Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும் - 6

6. உடன்படிக்கை 

மோகன் நீண்ட நாட்களாக தன்னை ஒரு இன்ட்ரோவர்ட் என்றே நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அது ஒரு பாதி மெய் தான் என்பதை நேற்று உணர்ந்து கொண்டான். நேற்று அவன் மாயாவிடம் பேசியதை அவனால் இன்று வரை நம்ப முடியவில்லை. அதுவும் முதல் தடவை பேசிய போதே அவளை தேவதை என்று சொல்லியதை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவளது நினைவு, நாளுக்கு நாள் அவனுக்குள் வளர்ந்து கொண்டேயிருந்தது. நேற்று கனவில் மாயா வந்ததை நினைத்துப் பார்த்தான். அதை நினைக்கையில் அந்தக் கனவைக் தொடர்ந்து வந்த கெட்டக் கனவையும் நினைத்துப் பார்த்தான். கூடவே, அவனது அத்தையின் நினைவும் வந்தது. "அவளோட பையனா இருந்திருந்தா நல்லா பாத்திருப்பா, அவன் அண்ணன் பையன்னு சொல்லித் தான் இப்படி விட்டுட்டான்னு யாரும் என்னைய பார்த்து கேட்கும் படி வைச்சிராத" என்று அவள் கூறியது காதில் ஒலித்தது.

அவனது அத்தை அவனுக்காக செய்த அத்தனை தியாகங்களும் அவனுக்குத் தெரியும். அவளுக்காக வேணும் அவன் நன்றாகப் படித்து ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டும். அத்தை தனக்கு செய்த அனைத்திற்கும் கொஞ்சமாவது திருப்பி செய்ய வேண்டும். மாயா மட்டுமல்ல மற்ற எந்தப் பெண்ணைப் பற்றியும் நினைக்காமல் ஒழுங்காக படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென அவனுக்குத் தோன்றாமல் இல்லை.

இதெல்லாம், அறிவுக்குத் தெரிகிறது. ஆனால், மனது கேட்க மறுக்கிறது. அறிவு சொல்கிற அனைத்தையும் மனம் கேட்குமென்றால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இயந்திரத் தனமாக இருக்கும் என யோசித்துக் கொண்டான்.

மீண்டும் மாயாவிடம் பேசக் கூடாது, இல்லை கண்டிப்பாக பேச வேண்டும் என அவனது இரு தோள்களின் மீதும் ஒரு சாத்தானும் ஒரு தேவதையும் அமர்ந்து கொண்டு இரு வேறு கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தது. எல்லோரையும் போல அவனும் சாத்தானின் பேச்சையே கேட்டான். மாயாவிடம் மீண்டும் பேச வேண்டும் ஆனால், எப்படி பேசுவது? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் தான் அந்த சர்க்குளர் அவனுடைய வகுப்பிற்கு வந்தது.

அதில் இந்த வருடத்திற்கான கல்லூரி ஆண்டு விழா அடுத்த மாதம் நடக்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மோகன் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது.

இன்ஜியனிரிங் ஃகிராபிக்ஸ் வகுப்பில் செவுல் மீது அடி வாங்கியவர்கள் மூவர். ஒருவன் மோகன், இன்னொருவன் டெஸ்லா மூன்றாமானவன் தான் மகேந்திரன். அடிவாங்கி நண்பர்களான இந்த மூவரில் மகேந்திரன் அந்தக் கல்லூரி ட்ராமா கிளப்பில் இருக்கிறான். அவன் தான் இந்த வருட நாடகத்தை இயக்கப் போகிறான்.

சாமானியர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பார்கள். சாமர்த்தியக்காரர்கள்
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வார்கள். சாமர்த்தியம் இல்லாதவர்கள் காதலிக்க முடியாது.

மோகன் சாமர்த்தியமாக ஒரு வேலையை செய்தான். மகேந்திரனை அன்று மதியமே கல்லூரி அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். உடன் சாட்சிக்கு டெஸ்லாவும் இருந்தான். ஒரு கிரில் சிக்கன் ஆர்டர் செய்து தட்டுக்கு வந்தது.

மகேந்திரன் அந்தச் சிக்கன் மீது கை வைக்க வந்தான்.

"டேய், மச்சான் எப்படியாவது என்னையும் என் ஆளு மாயாவையும் இந்த டிராமாவுல ஒன்னா நடிக்க வைச்சிரு டா" என்றான் மோகன்.

மகேந்திரன் கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை. ஏன் சரியாகக் கேட்டானா என்று கூட தெரியாது.

பட்டென்று, "சத்தியமா மச்சான். தங்கச்சி இந்த முறை உன் கூட டிராமாவுல நடிக்குது" என்று சொல்லி விட்டு சிக்கன் மீது பாய்ந்தான்.

இடைமறித்த டெஸ்லா, "மண்டி எனக்கும் கொஞ்சம் கொடுடா" என்று கேட்டான்.

