Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 49

நினைவு-49

வெளியில் வந்த ராகவனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வேனில் கொண்டு சென்றது ஒரு கூட்டம். திமிறியவனின் முகத்தில் இரண்டு குத்துவிட்டு, மயக்க மருந்து துணி கொண்டு வாயைக் கட்டி வைத்தனர். பின்னர் ஒரு குடவுனில் அடைத்து வைக்கப்பட்டான் ராகவன்.

அதிக நேரமில்லாமல் வெகு சீக்கிரமே அவனுக்கு மயக்கம் மயக்கம் தெளிந்து விட்டது. காரணம் அப்படியொரு மசலா நெடி அவன் மூக்கில் ஏறி தும்மலை வரவழைத்து அவனை தத்தளிக்க வைத்தது. மூச்சுவிட முடியாமல் தொடர் தும்மலில் இருமலும் சேர்ந்து வர, பெரிதாகக் கஷ்டப்படத் தொடங்கினான்.

மூக்கும், கண்களும் கண்ணீரை சுரக்க வைக்க அதை துடைத்துக் கொள்ள முடியவில்லை அவனால்! நாற்காலியின் பின்புறத்தோடு அவன் கைகள் கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். பழக்கமான இடமாகத் தோன்றியது. ஆனால் இருட்டில் சரியாக கண்டறிய முடியவில்லை.

“யாரும் இருக்கீங்களா? காப்பாத்துங்க!” என்ற அவனது ஓலமும் தும்மலில் சிதறி சிதைந்து காணாமல் போனது. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரத்திற்கும் மேல் மூச்சுத் திணறல் அதிகரித்து மூர்ச்சையாகும் சமயம் அந்த அறையின் கதவு திறக்கப்பட்டு வெளியில் தறதறவென இழுத்துச் செல்லப்பட்டான்.

வெளிச்சத்திற்கு வந்தவனின் முகத்தில் தண்ணீரை அடித்து நன்றாகத் தெளிய வைத்தனர். கைக்கட்டை அவிழ்த்து விட்டு குடிக்க தண்ணீரையும் கொடுக்க தேவாமிர்தமாக நினைத்து குடித்தான்.

“ரொம்ப தாங்க்ஸ் ப்ரோ!” திக்கித் திணறி காற்றை உண்டுகொண்டே பேசியவனின் கழுத்தை பிடித்து மீண்டும் அழைத்துச் சென்றனர். முழுக்க முழுக்க பாக்கெட்டுகள் அடங்கிய பெரிய அறையின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டான்.

அந்த அறைக்குள் நுழையும் போதே நன்றாகத் தெரிந்தது அது சத்யானந்தனின் மசாலாக் கம்பெனிக்கு சொந்தமான பார்சல் கட்டும் இடமென்று! என்ன ஏதென்று சுதாரித்து உணரும் முன்பே கீழே விழுந்தவனின் கண் முன்னே ஷூ கால்கள் தெரிய கண்ணை உயர்த்தி மேலே பார்த்தான்.

தேவானந்தன் நிமிர்வாய் நின்றிருந்தார். “எப்படி... எப்படி? ஆனந்தன் குரூப்ஸ பள்ளத்துல தள்ளி விட்டவனாடா நீ? எங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டின மொகரையை நல்லா காட்டேன்... நானும் பாக்குறேன்!” என்றவர் அருகில் நிற்பவனைக் கண்காட்ட அவனால் தூக்கி நிறுத்தப்பட்டான் ராகவன்.

“நான் தொட்டு அடிக்கிறதுக்கும் ஒரு தகுதி வேணும்டா எச்சக்கல நாயே! அது உன்கிட்ட இல்ல... அதுவரைக்கும் நீ தப்பிச்ச... இல்லன்னா என் கையால அடி வாங்கியே செத்துப் போயிருப்ப!” என்று கர்ஜித்தவரின் அருகில் வந்து நின்றான் சத்யானந்தன்.

“எமோசனல் ஆகாதீங்க தாத்தா... நான் இவனை பாத்துக்கறேன்... நீங்க உக்காருங்க!” என்று அங்கிருத்த நாற்காலியில் அவரை அமர வைத்தான்.

