Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 48

நினைவு-48

“உங்களைத் தான் மலை போல நம்பி வந்திருக்கேன் ராகவன். முடியாதுன்னு மட்டும் தட்டி கழிச்சுடாதீங்க... ப்ளீஸ்!” எதிரில் அமர்ந்திருந்தவன் பாவமாய் கூற கர்வமாய் சிரித்தான் ராகவன்.

“கொஞ்சம் விட்டா இந்த விஷயத்துக்கு என்னை தவிர வேற ஆளே இல்லன்னு சொல்லிடுவீங்க போலிருக்கு. இதுக்கெல்லாம் ஸ்பெசலிஸ்ட்னு என்னை முத்திரை குத்திடாதீங்க ப்ரோ!” என்று சிலாகிப்புடன் சிரித்தபடி ராகவன் கூறினான்.

“வொய் நாட் ப்ரோ? எங்கே எப்படின்னு எந்த ஆதாரமும் இல்லாம ஒரு பெரிய கம்பெனியோட அஸ்திவாரத்தையே பள்ளத்துல தள்ளி இருக்கீங்களே... அது போதாதா, உங்க திறமையை சொல்ல... அதை நம்பித்தானே நானும் உங்களைத் தேடி வந்தேன்” என்று ஐஸ் மழையில் ராகவனை நனைய வைக்க, மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவனும் தலையாட்டத் தொடங்கினான்.

“நம்ம வேலை அப்படி கேசவ்... எல்லாத்துலயும் கிளியர் கட்டா இருக்கும். எங்கேயும் குழப்படி இருக்காது” என்று பெருமை பீற்றிக் கொண்டான் ராகவன்.

“இதுதான் சார் கம்பெனி பேர்... இன்னும் பத்து நாள்ல இந்தக் கம்பெனி பேரும் புராடக்டும் சந்தி சிரிக்கிற மாதிரி வேலையை முடிக்கணும்” என்று புதியவனான கேசவ் அவனிடம் ஒரு ஃபைலை நீட்டி இன்னும் பல விளக்கங்களை அளித்தான்.

‘ராகா ஃபுட் புராடக்ட்ஸ்’ என்ற பெயர், லோகோவுடன் அந்த லெட்டர் பேடில் இருக்க, அதன் தயாரிப்புகள் கீழே பட்டியலிடப்பட்டு இருந்தன.

“மிஸ்டர்.கேசவ்... இந்த புராடக்ஸ் நான் மார்க்கெட்ல பார்த்ததே இல்லையே... அவ்வளவு ஆஹாஒஹோன்னு யாரும் பேசிக்கிட்டதா கூட நான் கேள்விப்படலையே?” ராகவன் சந்தேகத்துடன் கேட்க, கேசவ் சிரித்து மழுப்பினான்.

“இன்னும் தமிழ்நாட்டுல இந்த தயாரிப்பு எல்லாம் இறக்கல... பிரான்ஸ் ஆபீஸ் இன்னும் லான்ஸ் பண்ணல சார்... ஆனா விசாகப்பட்டினம் கொல்கத்தா சைட்ல எல்லாம் இதுதான் டாப் மோஸ்ட் பிராண்ட். இன்னும் மூனு மாசத்துல தமிழ்நாட்டுக்கு படையெடுக்கப் போகுது இந்த வடக்கன்ஸ் குருப்ஸ்...”

“சோ வாட்?”

“அப்படியில்ல ராகவன்... அவங்க ஃபீல்ட்ல இறங்கி அடிக்கிற ரகம். அதுக்காகத் தான் அவங்க வர்றதுக்கு முன்னாடியே அவங்க புராடக்ட்ஸ் எல்லாம் இப்படிதான்னு நாம பொய்யா கதை கட்டிவிட்டுட்டா... அதை மாத்தவே அவங்க ரொம்ப மெனக்கெடனும். அந்தளவுக்கு பொறுமையெல்லாம் அந்த பான்பராக் வாலாக்களுக்கு இருக்காது. இந்த மார்க்கெட் இல்லன்னா அடுத்த மார்க்கெட்டை பிடிப்போம்னு பிளான் பண்ணி உடனே பக்கத்து ஸ்டேட்க்கு தாவிடுவானுங்க. அதான் அவங்க வர்றதுக்கு முன்னாலேயே அவங்களை கவுக்க பிளான் பண்றேன்” நீளமாய் விளக்கம் கொடுத்து நம்ப வைத்தான் கேசவன்.

“இதனால உங்களுக்கு என்ன லாபம் கேசவ்?”

“நான் ஒரு மீடியேட்டர், ராகவன்... மூனு கம்பெனி சேர்ந்து என்னை உங்ககிட்ட இந்த காரியத்துக்காக அனுப்பியிருக்கு. கம்பெனி நேம்ஸ் சீக்ரெட், சொல்லப்படாது.”

