Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

நினைக்காத நேரமேது - 46

நினைவு-46

தாத்தாவின் கேள்வி சத்யானந்தனை திகைக்க வைத்தது. ‘தொழிலை அப்படியே விட்டு விடுவான்’ எனும் விதமாக அவர் பேசியதில் சட்டென்று ஆத்திரம் கொண்டான்.

“ஏன்? என்னைப் பார்த்தா தொழிலை அம்போன்னு விடுறவனாட்டம் தெரியுதா?” என்று தாத்தாவிடம் வெகுண்டு கேட்க,

“டேய் சத்யா!”

“என்ன கண்ணா இது?” மங்கையர்க்கரசியும் திவ்யாவும் சேர்ந்து அவனை அடக்கினர்.

“அந்த துரோகிய எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு சும்மா விட்றனுமா?” குரலை உயர்த்தியபடியே மீண்டும் பேச ஆரம்பிக்க, அமைதியாக எழுந்தார் தேவானந்தன்.

“தொழில்ல ஜெயிக்கிறவனுக்கு ஆத்திரம் தான் முதல் எதிரி அதை அடக்கிட்டா எந்த மலையையும் புரட்டிப் போட்றலாம். அவன் எப்படி உள்ளேயே இருந்து காரியத்தை சாதிச்சானோ அதே வழியில போயி மெதுவா தான் அவனை முடிக்கணும். அதுக்கும் முன்னாடி நஷ்டத்தை தாண்டி நாம திடமா எழுந்து நிக்க என்ன செய்யணுமோ அதுல கவனம் செலுத்தணும்.” என்றவர் தனது அறைக்கு திரும்பிச் சென்றார்.

“அடுத்து என்ன செய்யறது, ஏது செய்றதுன்னு தாத்தாகிட்ட யோசனை கேட்டுக்கோ சத்யா!” என்று மங்கையர்க்கரசி அறிவுறுத்த அதற்கும் முறைப்பான பார்வையையே தந்தான் சத்யானந்தன்.

“ஏன்மா? அத்தனை சூட்சுமம் தெரியாமத் தான் இத்தனை வருஷம் தொழில் எடுத்து நடத்திட்டு இருக்கேனா? நீங்களும் என்மேலே நம்பிக்கை இல்லாம பேசுறீங்களே!” என கோபத்தை கொட்டினான்.

அதைக் கேட்டு வெளியே வந்த தேவானந்தன், “அத்தனை சூட்சுமம் தெரிஞ்சவன் தான் விசயம் தெரிஞ்சும் ஆபீஸுக்கு போயி என்ன ஏதுன்னு பார்க்காம இங்கேயே நின்னு தற்பெருமை பேசிட்டு இருக்கான்!” என்று குற்றம் சாட்டியவர் தானே முன்னே சென்று காரினை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினார்.

“கூல் டவுன் சத்யா... இப்ப எமெர்ஜென்சிக்கு என்ன செய்யணுமோ அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க... கிளம்புங்க, நானும் உங்ககூட வர்றேன்” என்று கணவனை அழைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினாள் திவ்யா.

இவர்கள் அங்கே சென்று சேரும்போதே பெருங்கூட்டம் கூடியிருந்தது. மொத்தமும் குளறுபடியாக இருந்த வர்த்தகத்தை தூக்கி நிறுத்த என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அவசர ஆலோசனை கூட்டத்தை உடனே கூட்டியிருந்தார் தேவானந்தன். ஒட்டு மொத்த ஆனந்தன் குரூப்ஸ் நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அங்கே உடனே வர இயலாதவர்களும் பங்கு கொள்ளும்படியாக ஜூம் மீட்டிங் மூலமும் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தை தேவானந்தனே தலைமையேற்று துவக்கி வைத்தார். என்னென்ன ஆயத்த வேலைகளை மேற்கொள்வது புதிய திட்டத்தை எப்படி செயலாக்குவது, எப்படி மீள்வது என்று பலரும் பல கருத்துகளை கூறியவாறு இருக்க, அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

