படைத்த உள்ளக் கிடக்கைகளுக்கு எல்லாம் விடை தெரிந்ததன் விளைவு! கன்னியவளுக்கோ சற்று நாட்களாக உண்மை தெரியும் நாள் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்ததன் நிதர்சனம் கண்முன் நிதர்சனமாகிக் கொண்டிருந்தது.

அனைவரும் சோஃபாவில் இறுக்கமாக அமர்ந்திருக்க, நிமிர்ந்து நின்றவாறு கைகளைக் கட்டிக் கொண்டு, அனைவரிடமும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

லட்சுமியும் மங்கையர்க்கரசியும் தனது இருபுறமும் அமர்ந்திருக்க, தன்னவனின் முகத்தை ஏறிட்டு ஏக்கமாகப் பார்த்தவளை, 'அப்படிப் பார்க்காதே!' என்றது அவனது கண்டனப் பார்வை. 

முன்தினம் திவ்யாவின் பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்தவன், அதிலிருந்த அவர்களது இறப்பு தேதியில் குழம்ப, அவனது கைபேசியோ, ‘அதிகம் யோசிக்காதே! இதோ, இதோ... உனக்கான விடை வந்து கொண்டே இருக்கிறது’ என அவனது சிந்தனைக்குத் தடை விதித்தது.

கைப்பேசியோடு வெளியே வர, அனிச்சையாக பவளமல்லித் திட்டை நோக்கி வந்த அவனது‌ கால்கள் இயல்பாக நடைக்கு தடை விதிக்க, கைபேசியில் அழைப்பை ஏற்றான்.

"சார், நான்‌ நந்தினி பேசுறேன்!"

"சொல்லுங்க நந்தினி... என்ன விஷயம்?"

"சார், குடவுன் லாக்காகிட்டு, திறக்க முடியல!"

"அதுக்கு என்னைய வந்து தொறக்க சொல்றீங்களா?'' காட்டமாய்க் கேட்க, அவளுக்கோ உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொண்டது.

"இல்ல சார்... உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணலாம்னு..." என்று மென்று முழுங்கிக் கொண்டே கூறினாள்.

"சூப்பர்வைசர் எங்கே? அட்டென்டர் எங்கே? இந்த விஷயத்துக்கெல்லாம் எம்.டி.யத்தான் கூப்பிடுவீங்களா?" 

அவனுக்கிருந்த குழப்பத்தில் நந்தினியிடம் எரிந்து விழுந்தான். "இல்ல சார்... ரொம்ப நேரமா ட்ரை பண்றோம். சர்வீஸ்க்கு ஆள் சொல்லி இருக்கு. இன்னும் வரல... உங்களுக்கு தகவல் கொடுக்கலாம்னு தான் கால் பண்ணினேன்."

"அப்புறமென்ன? வந்ததும் கட் பண்ணி எடுக்க சொல்லுங்க... இதெல்லாமா கேப்பீங்க?"

"இல்ல சார்…" என அந்தப்பக்கம் அவள் தயங்க,

"என்ன‌ இழுக்கறீங்க?" இங்கே இவனது எரிச்சலின் டெசிபல் ஏறிக்கொண்டே போனது.‌

"உள்ள திவ்யா போயிருக்கா... கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலயே ஆச்சு சார்!" அவளது குரலிலேயே பதட்டமும் பயமும் ஒருசேரத் தெரிய, குரலும் ஒருவித நடுக்கத்துடன் வெளிவந்தது.

"வாட்! இவ்ளோ நேரம் என்ன பண்ணீங்க?"

"எப்படியாவது திறந்துறலாம்னு... ட்ரை பண்ணோம் சார்!"

"டேமிட்... அவளுக்கு அங்க என்ன வேலை?" பன்மை ஒருமையாகியது உரிமையிலா? பதட்டத்திலா!