“ரொம்ப நல்லாவே பிளான் பண்றீங்க... இந்த வியாபார உலகத்துல எப்படியெல்லாம் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கு. நல்லவேள நானும் இப்படியொரு பிசினெஸ் ஆரம்பிக்கலாம்னு நினச்சேன் ஆனா உடனே மாத்திக்கிட்டேன்.”

“ஏன் ராகவன்?”

“பின்ன என்ன கேசவ்? உசிரை கொடுத்து மார்க்கெட்டிங் புரமோஷன் பண்ணி தூக்கி நிறுத்துற வியாபாரம், பேரெல்லாம் மீடியால ரெண்டு மூனு வீடியோ கமெண்ட்ஸ் போட்டு ஈசியா மண்ணைக் கவ்வ வைக்க முடியுது. என்ன மூலதனம் போட்டு என்ன பிரயோசனம்? நம்புறவன் மூளையோட இருந்தான்னா நாமா தில்லா நிக்கலாம். இல்லன்னா கோவணத்தை கூட விட்டு வைக்காம விரட்டி அடிச்சுருவாங்க இந்த மடப்பசங்க!” என்று பொதுமக்களை மிகக் கேவலமாக பேசி சிரித்தான் ராகவன்.

“இத்தனை அரசியல் தெரிஞ்சும் தொழில் ஆரம்பிச்சு நஷ்டப்பட்டு கெட்ட பேரெடுக்க நான் என்ன கிறுக்கனா? வருஷத்துக்கு இந்த மாதிரி ஒரு மூனு கம்பெனியோட பேரை ரிப்பேராக்கி விட்டா மூலதனமே இல்லமா சுளையா லாபம் மட்டுமே சம்பாதிக்கலாம். மூளை வேலை பாக்கிறது மட்டும்தான் என்னோட மூலதனமே!” என்று கேசவனின் தோள் தட்டிச் சிரிக்க அதைப் புரிந்து கொண்டதன் அடையாளமாக கேசவனும் ஹைஃபை கொடுத்து சிரித்தான்.

கேசவன் சொன்னபடியே ராகா தயாரிப்புகள் அனைத்தும் ராகவனிடத்தில் ஒப்படைக்கப்பட்டு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டது. அடுத்து அந்த பாக்கெட்டுகள் எல்லாம் ஆட்களை கொண்டு தினச்சந்தை நடக்கும் இடங்களில் இலவசமாக விநியோகிக்கப் பட்டன.

கேட்பவர்களுக்கு எல்லாம் மசாலா பாக்கெட்டுகள் வாரிக் கொடுக்கப்பட்டு அதற்கு சாட்சியாக, இலவச ராகா பாக்கெட்டுகளோடு அவர்கள் நிற்கும் ஒரு புகைப்படமும் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் சோஷியல் மீடியா, டிவி சேனல்ஸ், யூ டியூப் என வலம் வரத் தொடங்கியது.

முதல் ஒருவாரம் ஆஹோஓஹோ என்று வாங்கிச் சென்ற நபர்கள் எல்லாம் காறித் துப்பாத குறையாக ராகா தயாரிப்புகளை பற்றி வெகு மட்டமாக கருத்து தெரிவித்தனர்.

‘நிறம், சுவை, மணம் ஏதுமற்ற சுண்ணாம்புப் பவுடர்’ என்று சிலரும், “சாணியை காயவைச்சு அரைச்சு பொடி பண்ணிக் கொடுத்திருக்கான்” என்று சிலரும், “இந்த களிமண்ண ஃப்ரியா கொடுக்கிறதுக்கு பதிலா மண்ணை தோண்டி புதைச்சிருக்கலாம்” என்றும் பலவாறு தூற்றினர்.

“கடல்ல கலந்தா கூட பாவம் வந்து சேரும்... அதுல இருக்கிற மீனெல்லாம் செத்துப் போயி அந்த பாவத்தை சுமக்க வேண்டி வரும்” ஒரு கட்டத்தில் அதீத வெறுப்போடு அதை வீசியெறிந்தனர்.

இவற்றையெல்லாம் கேட்ட ராகவனுக்கு பரமதிருப்தி... ஆனந்தன் குருப்ஸ் கம்பெனியை பள்ளத்தில் தள்ளிய ஒரு மாதத்திற்குள் அடுத்த கம்பெனிக்கும் உலைவைத்து கெட்டபெயரை உண்டாக்கியதை தனது வாழ்நாள் சாதனையாகவே நினைத்தான் அந்த நயவஞ்சகன்.