பின்னர் ராகவனின் அருகில் வந்து, “என்னடா எங்க டிரீட்மென்ட் எப்படி இருந்துச்சு? மூச்சு திணறி செத்துப் போகப் பார்த்தியே... நல்லா இருந்துச்சா?” என்றபடி முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

தள்ளாடி மீண்டும் கீழே விழ முயன்றவனை அங்கிருந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். “மூச்சுத் திணறியே செத்துப் போ! உனக்கு வேறெந்த தண்டனையும் நான் கொடுக்கறதா இல்ல” என்று பல்லைக் கடித்தவனின் கால்களை பற்றிக் கொண்டான் ராகவன்.

சற்று முன்னர் குடித்த தண்ணீரின் சக்தி கரைந்து போயிருந்தது. மீண்டும் மூச்செடுக்கத் தொடங்கினான்.

“என்னை மன்னிச்சுருங்க பாஸ்... தெரியாம பண்ணிட்டேன்!” என்று கைகூப்பி தொழுதவனை கால்களால் உதைத்தான்.

“கஷ்டமா இருக்கு... மூச்சு முட்டுது பாஸ்! ப்ளீஸ் வெளியே கூட்டிட்டு போங்க!” என்று கெஞ்சியவனைப் பார்க்கவும் பாவமாகத் தான் இருந்தது.

“கெஞ்சாதடா நாயே... இப்படித்தானே என் பொண்டாட்டியும் மூச்சுக்கு தவிச்சிருப்பா... இன்னமும் அது சரியாகாம கஷ்டப்படுறாளே... இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போற?” என்று அவனின் கழுத்தை நெறிக்க, துடிதுடித்து அரற்றினான் ராகவன்.

“தொழில்ல அடிச்சதை கூட நான் சாமளிச்சுடுவேன்டா! ஆனா ஒரு உசுருக்கு உலை வைக்கப் பார்த்தியே... உன்னையெல்லாம் கொன்னாலும் என் ஆத்திரம் தீராது.” என்றவனின் கை முஷ்டி இறுகி முகத்தில் மேலும் இரண்டு குத்துகளை பரிசளித்தது.

“எப்படி? ஒரே ஒரு தடவ உன் ஆசைக்கு இணங்கி இருக்கணுமா? அவ இங்கே வந்து சேரும்போதே என் பொண்டாட்டி ஆகிட்டாடா பன்னாட... அடுத்த வீட்டு பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு ஈசியா போயிட்டாங்களா?” என்று மேலும் பல அடிகளை கொடுத்து விட்டு தாத்தாவிடம் சென்று அமர்ந்தான்.

சற்றே ஆசுவாச மூச்செடுத்த ராகவன், “என்னை அடிச்சு உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்காதீங்க... நானே செஞ்ச தப்பை ஒத்துகிட்டு போலீஸ்ல சரணடைஞ்சுடுறேன்!” என்று மூச்சு வாங்கிக் கொண்டே சொல்ல, பலமாக சிரித்தார் தேவனாந்தன்.

“அதெல்லாம் பழைய பஞ்சாமிர்தமாகி ஊசிப் போச்சுடா... உனக்கு நாங்க வேற டிரீட்மென்ட் வச்சுருக்கோம். நாங்க செய்யாத தப்புக்கு எங்களுக்கு கெட்டபேரு உண்டாக்கி விட்டேல்ல... அதுக்கு சமமா நீயும் அனுபவிக்க வேண்டாமா?” என்று சொல்லி பூடகமாய் சிரித்தார் பெரியவர்.

“என்ன சார் பண்ணப் போறீங்க?” பார்வையில் பயத்தை தேக்கிக் கொண்டு கேட்க,

“இப்பவே சொன்னா சுவாரசியம் போயிடும். இப்பப் போயி நீ ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ! பின்னாடியே உனக்கு காம்ப்ளீமென்ட் அனுப்பி வைக்கிறேன்” சத்யானந்தனின் நக்கலான பதிலில் ராகவனின் சர்வமும் ஒடுங்கிப் போனது.

“டேய்... இவனை ஹாஸ்பிடல்ல தூக்கிப் போட்டுட்டு வந்துடுங்க! மத்ததுக்கு வேற ஆள் வந்துடும்” என்று அவனை அப்புறப்படுத்த வைத்தான் சத்யா.

“சார்... சார், என்னை என்ன பண்ணப் போறீங்கனு சொல்லுங்க சார்! வலி தாங்கமாட்டேன் சார்! நான் இனிமே இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டேன், என்னை மன்னிச்சு விட்ருங்க! உங்களுக்கு நான் செஞ்ச துரோகத்தை சொல்லி சரணடையுறேன்!” என்று கெஞ்சாத குறையாக அழ ஆரம்பித்தான். அதற்குள் மூச்சு முட்டி பெரும் அவஸ்தையை அனுபவித்தான்.