“தேங்க்யூ ஜென்டில்மென்ஸ்... இந்த அவசர நேரத்துல மீட்டிங் அட்டெண்ட் பண்ணினதோட, உங்க ஐடியாஸ் அண்ட் இன்சூரன்ஸ் ரூல்ஸ் எல்லாம் சொல்லி எங்களை சப்போர்ட் பண்ணினதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. உங்க ஐடியாஸ் எல்லாமே லைவ் பண்ணிப் பார்க்க டிரை பண்றோம். சீக்கிரம் ஆனந்த் குருப்ஸ் கம்பீரமா எழுந்து நிக்கப் போகுது. அதுக்கு உங்க ஆதரவு என்னென்னைக்கும் வேணும்.

நெக்ஸ்ட், எங்க மேனேஜ்மென்ட் சைட்ல இருந்து அதிகாரப்பூர்வமான நியூஸ் வர்ற வரைக்கும் நம்ம கம்பெனி ஸ்டடியா எப்பவும் போல ரன் ஆகிட்டு இருக்குன்ற வார்த்தையை மட்டும் உலகத்துக்கு சொல்லிட்டே இருங்க, அது போதும். தேங்க்யூ ஆல்... வீ வில் மீட் அகயின் அஸ் சூன் அஸ் பாசிபிள்!” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவரின் வயதும் அனுபவமும் சேர்ந்து அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பேசி சடுதியில் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. கலக்கம், பரபரப்பு, படபடப்பு எல்லாம் அனைவரின் மனதிலும் இருந்தாலும் அவற்றை எல்லாம் ஓரத்தில் ஒதுக்கி வைத்து சகஜமாயினர்.

சத்யானந்தன், திவ்யாவிடமும் கூட பெரியவர் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. அவரது உதவியாளரிடம் சிலபல யோசனைகளை கூறிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார்.

சத்யானந்தனும் தனக்கு தெரிந்த வகையில் அங்கேயே இருந்து பல ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். தாத்தா சொன்னவற்றில் உள்ள நன்மைகளை கணவனுக்கு புரிய வைத்து அதையும் செயலாக்கத் தொடங்கினாள் திவ்யா. அவர்கள் வீடு திரும்ப இரவு வெகு நேரமானது.

எதையோ ஒன்றை கொறித்து விட்டு உறங்க வந்தார்கள். மதியம் போலவே மனைவியை உறங்கச் சொல்லிவிட்டு மடிக்கணிணியை வைத்துக் கொண்டு அமர்ந்தான் சத்யானந்தன்.

மூளையெங்கும் வெறுமையாகிப் போக அவனுக்கு உறக்கம் கிட்டுவேனா என்று ஆட்டம் காட்டியது. விரக்தியோடு பால்கனியில் அமர்ந்து இலக்கில்லாமல் வெறிக்கத் தொடங்கினான்.

நேரம் சென்றும் அவன் உறங்க வராமல் இருக்க, கணவனைத் தேடி பால்கனி வந்தாள் திவ்யா.

"ப்ளீஸ்... ரிலாக்ஸ் கண்ணா!" என்றவளின் விரல்கள் கணவனின் கேசத்தை இதமாக வருடிவிட, அந்த சுகத்தினில் லயித்தவனாக மனைவியை ஏறிட்டான்.

அவளது வருடலில் ஆறுதலடைந்து சற்றுநேரம் அப்படியே இருந்தவன் மெல்ல நகர்ந்து, "ஸாரி, உன் தூக்கத்தை கலைச்சிட்டேன். நீ போய் தூங்கு தியா" என்றவனின் இதழ் அவளது கை விரலில் பதிந்து முத்தமிட்டது.