அடுத்து சிந்தனை செயலிழந்து நின்றது ஒருநொடி தான். காருக்கு விரைந்தவன் இங்கு எதற்கு வந்தோம்? எவருடன் வந்தோம் என்பதை எல்லாம் மறந்தான். கார் திறந்து ஏறியவன், காரைக் கிளப்பும் சத்தத்தில் தான் விஷ்வாவும் மற்றவர்களும் எட்டிப் பார்த்தனர். 

"இந்த வீட்டுக்கு வந்துட்டுப் போனாலே இவனுக்கு யாரையாவது மறக்கணும் போல... நான் இருக்கேங்கற நினப்பாவது இருக்கா இவனுக்கு?" விஷ்வா புலம்பித் தள்ள,

"என்ன தம்பி நீங்க? ஏற்கனவே நாம‌ பேசுனதுல குழப்பத்துல இருந்தாப்ல... இப்படி சொல்லாம கொள்ளாம போறாப்லன்னா கொஞ்சம் பயமா இருக்கு." சண்முகமும் சற்றே அரண்டு நின்றார்.

"ஆமா விஷ்வா... எனக்கும் கண்ணாவோட அம்மா சொன்னது நினச்சு பயமாத்தான் இருக்கு." லட்சுமியும் தனது அச்சத்தை வெளிப்படுத்த, விஷ்வாவும் சற்று யோசித்தான்.

சற்று நேரத்தில் அதே தகவல் சண்முகம் ஃபோனிற்கும் வந்தது. அவருக்கும் திவ்யாவின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணிய நந்தினி தகவல் தெரிவிக்க, சத்யா அவசரமாகக் கிளம்பியதன் நோக்கம் புரிந்தது.

 ************

அவன் காரின் ஹாரனை ஒலிக்க விட்டதிலேயே அலறியடித்துக் கொண்டு செக்யூரிட்டி கேட்டைத் திறக்க, இறங்கியவன் சாவியை அவரிடம் எரிந்து விட்டு புயலென குடவுன் இருக்கும் பகுதிக்கு விரைய, அங்கே அனைவரும் குழுமி இருந்தனர்.

"இங்க என்ன ஷோ பாத்துட்டா இருக்கீங்க? எல்லாரும் அவங்கவங்க இடத்துக்குப் போங்க!'' அவன் போட்ட அதட்டலில் பேக்கிங் செக்ஷன் ஆட்கள் முதற்கொண்டு அனைவரும் கிளம்ப நந்தினியும், ராகவனும் அங்கு இருந்தனர். 

"இங்க அவளுக்கென்ன வேல? எதுக்கு உள்ள போனா? சீக்கிரம் கட் பண்ணுங்க!" அதட்டியவனைப் பார்த்த நந்தினி திரும்பி ராகவனைப் பார்த்தாள்.

"இல்ல சார்... ஏதோ செக் பண்ணனும்னு லன்ச் ப்ரேக்ல பேசிக்கிட்டு இருந்தா! சாப்பிட்டு முடிக்கவும், நான் போய் பாத்துட்டு வந்துர்றேன்னு வந்தா... நானும் சீட்டுக்குப் போயிட்டேன்." தயங்கியபடியே ராகவனைப் பார்த்தவாறே கூறி முடித்தாள்.

காலை அலுவலகம் வந்த திவ்யா இருந்த மெயில் ஆர்டர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றிரண்டு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இவர்கள் அனைவருமே நெடுங்காலமாக வியாபாரம் செய்பவர்கள். இப்பொழுது ஆர்டரைக் கேன்சல் செய்ததன் காரணம் ஏனென்று புரியவில்லை.

நேரிடையாக அழைப்பு விடுத்து காரணம் கேட்க, அவர்கள் சொன்ன பதில் இவளுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது. அவர்கள் கூறிய காரணம் காலதாமதமான டெலிவரி என்பதுதான். உணவுப் பொருட்களுக்கான எக்ஸ்பயரி டேட் என்பது ஆறு மாதத்திலிருந்து அதிகபட்சம் ஒருவருடம் மட்டுமே!

