Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 38

நினைவு-38

சத்யானந்தனின் வீடு... உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் வளர்ச்சியை செல்வாக்கை பறைசாற்ற, அவர்களது கண்களில் சிறிது மிரட்சி எட்டிப் பார்த்தது. 

"வாங்கப்பா! யாரப் பாக்கணும்?" வீட்டுக்குள் வந்தவர்களை மங்கையர்க்கரசி வரவேற்க,

"ம்மா… வந்தவங்களுக்கும் டிஃபன் ரெடி பண்ணச் சொல்லுங்கம்மா!" சொல்லிக் கொண்டே, சட்டையின் முழுக் கைப் பகுதியை நீட்டி பட்டனைப் போட்டவாறே படிகளில் இறங்கி வந்தான் சத்யா. 

இரண்டு நாட்களாக சரியாக முகம் கொடுத்துப் பேசாத மகன் இன்று பேசியதில் ஆனந்தம் அந்த தாய்க்கு. அதே சந்தோஷத்தோடு வந்தவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்க ஆரம்பித்தார்.

வந்திருந்த நான்கு பேருக்கும் கிட்டத்தட்ட சத்யாவின் வயதுதான். சற்றே முன்னபின்ன இருக்கும். அதிக வித்தியாசம் இருக்காது.

"எதுவும் வேண்டாம்‌." என்றனர் சங்கோஜமாக. 

"உக்காருங்க! ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க? இதுவும் உங்களுக்கு அத்தை வீடுதான்." அவர்களை உபசரித்தவாறே, அவர்கள் முன்னே வந்து நின்றவனைப் பார்த்து ஆச்சர்யம் அவர்களுக்கு.

சத்யாவை ஒன்றிரண்டு முறை தான் பார்த்திருப்பார்கள். அன்றைக்கு அவர்கள் பார்த்தவனுக்கும், இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

பிளாக்கலர் ஜீன்சும், ஆலிவ் க்ரீன் ஃபுல்ஹேன்ட் சார்ட்டும் அணிந்து, ‘ஆம்பளை எதுக்கு இவ்வளவு கலரா இருக்கனும்!’ என ஆண்கள் பொறாமைப்பட,

‘உன் கலர்ல எனக்கும் கொஞ்சம் வந்திருக்கலாம்’ என பெண்கள் ஏக்கப்பட, ஷேவ் செய்த கன்னத்தில் பச்சை படிந்திருக்க, ஜெல்லின் உபயத்தால் படியவைக்கப் பெற்றும், முடிந்தால், ‘என்னை அடக்கிப்பார்’ என்று சிலிப்பிக் கொண்ட அலையடித்த கேசம் என தங்கள் முன் ஆறடிக்கும் மிஞ்சி நிமிர்ந்து நின்றவனைப் பார்த்தவர்களுக்கு,

‘இவனா? அவன்!’ என்ற சந்தேகம் எழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

"யாருப்பா இவங்க?" என்ற தாயின் கேள்விக்கு,

"என் தாய்மாமன் மகனுங்க ம்மா இவங்க எல்லாரும்!" என்று புன்னகை முகமாக பதிலளித்தான்.

"எனக்குத் தெரியாம, யாருடா அது! உனக்குத் தாய்மாமன்?"

"அரசி! நீ மட்டும் அவனுக்கு அம்மா இல்ல... லட்சுமியும் அம்மாங்கறத மறந்துட்ட...." சொல்லிக்கொண்டே தேவானந்தனும் வர,

"ஓ…! லட்சுமியோட அண்ணன் புள்ளைகளா? வாங்கப்பா!" என மீண்டும் வரவேற்றார்.

"ஆமாம்மா!" என்றவன், அவர்களை தனித்தனியாக அறிமுகப்படுத்தி வைக்க, எல்லாரும் ஒன்று போல “வணக்கங்க அத்தை!” என்று கும்பிடு போட்டனர்.

"முதல்ல வாங்க சாப்பிடலாம்.... அப்பறமா பேசிக்கலாம்." என அவர்களை சத்யா அழைக்க, அவர்கள் தயங்கி நின்றனர்.

"அட வாங்கப்பா! இங்க எதுக்கு கூச்சம். சாப்பிட்டு சாவகாசமா பேசலாம்." என வலுக்கட்டாயமாக சாப்பாட்டு மேஜைக்கு அழைத்து சென்றார் தேவானந்தன்.

பெரியவர் சொல்லை மறுக்க முடியாமல் அவர்களும் செல்ல பார்த்துப் பார்த்து சத்யாவே அவர்களுக்கு வேண்டியவற்றை பரிமாறி கவனித்தான்.