“பேசாம இதையே நம்ம ஃபுல் டைம் ஜாப்பா எடுத்து பண்ணலாம் போலயே... நேர்மையா முன்னேறனும்னு பத்து பேரு இருந்தா, அவனை அடிச்சு கீழே தள்ளனும்னு இருபது பேர் சுத்திட்டு இருக்கான். அந்த இருபது சோம்பேறிகளை வலைபோட்டு பிடிச்சா போதும். நம்ம காட்டுல அடைமழை கொட்டும்” தனக்குள் பலவித கணக்குகளை போட்டு லாபம் பார்த்தவனாக கேசவனை எதிர்நோக்கி காத்திருக்கத் தொடங்கினான்.

இந்த காரியத்தை செய்து முடிப்பதற்காக பெரியதொகையை பேசி முடித்து பாதி பணம் மட்டுமே அட்வான்சாக வாங்கியிருந்தான். அதை எல்லாம் சந்தையில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யக் கொடுத்த ஆட்களுக்கு சம்பளமாக கொடுத்தாகி விட்டது. ஆர்வக்கோளாறில் தனது பணத்தையும் சம்பளமாகக் கொடுத்து வேலையாட்களுக்கு கணக்கினை முடித்திருந்தான்.

இனி கேசவன் வந்து கொடுக்கும் பணம் தான் அவனுக்குரிய லாபக் கணக்கில் சேரும். அனைத்தையும் சரியாக கணித்து காய்களை நகர்த்தியவன் ஒரே ஒரு இடத்தில் கோட்டை விட்டிருந்தான். அதுவே பெரிய ஓட்டையாக மாறி அவனை வகையாக சட்டத்தின் முன் சிக்க வைத்தது.

வருகிறேன் என சொல்லிச் சென்ற கேசவ் இரண்டு வாரமாகியும் வந்தபாடில்லை. அவனது மொபைலுக்கு அழைத்துப் பார்த்தாலும் அவன் எடுக்கவில்லை. மேலும் இரண்டு நாட்கள் கழித்து அது ஸ்விட்ஸ் ஆஃப் என்று வந்து விட, பொறுமை பறந்து போனது ராகவனுக்கு!

“ஒரே சமயத்துல நூறு பேருக்கு தண்ணி காட்டுறவன் நான். என்கிட்டேயே நீ விளையாடுறியா?” என்று வெகுண்டவனாக அவனது நம்பரை டிரேஸ் செய்து அவன் இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்.

நேரில் சென்று அவனை தேடித் பிடித்தான். “சிரிக்க சிரிக்க பேசும்போதே நினைச்சேன், நீ சரியான பச்சோந்தின்னு... உன் வேலையை என்கிட்டே காட்டுறியா? ஒழுங்கா பணத்தை எடுடா... இல்லன்னா போலீசுக்கு போக வேண்டி வரும்” என்று கேசவின் சட்டையை பிடித்து உலுக்கினான்.

ராகவனின் கோபமும் பேச்சும் எதிராளிக்கு சிரிப்பையே வரவழைத்தது. பின்னே... பொய் பித்தலாட்டம் அவனே செய்து விட்டு, காவல்துறைக்கும் செல்வேன் என்று பயங்காட்டுபவனை எந்த வகையில் சேர்ப்பது? வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றான் கேசவன்.

“என்னடா நக்கல் பண்றியா? என்னைப் பத்தி தெரியாது உனக்கு... ஒழுங்கா மன்னிப்பு கேட்டு எனக்கு பேசின பணத்தை கொடுத்துடு!” என்று மிரட்டினான் ராகவன்.

அப்போதும் சிரித்துக் கொண்டே, “கொடுக்கலன்னா என்ன பண்ணுவ? போலீசுக்கு போவியா? போயேன்... போயித் தான் பாரேன்! நானே உனக்கு எதிரா சாட்சி சொல்ல வர்றேன்” என்று எகத்தாளமாய் பேசி தோள் குலுக்கினான் கேசவ்.

“என்னடா விளையாடுறியா? நீ சொன்னதை நம்பித்தானே நான் காரியத்துல இறங்கினேன். நீ கொடுத்த பாக்கெட்டு எல்லாம் இன்னும் மூட்டை மூட்டையா என் வீட்டுல தான் பதுக்கி வச்சுருக்கேன். மிச்ச பணத்தை வாங்கின பிறகு தான் அதை எல்லாம் மார்க்கெட்டுல விடனும். இப்ப என்ன சொல்ற?” என்று மீண்டும் மிரட்டலாக கேட்க அசரவே இல்லை கேசவன்.

“நீ வீட்டுல வச்சுப்பியோ... ரோட்டுல கொட்டுவியோ! அது உன்னிஷ்டம். ஏன்னா அதை நான் உனக்கு கொடுத்துட்டேன் இனி அது உன் பிராபர்டி!”