இப்படி இருக்க சப்ளை செய்வதே ஒருமாத காலப் பக்கம் தாமதமாகச் செய்தால், அதை வைத்து நாங்கள் எவ்வாறு விற்பனை செய்வது எனக் கேட்டிருந்தனர். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 எல்லா மசாலா பாக்கெட்களுமே பேக் செய்தவுடன் டெலிவரி செய்யப்படும். அப்படி இருக்க காலதாமதம் ஏன் என சந்தேகம் எழ, டெலிவரி ஆன தேதிகளை ஆராய, டெவிவரிக்கான ஒப்புதல் இருந்தது. ‘ஆனால் சப்ளை செய்யப்படாமல் எப்படி?’ என யோசித்தாள்.

அப்படியானால் சப்ளை செய்யப்படாத சரக்குகள் குடவுனில் தானே இருக்க வேண்டும். அதே யோசனையில் இருந்தவள், உணவு வேளையின் போது இது பற்றி நந்தினியிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள். 

"திவி... இதப் பத்தி எல்லாம் நீ யோசிக்காத! எனக்கு என்னமோ ராகவன் மேலதான் சந்தேகம். இப்படி லேட்டா சப்ளை பண்றதே கம்பெனி பேரைக் கெடுக்க‌த்தான்." என்று நந்தினியும் தனது கணிப்பைக் கூறினாள்.

போட்டிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ‘உன்னை விடச் சிறப்பாக செய்து உன்னை ஜெயித்துக் காட்டுவேன்’ என்பது ஒருவகை. தரமான எண்ணம். பல‌ புதிய உத்திகளைத் தோற்றுவிக்கும். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையுமே சேர்த்து முன்னுக்கு அழைத்துச் செல்லும்.

‘உன்னைக் கீழே இழுத்து விட்டு உன்னை முந்திக் காட்டுவேன்’ என்பது இரண்டாம் வகை. தரங்கெட்ட வழி. தன்னையும் அதற்கு துணை நிற்பவர்களையுமே சேர்த்து புதைகுழி நோக்கி இழுத்துச் செல்லும் வழி. 

சத்யாவின் போட்டிக் கம்பெனி ஒன்று இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ராகவனை விலை பேசி இருந்தனர். அதற்கான முதல் அடியாகத் தான் சப்ளை செய்வதை தாமதிப்பது.

"ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸ்க்கு கைமாறின பிறகு, எல்லாம் வெளிநாட்டு ஆர்டர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. உள்நாட்டு வியாபாரமெல்லாம் அவங்க கண்டுக்கறது இல்லங்க..." இப்படித் தான் வெளியே பேசும்படி செய்திருக்கிறான் ராகவன்.

இதனால் தான் சில உள்நாட்டு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இதுநாள் வரை தேவானாந்தன் அலுவலகம் வந்து கொண்டிருந்ததால், வயதானவர் அப்படியொன்றும் தோண்டித் துருவமாட்டார் என்று ராகவனும் துணிந்து காரியத்தில் இறங்கினான்.

மதியம் உணவு வேளைக்குப் பிறகு நந்தினியிடம் சொல்லிக் கொண்டு குடவுனிற்குச் சென்றாள் திவ்யா.

"திவி... சத்யா சார் வரவும் அவர்கிட்ட சொல்லிக்கலாம். நீ எதுக்கு தேவையில்லாம மூக்க நுழைக்கற? நம்ம வேலையை மட்டும் பாப்போம்." என்று பலவிதமாய் நந்தினி தடுத்தாலும்,

"நானும் என் வேலையத் தான் பாக்கப் போறேன்!" என்று தோழியிடம் அழுத்தமாய் சொல்லிக் கொண்டு சென்றாள்.