"மச்சான், நான் முழு மனசோட சத்தியம் பண்ணியிருக்கேன். முழு கிரில்லயும் நானே தின்னா தான் சத்தியம் வேலை செய்யும். அதுல யாராவது கை வைச்சா அப்புறம் சத்தியம் வேலை செய்யாது பாத்துக்க" என்றான் மகேந்திரன்.

"மாப்புள கொஞ்சம் சூத்த மூடிட்டு ச்சும்மா இருடா. மாகி சாப்பிடட்டும்"

என்று டெஸ்லாவை திட்டினான் மோகன். மகேந்திரன் தன்னை ஸ்டைலாக மாகி என்று அழைக்கும்படி பல முறை கூறியிருந்தும் அவனை யாரும் அப்படி அழைப்பதில்லை. ஏன், அவனை யாரும் மகேந்திரன் என்று கூட அழைப்பதில்லை. மண்டி என்று தான் அழைப்பார்கள். மோகன் இவனை மாகி என்று அழைப்பதிலேயே அவனுக்கு இந்த ட்ராமா எவ்வளவு முக்கியம் என்பதை டெஸ்லா உணர்ந்துகொண்டான். அதனால், அவன் மோகனை ஒன்றும் சொல்லாமல் மண்டியிடம் பேசிக் கொள்ள முடிவெடுத்தான்.

"மச்சி யார் சிக்கன் வாங்கிக் கொடுத்தாலும் இந்த மாதிரி தங்கச்சிகளை செட் பண்ணித் தருவியா?" என்று கேட்டான் டெஸ்லா.

'ஒரு வாய் சிக்கனை பாக்க வைச்சு திங்க நினைச்சதுக்கு எவ்ளோ பெருசா கேட்டுட்டான்' என்று நினைத்தான். தனியாக தின்றால் அவன் சொன்னது உண்மையாகி விடும் என்பதால் டெஸ்லாவுக்கும் பங்கு கொடுக்க மண்டி முடிவெடுத்தான்.

வேண்டா வெறுப்பாக, "இந்தாத் தின்னுக் தொலை" என்று சொல்லிவிட்டு டெஸ்லாவிற்கு சிக்கனில் பங்கு கொடுத்தான். மோகனையும் எடுத்துக் கொள்ளச் சொல்லியும் அவன் அதனை எடுத்துக் கொள்ளவில்லை.

எண்ணம் முழுக்க அவளை எப்படி அணுகுவது. நாடகத்தில் நடிக்க அவள் சம்மதிப்பாளா? என்பதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.

தின்றச் சிக்கனுக்கு மண்டி உருப்படியான ஒரு யோசனையை சொன்னான்.

"மச்சான், அவ ஃப்ரெண்ட் கீதா ட்ராமா கிளப்ல தான் இருக்கா. அதனால அவளுக்குப் ஃபோன் பண்ணி மாயாவை நான் கேண்டீனுக்கு கூட்டிட்டு வரச் சொல்றேன். அங்க வைச்சு கேசுவலா கேட்கிற மாதிரி கேட்டுப் பாக்கலாம். ஒத்துக்கிட்டா நம்ம லக்கு இல்லாட்டி நாம வேற ஐடியா தான் யோசிக்கனும்."

"ஏன் மச்சான் கீதாவும் உன் தங்கச்சி மாதிரியாடா?" என்றான் டெஸ்லா.

"மாப்ள, இவன் இதே மாதிரி பேசிட்டு இருந்தா அப்புறம் நான் எதுவும் ஹெல்ப் பண்ண மாட்டேன்" என்றான் மண்டி.

"டேய் டெஸ்லா, லைஃப் மேட்டர் டா. கொஞ்சம் நேரம் சும்மா இருடா" என்று கெஞ்சினான் மோகன்.

"உனக்காக மாப்ள, நான் அமைதியா இருக்கேன்." என்றான் டெஸ்லா.

மண்டி அங்கிருந்தபடியே கீதாவிற்கு கால் செய்து காலேஜ் கேண்டீனுக்கு வரச் சொன்னான். வரும் போது மாயாவை யதார்த்தமாக கூப்பிடுவது போல கூட்டி வரச் சொன்னான். ஒரு முப்பது நிமிடங்கள் கழித்து, கீதா மாயாவுடன் கேண்டீனுக்கு வருவதாக அவனுக்கு மெஸேஜ் வந்தது. மூவரும் அங்கிருந்துக் கிளம்பி கேண்டீனுக்கு வந்தனர்.

மாயா அன்றும் தனது முடியை இறுக்கிக் கட்டி போனி டெயில் போட்டிருந்தாள். அதே பொலிவு மிக்க முகம்தான், இருந்தாலும் மிகச் சோர்வாக இருந்தாள். அவளது கண்களில் துளி கூட சந்தோஷமில்லை. ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்தது போல, குற்றவுணர்ச்சியில் இருப்பது போல மோகனுக்குப் பட்டது. இந்த நேரத்தில் டிராமாவைப் பற்றி பேசுவது கூட சரியாக இருக்குமா? என மோகனுக்குத் தோன்றியது.