“கருமம்... அதை வச்சு நான் என்னடா செய்யப் போறேன்? சுவத்துக்கு சுண்ணாம்பா கூட பூச முடியாது. ஒழுங்கா எனக்கு பேசுன பணத்தை கொடு! இல்லன்னா அந்த ராகா கம்பெனிக்காரங்களை தேடித் போயி உன் குள்ளநரித்தனத்தை போட்டு உடைச்சிடுவேன்!”

“ஒஹ்... நீ அவ்வளவு பெரிய ஆளா? என்னை எந்த கம்பெனிக்காரன்னு சொல்வ?”

“அதை கண்டுபிடிக்கிறது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான வேலையில்ல... என்னை என்னன்னு நினைச்சே? ஆனானப்பட்ட அந்த ஆனந்தன் குரூப்ஸ் கம்பெனியையே கண்ணுல விரலை விட்டு ஆட்டி வச்சவன்டா நானு! எல்லா மசாலாப் பொடியிலயும் பேக்கிங் பண்றதுக்கு முன்னாடியே கலப்படம் பண்ணி, அதை சரியில்லனு பேச ஆளுங்களையும் செட்டப் பண்ணி, வீடியோ எடுக்க தனியா ஆளுங்களை போட்டு என்னெவெல்லாம் செஞ்சு அவங்களை கவுத்தேன்னு உனக்கு தெரியாது. நீயெல்லாம் என் அளவுக்கு வரணும்னா இன்னும் வளரனும் தம்பி... விதண்டாவாதம் பேசாம என் கணக்கை நேர் பண்ணு!” என்று எகத்தாளம் குறையாமல் பேசினான் ராகவன்.

“செஞ்சது நம்பிக்கை துரோகம், அதுக்கு பெருமை பீத்தல் வேறயா உனக்கு?”

“என்னடா நம்பிக்கை... தும்பிக்கைன்னுட்டு... முதலாளியா வந்தவன் சும்மா இருந்திருக்கணும். அதை விட்டுட்டு நான் ஆசைப்பட்ட பொண்ணை அவன் லவட்டிட்டு போயிட்டா அதை பார்த்துட்டு சும்மா இருப்பேனா? அந்த சிங்காரியும் என்னமோ காணாததைக் கண்டவ மாதிரி ஒரே நாள்ல கல்யணம் பண்ணி அவனோட போயிட்டா... ஒரு தடவை ஒரேஒரு தடவ என் ஆசைக்கு அவ இணங்கி வந்திருந்தான்னா நான் இந்தளவுக்கு அந்த சத்யாவை இறங்கி அடிச்சுருக்க மாட்டேன். எல்லாம் அந்தப் பொண்ணால வந்தது.”

“ஆவதும் பெண்ணால... மனுஷன் அழிவதும் பெண்ணாலேன்னு சொல்லாம நிருபிச்சுட்டேன்னு சொல்லு!”

“பேச்சை மாத்தாதே கேசவ்... பணத்தை வை, நான் போயிகிட்டே இருக்கேன்.”

“அவசரப்படாதே ப்ரோ... நீயும் நானும் ஒரே ஜாதி... நாம பகைச்சுட்டு முட்டிகிறதை விட, சுமூகமா பேசி ஃபைசல் பண்ணிப்போம்” என்று புதியதாய் ஒரு தூண்டில் போட்டான் கேசவ்.

“ம்ப்ச்... இதைப்பாரு உன்கிட்ட டீலிங் சரியில்ல... சொன்னா சொன்னபடி நடந்துக்கணும். அதுதான் மனுஷனுக்கு அழகு. நான் உன் மேல வச்ச நம்பிக்கைய நீ சிதைச்சுட்ட... இதுக்கு மேலே நாம ஒட்டி உறவாட வேணாம். கணக்கை முடி!” என்று பிடிகொடுக்காமல் பேசினான் ராகவன்.

“ஒஹ்... நீ செய்ற வேலைக்கு நம்பிக்கை ஒரு கேடா? அதே மாதிரி தானே உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைச்சுருபாங்கள்ல... அவங்களை நீ நம்ப வச்சு கழுத்தறுத்தியே! அதை எந்த கணக்குல சேர்க்கிறது? நீ செஞ்ச தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிக்க வேணாமா? இன்னும் எத்தன நாள்தான் நீ சுதந்திரமா நடமாடிட்டு இருக்கப் போற...” கேசவ் பேசிய விதமே ஏதோ சரியில்லை என்று உணர்த்த வேகமாக, அங்கிருந்து தப்பித்து ஓடத் தொடங்கினான் ராகவன்.