3. தந்தை
அந்த நள்ளிரவில் இருளும் அமைதியும் ததும்பிக் கொண்டிருந்தது. என்றுமில்லாமல் அன்று அங்கு ஆந்தையின் அலறல் கேட்டது. தூரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. தார் சாலையில் சருகுகள் உராயும் ஓசை அந்த இரவின் அமைதியை உடைப்பது போல இருந்தது. வீட்டின் கதவை திறந்து கொண்டு மாயா வெளியே வந்தாள்.
என்ன செய்தும் அவளால் அன்று தூங்க முடியவில்லை. கண்களை மூடினால், மோகனின் முகம் அவனது கள்ளமற்ற காதல் பொழியும் கண்கள் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்பதற்காக தன்னைத் தானே வெறுக்கக் கூடிய அவளது நிலையை நினைத்து அவள் மீதே அவளுக்கு சுய இரக்கம் உண்டானது.
காற்றில் அவளது அவிழ்த்து விடப்பட்ட தலைமுடி அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அந்த தார் சாலையில் நடந்து கொண்டே இருந்தாள். இப்படி நடந்த படியே எங்காவது கண் காணாத இடத்திற்கு போக முடிந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சாலை முடிகிற வரை அல்லது இந்த உலகம் முடிகிற வரை நடந்து தீர்வது என நடந்து கொண்டே இருந்தாள்.
நடந்த படியே அவள் வீட்டிலிருந்து வெகு தூரம் கடந்து வந்திருந்தாள். எவ்வளவு நேரம் இப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று கூட அவளுக்கு தெரியவில்ல. அப்போது யாரோ அவளை பின் தொடர்ந்து வருவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தாள், ஒரு உயரமான ஒல்லியான, ஜீன்சும் டீ சர்ட்டும் அணிந்த ஒரு இளைஞன் அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அவன் நான்கு நாள் தாடி விட்டிருந்தான். கண்களில் போதை சிகப்பு தெரிந்தது. ஆனால், அவன் மீது மதுவின் வாசனையோ கஞ்சாவின் வாசனையோ வரவில்லை, அவன் இது எல்லாவற்றிற்கும் மேலே ஏதோவொன்றை எடுத்துக்கொண்டிருக்கிறான்.
மாயாவுக்கு உடல் நடுக்கம் எடுக்க தொடங்கியது. இரவின் குளிர் அவளது பயத்தை ஊதி பெரிதாக்கியது. மெல்ல உடல் வியர்க்க தொடங்கியது. மோகனை பற்றிய நினைவுகள் மொத்தமாக வடிந்து விட்டிருந்தது. இப்போது இருப்பதெல்லாம் அச்சம்... அச்சம்...அச்சம் மட்டுமே.
மாயா மெல்ல தன் நடையின் வேகத்தைக் கூட்டினாள். அவனும் தன்னுடைய வேகத்தைக் கூட்டினான். ஒரு புள்ளியில் சடாரென அவளது கையைப் பிடித்து விட்டான்.
தனது வக்கிரமான முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டு அவன் மாயாவைப் பார்த்துக் கேட்டான், "வரியா?"
மாயா கையை உதறிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். அவனும் மெல்ல சிரித்து விட்டு அவளை துரத்த தொடங்கினான்.
மாயா வேகமாக ஓடி சாலையின் முடிவில் இருந்த ஒரு திருப்பத்தில் திரும்பினாள். அது ஒரு முட்டுச் சந்து. அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அங்கேயே திகைத்து நின்றாள்.
"இதுக்கு மேல எங்க ஓட போற?" என்று புன்னகைத்த படியே கேட்டான் அந்த அயோக்யன்.
"ஓட்டப்பந்தயம் போதும், வா! நான் வேற விளையாட்டு சொல்லி தரேன்." என்று மாயாவின் கையைப் பிடித்து இழுத்தான்.
"பிளீஸ்...என்னை விட்டுரு" என்று கண்ணீர் வர கெஞ்சினாள் மாயா.
"உன்னை விட்டுட்டு இந்த நைட் நேரத்துல வேற கிஸ்ஸாவுக்கு நான் எங்கப் போறது?"
"அதான், இதுக்குன்னே தனியா ஆளுங்க இருக்காங்களே. அங்க போக வேண்டியது தான என்னை ஏன் தெரத்துற?"
"இங்க பாரு, காசு கொடுத்தா பொம்மை மாதிரி படுத்து எந்திரிக்க ஆயிரம் ஐட்டம் கிடைக்கும். ஆனா, உன்னை மாதிரி ஓடி, கெஞ்சி, அழுது, சண்டை போட்டு கீறி, அப்புறமா மொத்தமா முடிக்கும் போது கிடைக்கிற போதையை யாராலும் கொடுக்க முடியாது. நீ ரொம்ப நாள் கழிச்சு கிடைச்ச பீசு உன்னை விட முடியாது." என்று அவளது கையை பிடித்து தர தரவென இழுத்தான்.