மண்டி, இயல்பாக பேசத் தொடங்கினான். தேவையில்லாத ஏதேதோ விஷயங்களைப் பேசி விட்டு, ஒரு வழியாக பேச வேண்டிய விஷயத்திற்கு வந்தான்.

"மாயா, நீ ஆனுவல் டே ட்ராமால நடிக்கறியா?" என்று கேட்டான் மண்டி.

"இல்லை, மகேந்திரா என்னால நடிக்க முடியாது. " என்று சொன்னாள்.

"என்னப்பா, கேட்டதும் பட்டுன்னு சொல்லிட்ட. வா இதெல்லாம் ஒரு ஃபன் தானே நல்லா இருக்கும்" என்றான் மண்டி.

"இல்லை. மகேந்திரா கஷ்டம் எனக்கு நிறையா அசைன்மெண்ட் முடிக்க வேண்டியது இருக்கு"

"மாயா எல்லோரும் டான்ஸ்க்கும் மியூசிக்கும் போயிட்டாங்க டிராமாவுல நடிக்க யாருமே இல்லை. அதான் கேட்குறேன். கொஞ்சம் கன்சிடர் பண்ணு" என்றான் மகேந்திரன்.

"ஏன் மாயா, நீ மட்டும் தான் படிக்க வந்தியா? இவனெல்லாம் என்ன மாடு மேய்க்கவா வந்திருக்கான்?" என்று மகேந்திரனைக் காட்டிக் கேட்டான் டெஸ்லா.

மகேந்திரன் டெஸ்லாவை முறைத்துவிட்டு, "எல்லாத்துக்கும் இருக்கிற அதே அசைன்மெண்ட் ரெக்கார்டு வொர்க் தான. டிராமாவுக்கு வா உனக்கும் கொஞ்சம் ரிலீஃப் ஆ இருக்கும்." என்றான் மண்டி.

மண்டியும் மாயாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தான் மோகன். எவரிடமும் சட்டெனப் பழகி இவ்வளவு உரிமையாக பேச மண்டிக்கு மட்டும் எப்படி முடிகிறது? என மோகன் வியந்து கொண்டான். தன்னால் மட்டும் ஏன் இப்படியெல்லாம் பேச முடிவதில்லை என்று நினைத்துக் கவலைப்பட்டான்.

மோகன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்,

"இல்லை, மகேந்திரா சொன்னாப் புரிஞ்சுக்கோ. எங்க வீட்ல விட மாட்டாங்க. ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் மாயா. மோகனுக்கே இதற்கு மேல் இவளை தொல்லை செய்யக்கூடாது என்று தோன்றியது.

"இல்லை மாயா, நீ வா. கரெக்ட்டா இருக்கும்.

சரி, இப்போ எதுவும் சொல்ல வேண்டாம் பொறுமையா வீட்ல போய் யோசிச்சுட்டு வந்து சொல்லு.

நாங்க கிளம்பறோம். நாளைக்குப் பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

"டேய், அவ நடிக்க வருவாளாடா?".என்று கேட்டான் மோகன்.

"கண்டிப்பா வருவா நீ வேணும்னா பாரு" என்று மிகுந்த நம்பிக்கையோடு மண்டி சொன்னான்.

அன்று மாலை சூரியன் மறைகிற வேளையில் மாயா தனது பால்கனியில் நின்ற படி ஒரு கோப்பையில் பாலும் சர்க்கரையும் கலக்காத, சிக்கரி இல்லாத ஃகாபியை குடித்துக் கொண்டு வானைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி காஃபி குடிக்கும் பழக்கம் அவளுக்கு அவளது அப்பாவிடம் இருந்து வந்தது.

அப்போது, முத்துக்குமரன் வீட்டிற்குள் நுழைந்து தனது லேப்டாப் பேக்கை ஃசோபாவில் வைத்து விட்டு மாயாவின் அருகே வந்தார். முத்துக்குமரன் ஒரு பெரும் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில் மனித ஜீவிதத்தை ஓட்டுவதற்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்னம்மா, யோசிச்சிட்டு இருக்க?" என்று கேட்டார் முத்துக்குமரன்.

"ஒன்னுமில்லைப்பா, ச்சும்மா தான் நின்னுட்டு இருக்கேன் " என்று சொன்னாள்.

அவள் ஒன்றுமில்லை என்று சொல்கிற போதே அவளுக்குள் ஏதேவொன்று ஓடிக் கொண்டிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்து கொண்டார்.

ஒரு கொலையை செய்கிற போது அங்கே கொல்லப்படுபவன் மட்டும் இறப்பதில்லை, கொல்பவனும் இறக்கிறான். ஒரு கொலையை செய்த பிறகு செய்தவன் ஒரு போதும் தான் முன்னர் இருந்தது போல இனி எப்போதும் இருக்க முடியாது.

அவளது மனதை மாற்ற அன்று அவளை படத்திற்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அவள் இருக்கிற நிலையில் படத்திற்கு கூட்டிச் செல்கிறேன் என்று சொன்னால், அவள் என்ன சொல்வாளோ என்று தோன்றியது.

அப்போது திடீரென மாயாவின் கைப்பேசி ஒலித்தது.