நந்தினியும் தனது இருக்கைக்கு வந்துவிட, வேலையில் கவனமாகியவள் சற்று நேரம் கழித்தே திவ்யாவின் இருக்கையைப் பார்க்க அங்கே அவள் இல்லை.

நந்தினியிடம் கூறிச் சென்றதும் நினைவு வர, எழுந்து குடவுன் இருக்கும் பகுதிக்கு விரைந்தாள். அங்கே ராகவனிடம் விசாரிக்க, "இங்க வரலயே? வந்திருந்தா எனக்குத் தெரியாதா?" என்றான் அசட்டையாக. 

"எங்கிட்ட இங்க வர்றதாத் தான்‌ சொன்னா... நீங்க முதல்ல திறங்க! எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணிறலாம்."

இவளது அவசரம் பார்த்து ராகவனும் திறக்க முயற்சி செய்ய, கதவின் லாக்கிங் சிஸ்டம் மக்கர் பண்ணியது. பிரைவேட் வேர்ஹவுஸ்... பழைய லாக்கிங் சிஸ்டம். 

"ராகவன், உள்ளே ரொம்ப நேரம் இருக்க முடியாது. உங்களுக்கே தெரியும்ல... காரல் நெடி தாங்காது. சீக்கிரமா திறங்க!"

"நான் என்ன பண்றது நந்தினி? மறுபடியும் ஸ்ட்ரக்காகிருச்சு... திறக்கிறது கஷ்டம். அப்படி இப்படின்னு திருகித்தான் திறக்கனும்." என்று மழுப்பினான் ராகவன்.

இதற்காகவே இதை சர்வீஸ் பார்க்காமல் வைத்திருக்கிறான். உள்ளே எவரும் அவ்வளவு சீக்கிரம் போகக் கூடாது என்பதற்காகவும், அப்படியே உள்ளே சென்றாலும் வெகுநேரம் உள்ளே இருக்க முடியாமல் மசாலாக்களின் காரல் நெடியில் வெளியேற வேண்டும் என்பதற்காகவே குடவுனின் ஃப்ரீசர் சிஸ்டத்தை, அவ்வப்பொழுது அணைத்து வைத்தும் விடுவான்.

திவ்யா உள்ளே சென்றதை ராகவனும் கவனித்தான். எதையும் ஆராயாமல் சீக்கிரம் வெளியேற வேண்டும் என எண்ணியவன் ஃப்ரீசரை ஆஃப் செய்து விட்டு பேக்கிங் செக்ஷன் சென்று விட்டான். 

குடவுனிற்குள் சென்றவள் அங்கே கடைசி வரிசை ரேக்குகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் அட்டைப் பெட்டிகளை ஆராய, சென்ற மாதம் தேதி அச்சிடப்பட்ட பார்சல்களும், டெலிவரி செய்யப்படாமல் உள்ளே ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 

'இது ராகவன் மட்டும் தனியே செய்திருக்க முடியாது. யாரெல்லாம் இதுல கூட்டு சேந்திருக்காங்கனு விசாரிக்கச் சொல்லணும்.' என்று எண்ணிக் கொண்டே கதவைத் திறக்க, அவளால் முடியவில்லை.

சீக்கிரம் வெளியே வரட்டும் என எண்ணிக் கொண்டு அவன் செய்ய, ஆனால் அவளோ உள்ளேயே மாட்டிக் கொண்டாள்.

திறக்க முயற்சி செய்ய, முடியாமல் போகவும் நெடி தாக்காமல் இருக்க துப்பட்டாவால் நன்கு மூக்கோடு சேர்த்து கட்டிக் கொண்டாள். குடவுன், தலைமை சூப்பர்வைசர் ராகவனது கண்காணிப்பில் மட்டுமே எப்பொழுதும் இருக்கும். அப்பொழுது தான் ஃபோன்‌ எடுத்து வராததும் அவளுக்கு நினைவுக்கு வர, 'என்ன செய்வது.' என யோசித்துக் கொண்டிருந்தாள்.