மாயா முடிந்த வரை முரண்டு பிடித்து அவள் இழுப்பிற்கு செல்லாமல் அங்கேயே நின்றாள். அந்த அயோக்யன், மாயாவை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தான். தன் மீது அடி விழுகப் போகிறது என்ற பயத்தில் மாயா கண்களை மூடிக் கொண்டாள்.
ஆனால், அவள் எதிர்பார்த்தது போல அவள் மீது எந்த அடியும் விழவில்லை. குழப்பத்துடன் கண்களை திறந்து பார்த்தாள்.
அயோக்யன் ஓங்கிய கையை ஓங்கிய படியே, அதிர்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். பயத்தில் மாயாவின் கையை உதறி விட்டு கொஞ்சம் தூரம் விலகி நின்றான்.
மாயா தனது முடியைப் பார்த்தாள். அவை, நாகங்களாக மாறி இருந்தன.
மாயா பெரும் குரலெடுத்து கதறினாள். அவள் அந்த அயோக்யனை தாக்காமல் இருக்க எவ்வளவோ முயன்றாள். ஆனால், எல்லாமே கை மீறி போயிருந்தது. அவளது பார்வை அந்த அயோக்யன் மீது பட்டிருந்தது. அவன் காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி இறுதியில் அதிர்ச்சியில் மூழ்கிப் போயிருந்த அவனது கண்களும் கல்லாக மாறி, ஒரு கற்சிலையாக அந்த அயோக்யன் அங்கு நின்று கொண்டிருந்தான்.
மாயா பின்னாலேயே மெல்ல மெல்ல நடந்து, சுவரில் மோதி அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டாள். முழங்காலை மடக்கி அதில் முகத்தை புதைத்து அழத் தொடங்கினாள். அப்போது அவள் மீது ஒரு நிழல் விழுந்தது.
அவள் மேலே பார்த்தாள், அவளது தந்தை முத்துக்குமரன் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தார். அவள் முன்பு மெல்ல இறங்கி வந்தார். அவளது கண்ணீரை துடைத்துவிட்டு "என்ன நடந்தது?" என்று கேட்டார்.
மாயா தேம்பிக்கொண்டே நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி முடித்தாள். தப்பித் தவறி கூட மோகனைப் பற்றிய ஒரு சிறு விஷயத்தைக் கூட அவள் சொல்லவில்லை.
"என்னை மன்னிச்சுருங்க ப்பா...தெரியாம நடந்துருச்சு"
"விடுமா இந்த மாதிரி நாயெல்லாம் இப்படி தான் சாகனும். இவன் நல்ல நேரம் இவன் உன் கைல செத்துட்டான். என் பொண்ணை தொட நினைச்சதுக்கு இவன் என்கிட்ட கிடைசிருந்தா என் கையாலேயே இவன் தலைய நொறுக்கி இருப்பேன். உனக்கு எதாவது அடி பட்டுருச்சாமா?"
"எனக்கு எதுவும் ஆகலை ப்பா"
"சரி இன்னேரத்துல நாம இங்க இருக்க கூடாது. யாராவது பார்த்திட்டா நம்மளோட எல்லா திட்டமும் நாசமா போயிடும். வா நாம வீட்டுக்கு போகலாம். அதுக்கு முன்னாடி நீ முதல்ல உன்னோட மனுஷ உருவத்துக்கு மாறு" என்றார் முத்துக்குமரன்.
மாயா தனது மனித உருவதிற்கு மாறினாள். பின்னர் அவளது தந்தையின் முதுகை அவள் கட்டிக் கொண்டாள். அவர் அவளை தூக்கிக் கொண்டு வானில் பறந்தார்.
பின்னர் இருவரும். மாயாவின் வீட்டை வந்தடைந்தனர். மாயா மிகவும் களைத்துப் போயிருந்தாள். அவளது படுக்கை அறையில் அவளைப் படுக்க வைத்து விட்டு, ஒரு போர்வையை போர்த்தி விட்டு, ஏசி யை போதுமான அளவு வைத்து விட்டு வெளிச்சத்தைக் குறைத்து விட்டு, கதவை சாத்திக் கிளம்ப போனார்.
"அப்பா" என்று மாயா அழைத்ததைக் கேட்டு அவர் அங்கேயே நின்றார்.
"தெரியாம நடந்திருச்சு. என் மேல கோவமா அப்பா" என்றாள் மாயா.
"உன் மேல எனக்கு எப்படி டா கோவம் வரும். எனக்கு உன் மேல இருக்கிறது எல்லாம் கவலை மட்டும் தான்."
"இல்லப்பா, நான் நடு ராத்திரி வெளியில போனது தான் இதெல்லாதுக்கும் காரணம். நான் மட்டும் வெளியில போகாம இருந்திருந்தா எதுவுமே நடந்திருக்காது."
"நீ நடு ராத்திரி வெளியில போனது தப்பு இல்லைம்மா. ராத்திரி தனியா வரப் பொண்ண என்ன வேணும்னாலும் செய்யாலாம்னு நினைச்சான் பத்தியா ஒரு நாய் அது தான் தப்பு."