"நீயும் உக்காரு சத்யா! நான் பாத்துக்கறேன்" என்று மங்கையர்க்கரசி கூற அனைவரும் சேர்ந்து காலை உணவை முடித்தனர்.

உணவு முடித்து கை கழுவி வந்தவர்களுக்கு துண்டை எடுத்து கொடுத்தான். இவன் இத்தனைக்கும் கீழிறங்கி வர வேண்டியதில்லை. ஆனாலும் வந்திருந்த விருந்தினர்களை வீட்டு மனிதனாக மிக நல்ல முறையில் கவனித்தான். அனைவரும் வந்து சோஃபாவில் அமர, சற்று நேரம் அவர்கள் ஆசுவாசப்பட தாமதித்த சத்யானந்தன், "சொல்லுங்க! லட்சுமி அம்மா கூட உங்களுக்கு என்ன பிரச்சனை?" நேரிடையாகவே விஷயத்திற்கு வந்தான்.

சதீஷ் கூறியதை வைத்து லட்சுமி அம்மாவிற்கு, அவரது அண்ணன்‌ குடும்பத்தோடு இருக்கும் பிணக்கை அறிந்தவன், மறுநாளே அதைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தான்.

அவன் விசாரித்த வரையிலும் லட்சுமியின்‌ அண்ணன்களுக்கு, தங்கையின் மீது வழக்கு தொடுப்பதில் விருப்பமில்லை எனத் தெரிந்தது. அவர்களின் மகன்கள் தான் துள்ளுவதாக அறிந்தான். அதனாலே நேரிடையாக அழைத்து வரச்சொல்லி கார் அனுப்பியிருந்தான. 

"எங்க சொத்து... நாங்க கேக்குறோம்... இதுல பிரச்சினை எங்கே இருந்து வந்தது?" நால்வரில் ஒருவன் பதில் கேள்வி கேட்க,

"அதைத் தான் பிறந்தவீட்டு சீராக் கொடுத்துட்டாங்களே! மறுபடியும் எதுக்குங்க கேக்கறீங்க?" என்றான் சத்யானந்தன்.

"அதுக்குப் பதிலாத் தான் வேற இடம் தர்றோம்னு சொல்றோமே?"

"ஏம்ப்பா... இவ்வளவு நாளா பாடுபட்ட நிலத்த கை கழுவின மாதிரி விடச் சொன்னா எப்படிப்பா?" இம்முறை தேவானந்தனும் அவர்களிடம் தன்மையாகவே கேட்டார்.

"அதுக்காக யாரு எவருன்னே தெரியாததுகளுக்கு எல்லாம் எங்க பரம்பரை சொத்த விட்டுக் கொடுக்க முடியாது." ஒரு‌ இளவட்டம் சற்று துள்ளியது.

"இதுல உங்க அப்பாக்களுக்கு எல்லாம் விருப்பம் இல்ல போலியே?" அவன் பேச்சு கோபத்தைக் தூண்டினாலும், சத்யா அமைதியாகவே கேட்டான்.

"அவங்களுக்கு எங்கே இப்ப இருக்கற நிலத்தோடு மார்க்கெட் வால்யூ தெரியுது. அந்தக்கால மனுஷங்க... கூடப் பொறந்த பொறப்பு, ரத்தபாசம்னு சென்டிமென்ட் பேசிட்டுத் திரியறாங்க!" என மற்றொரு இளவட்டத்தின் பேச்சில் சூடு பறந்தது.

"அப்ப உங்களுக்கு அந்த நிலத்தோட மார்க்கெட் வால்யூதான் உறுத்துது... நம்ம பரம்பரை சொத்துங்கற அக்கறை இல்ல. கரெக்டா?"

"ஆமா... நாளைப்பின்ன நல்ல விலைக்குப் போகுமுல்ல?" வந்த நால்வரில் மூவர் மட்டுமே துள்ளி எகிறிப் பேசிக் கொண்டிருக்க, அதில் ஒருவன் மட்டும் அமைதியாகவே இருந்தான். அதுவே அவனுக்கு‌ இவர்கள் செய்வது பிடிக்கவில்லை எனத் தெளிவாகக் காட்டியது. ஏதோ இவர்கள் வலுக்கட்டாயத்தில் வந்திருக்கிறான்.

"சரி உங்களுக்கு அந்த நிலத்தோட வால்யூ தான் உறுத்துதுனா, நான் அதுக்குண்டான மதிப்பை கொடுத்துர்றேன். அவங்களுக்கு பிரச்சினை கொடுக்கக் கூடாது." என்று திட்டவட்டமாக பேசினான் சத்யானந்தன்.