“இதெல்லாம் பழைய கதைடா பக்கிப் பயலே... உன்னைத் தேடி சுடச்சுட புதுசா ஃபிரெஷா பெரிய கேஸ் ஒன்னு வந்துட்டு  இருக்கு. முடிஞ்சா அதுல இருந்து வெளியே வந்துக்கோ! இல்லன்னா வட்டியும் முதலுமா அனுபவி! இப்ப இடத்தை காலி பண்ணு!” சத்யாவின் ஒவ்வொரு சொல்லும் ராகவனிற்குள் பெரும் கலக்கத்தை உண்டாக்கியது.

“ஹாஸ்பிடல்ல அடிக்கு காரணம் கேட்டா என்ன சொல்றது? என்று மூளை கலங்கியவனாக சத்யாவிடமே யோசனை கேட்டான் ராகவன்.

“நான் கூட்டிட்டு போயி அடிச்சேன்னு சொல்லேன்டா பரதேசி!”

“ஏன் பாஸ்? அதுக்குன்னு தனியா இன்னொரு நாள் வச்சு செய்வீங்க! அதெல்லாம் தேவையா எனக்கு?” பாவமாக கூறியதும் இளக்காரமாய் பார்த்தார் தேவானந்தன்.

“உனக்கு என்ன தோணுதோ சொல்லிக்கோ! நீ எங்க மேலே கம்ப்ளைன்ட் பண்ணினாலும் வெளியே வரதுக்கு எங்களுக்கு தெரியும்டா நாயே! வீணா பேச்சை வளக்கமா உசிரை காப்பாத்திக்கப் பாரு! என்று காறித்துப்பாத குறையாக அவனை அனுப்பி வைத்தார் பெரியவர்.  

“ஆனாலும் எனக்கு சின்ன வருத்தம் பேராண்டி!” என்று குறைபட்டார் தேவானந்தன்

“என்ன தாத்தா?”

“நீ இப்படியெல்லாம் பிளான் பண்ணினதை என்கிட்டே சொல்லமா ஏன் மறைச்சே? நான் வேற உன்னை கொஞ்சம் அதிகமாவே கரிச்சு கொட்டிட்டேன்!”

“அது பரவாயில்ல தாத்தா... அப்படி சொல்லாம செஞ்சதால தான் என்னால ஃப்ரீயா மூவ் பண்ணி கரெக்டா அவனை கவுக்க முடிஞ்சது”

“முள்ளை முள்ளால எடுக்கிற வித்தையை நல்லாவே யூஸ் பண்ணியிருக்க... ஆனாலும் நீ அவனை சும்மா விட்ருக்க கூடாது. என் பேத்தியை எப்படியெல்லாம் நினைச்சு பார்த்திருக்கான்... அவன் மூளை கலங்கி சாக வேணாமா?” என பல்லைக் கடித்தார்.

“எனக்கும் அந்த கோபம் இருக்கத்தானே செய்யுது. அதனால தான் திவ்யா அனுபவிச்ச வேதனை கொஞ்சம் கூட மாறாம அவனுக்கு திருப்பி கொடுத்துட்டேன். இதுக்கு மேல போன உசிருக்கு உத்திரவாதமில்லாம போயிடும். இவன் தண்ணி பார்ட்டி வேற... உடனே அமுக்கிடும். அதான் இனி இருக்கிற காலம் வரைக்கும் ஜெயில்ல களி திங்கட்டும்னு ஏற்பாடு பண்ணிட்டேன்!” என்று விலாவரியாக சொன்னவனை தோள்தட்டி மெச்சிக் கொண்டார்.

“ரௌத்திரம் பழகுன்னு சொல்றது இதுக்குதான்! எந்த இடத்திலும் யாருக்கும் பாதகமில்லமா பழி தீர்த்து முடிச்சுக்கணும். அவமானத்தையும் தோல்வியையும் சேகரிச்சு வைச்சா நம்ம மனசுதான் செல்லரிச்சு வீணா போயிடும். எல்லாத்தையம் தூக்கி கடாசிட்டு என் பேத்தி கூட நிம்மதியா வாழப் பாரு! இனிமேட்டு உங்களுக்கு நல்ல காலம் தான்” என்று கூறியவறை அணைத்துக் கொண்டு கண் கலங்கினான் சத்யானந்தன்.