"என்னோட தப்புனால நம்மளோட மொத்த திட்டமும் நாசமாப் போயிருக்கும். என்னை மன்னிச்சிடுங்கப்பா"
"நீ இப்ப பண்ணுணதுனால, நம்மளோட மொத்த திட்டமும் பாழாப் போய். நாம ரெண்டு பேரும் செத்துப் போனாக் கூட பரவயில்லை. நீ பண்ணினது தப்பே இல்லை.
நம்மகிட்ட இருக்கிறது ஒரு அசாத்திய சத்தி. இது ஒரு வரம். இதையே சாபமா மாத்திக்கிட்ட பல பேர எனக்கு தெரியும். ஆனா, என் பொண்ணு ரொம்ப தெளிவான ஒருத்தி தேவையில்லாம ஒரு தடவை கூட நீ உன் சக்தியை காட்டுனது இல்லை.
எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்குடா தங்கம். நீ எப்பவும் தப்பு பண்ண மாட்ட. நீ எதையும் நினைக்காம தூங்கு" என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு சென்று விட்டார்.
மாயா அவர் கூறிய ஆறுதல் வார்த்தைகளை நினைத்துக் கொண்டே கண்களை மூடினாள். அன்றைய மொத்தக் களைப்பும் சேர்ந்து அவளை உடனே தூங்க வைத்தது.
முத்துக்குமரன் தனது அறையில் இருந்த பால்கனிக்கு வந்தார். அவர் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்களே இருந்தது. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினையில் இருந்து வெளி வர வேண்டும். அதே நேரம், தங்கள் திட்டமும் நிறைவேற வேண்டும் எப்படி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஒரு நீண்ட புகையை இழுத்து விட்டுக் கொண்டார்.
அவரது அறையில் அவரும் அவருடைய மனைவியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. அவர் மனைவி அவரிடம், "நீ பாப்பாவை நல்லா பாத்துக்கோ. நான் உன்னை நல்ல படியா பாத்துக்கிறேன்" என்று அவள் கருவுற்றிருந்த போது சொன்னது நினைவிற்கு வந்தது.
மீண்டும் ஒரு நீண்ட புகையை இழுத்துக் கொண்டு, ஒரு தீர்மானத்துடன் அந்த சிகரெட்டை காலால் மிதித்து விட்டு தனது அறையை விட்டு வெளியேறினார்.
டைனிங் டேபிளுக்கு சென்று அங்கிருந்து டிஷு பேப்பர் பெட்டியை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து கதவை மூடி விட்டு, சத்தமில்லாமல் மெல்ல பறந்து சென்றார்.
நகரின் மத்தியில் ஒரு சாலையின் ஓரத்தில் இருந்த முச்சந்தியில் நிலவொளியின் வெளிச்சத்தில்அந்த அயோக்னின் சிலை தெரிந்தது. முத்துக்குமரன் அந்த சிலைக்கு அருகே சென்றார். சிலையை மேலும் கீழும் பார்த்தார். பின்னர் தனது சக்தியை குவித்து அந்தச் சிலையை தொட்டார். அந்தச் சிலை சுருங்கி ஒரு கைப்பிடி அளவிற்கு மாறியது.
முத்துக்குமரன் தான் கொண்டு வந்திருந்த டிஷூ பேப்பரால் அந்தச் சிலையை சுருட்டி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். பின்னர் ஒவ்வொரு டிஷூ பேப்பராக எடுத்து அந்த இடம் முழுக்க சிதறி இருந்த மாயா கக்கிய விஷத்தை துடைத்து எடுத்து, தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பையில் அதனைப் போட்டு கொண்டார். மிக நிதானமாக அங்கே சிதறி இருந்த ஒவ்வொரு துளி விஷத்தையும் தேடி சுத்தமாக துடைத்து சுத்தம் செய்தார். ஒரு மணி நேரம் முதுகு உடைய அந்த இடத்தை சுத்தம் செய்த பின் அங்கே ஒரு துளி விஷம் கூட சிந்தி இருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். பின்னர் முத்துக்குமரன் தனது சக்தியை பயன்படுத்தி அங்கொரு மழையை பெய்ய வைத்தார். அப்போது தவிர்க்க முடியாமல் ஒரு சிறு மின்னல் ஒன்று தோன்றி விட்டது. அந்த இடமே மொத்தமாய் கழுவி விட்டது போல இருந்தது. தன்னையும் தன் மகளையும் அவர்களது ரகசியத்தையும் யாரும் இனி கண்டுபிடிக்க முடியாது என்ற நம்பிக்கையில் முத்துக்குமரன் அந்த இடத்திலிருந்து பறந்து சென்றார்.
ஆனால், இவையனைத்தையும் அன்று கொஞ்சம் முன்னதாக எழுந்து கொண்ட ஒரு காகம் பார்த்துக் கொண்டிருந்தது.