"அதெல்லாம் வேணாம் சார்... நீங்க எதுக்கு அவங்களுக்காக கொடுக்கனும்." அமைதியாக இருந்தவன் இப்பொழுது பேச, மற்றவர்கள் அவனை முறைத்தனர்.

"நானும் லட்சுமி அம்மா மகன் தான்... ஒரு மகனா என் கடமையை நான் செய்ய நினைக்கிறேன். அவ்வளவுதான்."

"என்ன சார்... உங்க பணத்தோட மிதப்பக் காட்டுறீங்களா?" துள்ளிய இளவட்டம் மீண்டும் எகிறிக் கொண்டு நிற்க,

"நான் என் அதிகாரத்தக் காட்டுறதா இருந்தா... ஒரே நாள்ல வேல முடிஞ்சிருக்கும். இப்படி உக்கார வச்சு பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்." என்றதும் அவர்களிடம் ஒரு தயக்கம் தன்னால் வந்தமர்ந்தது. யாரும் பதில் பேசவில்லை.

"லட்சுமி அம்மாவோட அண்ணன் மகனுங்கங்கறதால தான், வில்லங்கம் வேண்டாமேன்னு கூப்பிட்டு வச்சு பேசிக்கிட்டு இருக்கேன். ஏன்... இவ்ளோ நாளா சண்முகம் அங்கிளே உங்கள விட்டு வச்சுருக்கறதே, லட்சுமி அம்மா முகத்துக்காகத் தான். அவங்க அண்ணனுகளுக்காகத் தானே பாக்குறாரு!"

"எங்க அப்பாக்களால தான் இவ்ளோ நாளா கேஸு இழுக்குது. இல்லைனா எப்பவோ முடிஞ்சுருக்கும்." ஒருவன் முகத்தில் சலிப்பு காட்ட, 

"கண்ணன்னு பேரு வச்சாலே கம்சனும் வந்தே ஆகனும் போல... ஆனா, இங்க கம்சனோட பிள்ளைக தான் துள்ளுறாங்க!" என்ற சத்யா சிரித்தான்.

"சார்... கொஞ்ச நாளா இருந்த உங்களுக்கே எங்க அத்தை மேல இவ்வளவு பாசம்னா, எங்களுக்கு கொஞ்சம் கூட இருக்காதா சார்?" அமைதியாக இருந்தவன் மீண்டும் பேச,

"அப்புறம் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றீங்க?"

"எங்க அப்பாக்கள் காலத்தோடு விவசாயத்துக்கு மவுசு கொறஞ்சு போச்சு சார்... அத்தைக்கு கொடுத்தது கொஞ்சம் ரோட்டோரமா இருக்குறதால நல்ல விலைக்குப் போகும். அதனாலதான் அதைக் கேக்குறோம்." என்று பிரச்சனையின் மையத்தை பிடித்து பேசினான் அவன்.

"வயிறுன்னு ஒன்னு மனுஷனுக்கு இருக்கிற வரைக்கும் விவசாயத்துக்கு மவுசு குறையாதுப்பா... என்ன காலத்துக்குத் தகுந்த மாதிரி நாமளும் கொஞ்சம் மாத்திக்கனும். புதுப்புது உத்திகள பயன்படுத்தனும்." தேவ்னாந்தன்அவர்களிடம் பொறுமையாக எடுத்துக் கூறினார்.

வயதும் அனுபவமும் கற்றுத் தந்த பாடம், காலத்திற்கு ஏற்றவாறு யுத்திகளை கையாண்டு வெற்றி கொண்டவருக்கு எந்த சூழ்நிலையைக்கும் இயல்பாய் தீர்வு சொல்லும் வித்தை தெரிந்திருந்தது.

"சொல்றது ஈஸிங்க... வெள்ளாமை செஞ்சு பாத்தாதான் தெரியும் எங்களோட கஷ்டம்...” என்று எகிறிய இளவட்டம் தங்களின் இன்னல்களை பட்டியலிடத் தொடங்கியது.

“தண்ணி இருந்தா வேலைக்கு ஆள் கிடைக்கறது இல்ல... ஆளும், தண்ணியும் கிடைச்சா வெளச்சல் இருக்கறததில்ல.... வெளச்சல் இருந்தா விலை போறது இல்ல. போட்ட காசை எடுக்கிறதே வாழ்வா சாவான்னு போயிட்டு இருக்கு. ஒவ்வொரு வெள்ளாமையும் போட்டு எடுக்கங்குள்ள நாக்கு தள்ளுதுங்க." துள்ளியவன் இப்பொழுது தளர்ந்து பேசினான்.

இவர்கள் பேச்சில் ஒன்று புரிந்தது. இவர்களுக்கு அத்தைக்குக் கொடுத்த சொத்தில் பிரச்சனை இல்லை. அது இருக்கும் இடம்தான் பிரச்சினை. அதனால் தான் மாற்று இடம் கொடுத்து அதைக் கைப்பற்றிக் கொள்ள நினைக்கின்றனர்.

சிறிது நேரம் யோசித்த சத்யானந்தன், "நீங்க என்னைய பார்ட்னரா சேத்துக்கறீங்களா?" என்று கேட்க, அவனைப் புரியாமல் பார்த்தனர் நால்வரும்.

"விவசாயத்துல என்னங்க பாட்னர்ஷிப் பண்ண முடியும்?"

"அப்ப நீங்க எங்களோட பார்ட்னரா ஆகிக்கோங்க!" என்று திட்டமாகச் சொல்ல,

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே எங்களுக்கு புரியல... கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்ல இருக்கும் " என்றனர்.

"எம் பேரன் சொன்னது ரெண்டுமே ஒன்னுதான் தம்பிகளா!" என்றார் தேவானந்தன்.

"உங்களுக்கு விவசாயம் பண்ணத் தெரியும். எனக்கு வியாபாரம் செய்யத் தெரியும். உங்களுக்குத் தெரிஞ்ச விவசாயிகளை எல்லாம் நீங்க கூட்டு சேத்துக்கோங்க... உங்க விளச்சல நானே நேரடியாக வாங்கிக்கறேன். உங்கள எங்க மசாலாக் கம்பெனில பார்ட்னரா சேத்துக்கறேன்!" னென்று சத்யானந்தன் அடுக்கிகொண்டே போக, சத்தியமாய் அவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

"இதுல எங்களுக்கு எப்படிங்க லாபம்?" அவர்கள் விபரம் புரியாமல் கேட்க,

"முதல்ல... இடைத்தரகர்கள் இங்கே நுழையுரதுகு வாய்ப்பே இல்ல... எப்பவும் நிரந்தரமா ஒரு விலை நிர்ணயம் வச்சுக்கலாம். என் ஃப்ரெண்ட் விஷ்வா லேட்டஸ்ட் டெக்னாலஜில சில பல யுக்திகளை உங்களுக்கு புது எப்படி யூஸ் பண்றதுன்னு கைடு பண்ணுவான். விளச்சல நாங்க வாங்கி ஸ்டோர் பண்ணிக்குவோம். இப்போ புரியுதா?"

இவன் சொல்வதைத் கேட்டு அவர்களும் கொஞ்சம் யோசித்தனர். நிரந்தரமான வருமானத்திற்கு வழி கிடைப்பதோடு, நல்ல லாபமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என தெரிந்து கொண்டனர்.

விஷ்வாவை வந்து அவர்களது நிலங்களையும், சுற்றுவட்டாரப் பகுதிகளையும் பார்வையிடச் சொல்வதாகக் கூறினான். 

"சார்... நாங்க பேசிட்டு சொல்றோம்." அமைதியாக இருந்தவன் பதில் கூற, மற்றவர்களின் அமைதியே அவர்களுக்கும் ஓரளவுக்கு சம்மதம் எனத் தெரிந்தது.

சொத்து வழக்கு பற்றி விசாரித்தவன், இடத்திற்குரிய மதிப்பீட்டைத் தான் தருவதாகக் கூற, மறுத்து விட்டனர்.

"சார்... எங்க அத்தை, பிள்ளைகளோடு இருக்க ஒரு இடம் வேணும். அவ்வளவு தானேன்னு நினச்சு தான் வேற இடம் தர்றதா சொன்னோம். அவங்க உங்களுக்கு உதவி பண்ணணும்ன்றதுக்கு வேண்டி எங்களுக்காக நீங்க இவ்ளோ யோசிக்கும் போது, நாங்க சீராக் கொடுத்த சொத்துக்குப் பணம் வாங்கினா, அதை விடக் கேவலம் எதுவும் இல்லை சார்."

இவன் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதும், அவர்களுக்கு சிறிது குற்ற உணர்ச்சியைத் தூண்டி விட்டது என்னவோ! எங்கிருந்தோ வந்தவனே அத்தைக்காக இவ்வளவு யோசிக்கும் பொழுது, ரத்தபந்தம்... அவர்கள் தசையும் சற்று அத்தைக்காக ஆடியது போலும். இதற்குத் தான் இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்யச் சொன்னாரோ நம்ம வள்ளுவர் தாத்தா?