மனைவியின் ஆரோக்கியம் இன்னும் சரிவராமல் போக்கு காட்டுகிறது என்பது இவன் மட்டுமே அறிந்த ரகசியம். திருமணம் முடிந்த இந்த நான்கு மாதத்தில் அவளுக்குள் பல இன்னல்கள். மூச்சுமுட்டிப் போகும் தருணங்களில் எல்லாம் அறைக்குள் முடங்கி யாருக்கும் தெரியாமல் தன்னை சரி செய்து கொள்கிறாள் என்பதை இவன் நன்றாககவே அறிவான்.

அந்த நேரங்களில் இவனும் தாயாய் தாங்கிக்கொண்டு அவளை அரவணைத்துக் கொள்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தன்னால் கணவனுக்கு உற்ற மனைவியாக நடந்து கொள்ள முடியவில்லையே என்ற குற்ற உணர்வுடன் அவள் தவிக்கும் தவிப்பினைத் தான் எப்படி சரி செய்வதென புரியவில்லை.

“இதையே நினைச்சுட்டு இருக்காதே தியா... உன்னோட ஹெல்த்க்கு இது கூட பெரிய டிராபேக் தான். கிளியர் மைன்ட் அன்ட் ரிலாக்ஸ் யுவர்செல்ப்! எல்லாம் தன்னால சரியாகும்” என்று எத்தனையோ முறை சொல்லியும் பார்த்து விட்டான். அவள்தான் ஏற்றுக் கொள்வதில்லை.

“எனக்கு சரியாகலைன்னா என்ன பண்ணுவீங்க கண்ணா? நம்ம ஃபியூச்சர் எப்படி இருக்கும்?” என்று நம்பிக்கையற்ற வார்த்தையில் அவனையும் சேர்த்து வதைப்பாள்.

“கற்பனை கொடிகட்டிப் பறக்குதடி உனக்கு!”

“பேச்சை மாத்தாதீங்க... பதில் சொல்லுங்க!”

“உன்னோட நினைப்புக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது தியா... போயி தூங்கு!”

“ஒருவேளை ரெண்டாம் கல்யாணம் பண்ணிப்பீங்களா? அத்தை பேரன் பேத்தி வேணும்னு எதிர்பார்ப்பாங்களே... அதுக்காகவாவது நீங்க ஒத்துக்கத் தானே வேணும்” என்றவளை கொன்று போடும் ஆத்திரம் வந்தது.

“கழுத்து நெரிச்சு கொன்னு போட்ருவேன்டி! உன்னோட பைத்தியக்கார சிந்தனைக்கு எல்லாம் என்னால பதில் முடியாதுன்னா முடியாது தான்! வீணா என்கிட்ட வாங்கிக் கட்டிக்காம ஒழுங்கா தூங்கு! வேற ஏதாவது முடிவை மனசுல நினைச்சேன்னு வச்சுக்கோ... உன்னை போட்டுத் தள்ற மொத ஆள் நானாத் தான் இருப்பேன். இதை ஞாபகத்துல வச்சுட்டு எதை வேணும்னாலும் யோசி!” என்று மிரட்டலுடன் அவளை பயமுறுத்தியே வழிக்கு கொண்டு வந்தான்.  

அவனது மனதிலும் ஆசை றெக்கை கட்டிப் பறக்கின்றது தான்... மனைவியுடன் சுகத்திருக்கும் நன்னாளை நினைத்து பலவிதமாய் ஏங்கித் தவிக்கிறான் தான். ஆனாலும் தனது காதலில், அவள் மீதான அக்கறையில் மனதை அலைபாய விடாது நிலையாய் நின்று விட்டான். திவ்யா இல்லாத இடத்தில் தன்னால் ஒருநிமிடம் கூட வாழ முடியாது என்ற முடிவிற்கு வந்து வெகு நாட்களாகி விட்டது.

உணர்விற்கும் உணர்ச்சிக்கும் சமன் செய்ய இயலாது அவள் மூச்சு முட்டிப் போகிறாள் என்றால், இவனோ அவள் மீதான காதலில் மூச்சடைத்து நிற்கிறான்.

 

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிரெண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரெண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் உன்னை நான்
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான்                              

ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது...