5. மறைக்க முடியாதவை
கலைவாணி அந்நகரிலேயே மிகச்சிறந்த உளவியலாளராக இருந்தாள். அத்தனைப் பட்டங்கள், அத்தனை விருதுகள். வாழவே முடியாத பலரும் அவளைத் தேடி வந்திருக்கிறார்கள். பலரை அவர்களது தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டிருக்கிறாள். பலருடைய கவலைகளை அவள் எடுத்துக் கொண்டு மீண்டும் அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ அவள் உதவி இருக்கிறாள். ஆனால், இன்று அவளது கவலையை யாரிடம் சொல்லித் தீர்ப்பது என்று தெரியவில்லை.
விடிவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமே இருந்த நிலையில் மோகன் திடீரென வீட்டை விட்டு ஓடியிருக்கிறான்.அதுவும் அவனுக்கு என்னவென்றே புரியாத ஒரு அபூர்வ சக்தியுடன்.
தனது காரை எடுத்துக் கொண்டு கலைவாணி அந்த நகரம் முழுக்க சுற்றித் திரிந்தாள். போலீசுக்கோ அல்லது தெரிந்த ஏதாவது நண்பர்களுக்கோ உதவிக்கு அழைக்கலாம் என்றால், பின்னர் அதுவே ஆபத்தாக முடியுமென்று அவள் அஞ்சினாள். அதனால், அவளே தனியொருத்தியாக அந்த மழை இரவில் மோகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தாள்.
எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. அவள் நம்பிக்கை மெல்ல மெல்ல தேயத் தொடங்கியது. கண்களில் மெல்ல கண்ணீர் முட்டியது. அந்த இருளில் அடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் கலைவாணி மீண்டும் தனது வீட்டிற்கே வந்தாள். கார் கதவைத் திறந்து விட்டு மழையில் இறங்கி நின்றாள். அந்த மழையில் அவள் அழுவது யாருக்கும் தெரியவில்லை. திடீரென அவளுக்கு ஒரு எண்ணம் வந்தது. மோகனுக்குப் பிடித்த பல இடங்களில் அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கிற பார்க்கும் ஒன்று. ஆனால், அங்கு தான் இன்னும் அவள் சென்று பார்க்க வில்லை. அந்தப் பார்க்கை நோக்கிச் சென்றாள்.
பார்க்கின் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமேயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். பார்க்கின் உள்ளே ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் இருந்து ஒரு மின்னல் வானை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அந்த மின்னல் வெளிச்சத்தில் மோகனின் முகம் நன்றாக தெரிந்தது. அவள் சற்று அருகே சென்றுப் பார்த்தாள், மோகன் நனைந்தபடி அந்த பெஞ்சில் அமர்ந்திருந்தான் அவனது கையில் மின்னல்கள் தோன்றிக்கொண்டிருந்தன.
கலைவாணி அவன் அருகே சென்று, "மோகன் என்ன ஆச்சு?" என்று கவலையாக கேட்டாள்.
அவளைப் பார்த்ததும் மோகன் அழுதேவிட்டான்.
"எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியல அத்தை இங்க பாருங்க" என்று சொன்னபடி தனது கைவிரல்களுக்குள் கசிந்து கொண்டிருக்கிற மின்னல்களைக் காட்டினான்.
"எனக்கு ரொம்ப பயமா இருக்குது த்தை. எனக்கு ஏதாவது ஆயிடுமா" என்று விசும்பினான்.
கலைவாணி அவனை வாரி அணைத்துக் கொண்டு. "நீ எதுக்கும் கவலைப் படாத தம்பி, நான் இருக்கேனில்லை. நான் பாத்துக்கிறேன். உனக்கு ஒரு கெட்டதும் வராம நான் பாத்துக்கிறேன் என் சாமி." என்று சொன்னாள்.
மோகன் அவள் மார்பில் புதைந்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதான்.
"சரி, நீ திடீர்னு எங்க ஓடிப்போன ?"
"எனக்கே தெரியல அத்தை. என்னை யாரோ கூப்பிட்டது மாதிரி தோணுச்சு. நம்ம டீ.வி. யில வெல்க்கம் னு வந்துச்சு. அதான் நான் குழப்பத்துல ஓடிட்டேன். ரொம்ப நேரம் ஓடுனதுக்கு அப்புறம் தான் எங்க போறதுன்னே தெரியாம இங்க வந்துட்டேன்.
நான் இப்ப என்ன பண்றது அத்தை?"
"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ மொதல்ல வீட்டுக்கு கிளம்பு."
"அப்போ, இந்த மின்னல்?"
"அதான் நான் சொன்னேனல்ல நான் பாத்துக்கிறேன்னு கிளம்பு" என்று கலைவாணி சொன்னாள்.
மோகன் கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
வீட்டின் கதவைத் திறந்து கொண்டு இருவரும் வரவேற்பறைக்கு வந்தனர். மோகன் மிக சோர்வாக தனது அறைக்குப் போக முயன்றான். கலைவாணி அவனை நோக்கி "ஒரு நிமிஷம்" என்றாள்.
மோகன் குழப்பத்துடன் நின்றான்.
"இங்க உட்காரு " என்று சொல்லிவிட்டு கலைவாணி மட்டும் மோகனது அறைக்குச் சென்றாள். அங்கு மோகன் மாற்றிக் கொள்வதற்கு அவனுடைய இரவு உடைகளையும் துவட்டிக் கொள்வதற்கு ஒரு துண்டையும் எடுத்துக் கொண்டு கசங்கி இருந்த அவனது படுக்கையை சரி செய்தாள். களைந்து இருந்த பொருட்களை அடுக்கி வைத்தாள். மோகன் அந்த அறைக்கு நுழைவதற்கு முன் அந்த அறை எப்படி இருந்ததோ அதேபோல அந்த அறையை மாற்றி வைத்தாள்.
பின்னர் படியிறங்கி அவள் வரவேற்பறைக்கு வந்தாள். மோகன் மிகுந்த களைப்புடனும் குழப்பத்துடனும் ஃசோபாவில் அமர்ந்திருந்தான்.
அவனிடம் சென்ற அத்தை இரவு உடைகளையும் துண்டையும் கொடுத்து மாற்றி வரச்சொன்னாள். மோகன் கீழே இருந்த அத்தை அறையிலேயே தனது உடைகளை மாற்றி விட்டு மீண்டும் ஃசோபா அருகே வந்தான். அவனை ஃசோபாவில் உட்கார வைத்து விட்டு கலைவாணி அருகினில் இருந்த இன்னொரு ஃசோபாவில் அமர்ந்து கொண்டான்.
"மோகன், நான் என்ன செஞ்சாலும் அது உன் நல்லதுக்கு தான்னு உனக்கு தெரியுமில்ல?" என்று கேட்டாள்.
"ஆமாம்" என்பது போல மோகன் தலையை ஆட்டினான்.
"மோகன், என்னன்னே தெரியாத இந்த சக்தியை வைச்சிட்டு நீ நிம்மதியா இருக்க முடியாது. அதுக்கு நான் ஒன்னு பண்ணப் போறேன்."
மோகன் எதுவும் புரியாமல் விழித்தான்.
"நீ என்னை நம்புறயில்லை?" என்று கேட்டாள்.
"ஆமாம்" என்பது போல மீண்டும் தலையை ஆட்டினான்.
"சரி, நீ இப்போ கண்ணை மூடு." என்றாள்.
"மோகன் நான் இப்ப சொல்றத கவனமா கேளு. நான் இப்போ 1...,2...,3... ன்னு கவுண்ட் பண்ணுவேன். 3 சொல்லும் போது நீ தூங்கப் போற...
1 ....2.....3...."
மோகன் தூக்கத்திற்கு சென்றான்.
"மோகன் இன்னைக்கு என்ன நடந்தது?"
மோகன் அன்று தனக்கு ஹாக்கி மேட்சில் அடிபட்டது, மாயாவிடம் பேசியது, அன்று இரவு கனவில் அவள் வந்தது. அதன்பின் தனது கையில் மின்னல் தோன்றியது வரை அனைத்தையும் சொன்னான்.
"மோகன், நான் இப்போ சொல்லப் போறத நீ நம்பப் போற... நீ டின்னர் முடிச்சிட்டு நீ ஹால்லேயே படுத்து தூங்குன. உன்னோட கனவுல நீ மாயாவைப் பாத்த உனக்கு கனவுல உன் கையில மின்னல் வந்துச்சு. அப்புறம் நீ பயத்துல எந்திரிச்சுட்ட உனக்கு உண்மையில எந்த சக்தியும் வரல" என்றாள்.
மயக்கத்திலிருந்த மோகன் "ம்.." என்று மட்டும் முனங்கினான்.
நேரம் அதிகாலை 4 மணி ஆகியிருந்தது. மோகனை சரியாக அந்த ஃசோபாவில் படுக்க வைத்து விட்டு தனது அறைக்கு சென்று ஒரு போர்வையை எடுத்து வந்து அவனுக்குப் போர்த்திவிட்டாள்.
பின்னர், தனது அறைக்கு சென்று மோகனின் துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு கண்களை மூடித் தூங்க முயற்சித்தாள். ஆனால், தூங்க முடியவில்லை. பின், கையில் "குட்டி இளவரசன்" நாவலை எடுத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கினாள்.
அந்த நாவலில் ஒரு வியாபாரி தாகத்தைத் தடுப்பதற்கான மாத்திரையை விற்றுக் கொண்டிருந்தான்."எதற்காக இப்படியொரு மாத்திரையை விற்றுக் கொண்டிருக்கிறாய்?" என குட்டி இளவரசன் அந்த வியாபாரியிடம் கேட்டான்.
அதற்கு அந்த வியாபாரி, "ஒரு நாளைக்கு மனிதர்கள் ஒரு மணி நேரத்தை தண்ணீர் குடிப்பதற்காக மட்டுமே செலவழிக்கிறார்கள். அந்த நேரத்தை மிச்சப் படுத்தினால், வருடத்திற்கு அவர்களால் 365 மணி நேரங்களை மிச்சப்படுத்த முடியும். அந்த நேரத்தில் முக்கியமான வேறு ஏதாவது வேலையை அவர்களால் செய்ய முடியும் அதற்காக தான் இந்த மாத்திரையை நான் கண்டுபிடித்தேன். அதை இப்போது விற்றுக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினான்.
அதற்கு குட்டி இளவரசன் "எனக்கு மட்டும் அத்தனை நேரம் மிச்சமிருந்தால் நான் என்ன செய்வேன் தெரியுமா? காலாற நடந்து ஒரு கிணற்றைத் தேடிக் கண்டுபிடித்து அதிலிருந்து. நீரை இறைத்துக் குடிப்பேன்." என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
கலைவாணி அதன் பின் இரவு முழுவதும் விடிவதற்காக காத்திருந்தாள். சூரியன் மெல்ல உதித்தது. வெயில் ஜன்னல் கண்ணாடியின் வழியாக மெல்ல அந்த வரவேற்பறைக்குள் வழிந்தது.
கலைவாணி மோகனருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
"மோகன்" என்று மெல்லச் சொன்னாள்.
மயக்கத்திலிருந்த மோகன் மீண்டும் "ம்....." என்றான்.
"நான் இப்போ 1...2....3...ன்னு கவுண்ட் பண்ணுவேன். நான் 3 சொல்லும் போது நீ தூக்கத்துல இருந்து எழுந்திருக்கப் போற...
1 ...2...3....." சொன்னாள்.
அதுவரை அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த மோகன் வியர்க்க விறுவிறுக்க எழுந்தான்.
"என்ன ஆச்சு? கனவுல ஏதாவது பாத்து பயந்திட்டியா?" என்று எதுவுமே தெரியாதது போல அத்தைக் கேட்டாள்.
"மாயா .... ரோஜா...கையில மின்னல்" என்று உடைந்த வார்த்தைகளால் ஏதேதோ உளறி விட்டு "ஒன்னுமில்லை அத்தை ஒரு கெட்டக் கனவு" என்று சொன்னான். சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் காலை எட்டு முப்பது எனக் காட்டியது.
"அய்யய்யோ! அத்தை நான் இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா?" என்னை எழுப்பி இருக்க கூடாதா?" எனக் கேட்டு விட்டு வேகமாக தனது அறைக்கு ஓடினான். மாயாவைப் பார்க்க கூடிய இன்னொரு நாளுக்காக அவன் வேக வேகமாக தயாராகி மீண்டும் கீழே வந்தான்.
"அத்தை காலேஜ்க்கு நேரமாச்சு, நான் கேண்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு உற்சாகமாக எந்தக் கவலையும் இன்றி ஓடிச் சென்றான்.
கலைவாணி அவன் சென்ற திசையையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கிடைத்ததும் மறைந்த சோகம் மீண்டும் அவளை வந்து அடித்தது, "இன்னும் எத்தனை தடவை, இன்னும் எத்தனை நாட்களுக்கு மோகனோட நியாபகத்தை அழிக்கிறது? என்னைக்கு அவனுக்கு அவனைப் பத்தின உண்மை யெல்லாம் தெரியப் போகுதோ?" என நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.
மூன்று விஷயங்களை யாராலும் மறைக்க முடியாது சூரியன், சந்திரன் இன்னொன்று உண்மை என்ற கான்ஃபூசியஸ்ன் வரிகள் அவள் நினைவுக்கு வந்து அவளை சஞ்சலப் படுத்தியது.