"பரவால்ல கண்ணா... இனிமேல் தூக்கம் வராது. நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க... வாங்க, சும்மா தோட்டத்துல கொஞ்சநேரம் நடந்துட்டு வரலாம்" என்று திவ்யா அழைக்க,

"ம்ஹூம்... இந்த ரூமை விட்டு வெளியே போகும் மனநிலை இல்லை தியா, நான் சரியாயிடுவேன்" என விரக்தியாக கூறினான்.

“உங்களை நீங்களே ஹேர்ட் பண்ணிக்கிறீங்க கண்ணா... இத்தனை அழுத்தம் வேண்டாமே!” என்று கெஞ்சுதலாய் கூறினாள்.

அவனை அப்படியே விட்டு விட்டு நகரவும் முடியவில்லை. சற்றுநேரம் அப்படியே பொறுத்துப் பார்த்தவள், "நீங்க இப்படியே சேர்ல படுத்துக்கங்க... நான் ஏதாவது மெலோடி சாங்ஸ் ப்ளே பண்ணவா?" விடாமல் கேட்டாள்.

அவன் மடியில் இருந்த லேப்டாப்பை எடுத்து வைத்துவிட்டு, சின்ன டேபிளை அவனெதிரே இழுத்துப் போட்டு அவனது கால்களை எடுத்து அதன் மேல் வைத்தாள்.

அவளின் செயலையே சிலநிமிடம் உற்றுப் பார்த்தவன், "சரி" என்று மட்டும் சொல்லிவிட்டு அருகில் இருந்த மற்றொரு சேரையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, தலையை பின்னால் சாய்த்தபடியே, "நீயும் வந்து உட்காரு தியா... ரெண்டு பேரும் பாட்டு கேட்டுட்டே தூங்குவோம்” என்று அழைத்தான்.

மொபைலில் பாடலை பிளே பண்ணிவிட்டு, அவனருகே வந்து அமர்ந்தாள் திவ்யா. இருவரும் அமைதியாக பாடல்களை ரசித்தனர். இசைக்கு இதயத்தை சமாதானம் செய்யும் வித்தை தெரியும் அல்லவா? அப்படித்தான் இருவரையும் அந்தநேரம் சமாதானம் செய்தது.

அடுத்து வந்த சில நாட்கள் இயந்திரத்தனமாக நகர, வீட்டில் ஒருவித இறுக்கநிலை உருவாகியது. தேவானந்தன் அதன் பிறகு எப்பவும் போல இருந்தார் என்பதைவிட இருக்க முயற்சித்தார். சத்யா வெறுமையான சோகம் சுமந்த முகத்துடனேயே இருக்க, திவ்யா ஒரு புரிதலுடன் நடந்து கொண்டாள்.

திவ்யாவின் இந்த இதமான அணுகுமுறையே சத்யாவை பெரிதும் ஆறுதல்படுத்தியது. மீண்டும் சிரிப்பும் கேலியுமாக அவர்களின் நாட்கள் நகர ஆரம்பித்தது.

அலுவலக நடைமுறையில் பல மாற்றங்கள் கையாளப்பட்டன. நஷ்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற ஒப்பந்தத்தோடு பழைய வியாபார ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டன.

தேவானந்தனின் துணையோடு அலுவலகத்தின் மாற்றங்களில் திவ்யா பொறுப்பெடுத்துக் கொள்ள, சத்யானந்தன் வெளிவேலைகளுக்கு சுற்றத் தொடங்கினான்.

நட்போடு உறவாடுவோம் என்பதை செயல்படுத்துவதற்குள் இருவரும் தட்டுத் தடுமாறிப் போயினர். இருவரின் வாழ்க்கையும் குழப்பமில்லாத நீரோடையாக இருந்தது. கொட்டும் மழை நீரில் களங்கமிருக்காது என்பது போல் அவர்களின் நோக்கத்திலும் களங்கமில்லை.

திவ்யாவிடம் மட்டும் கள்ளமிருந்தது. தனது ஆசைக் கண்ணனின் சிரிப்பிலும் தோற்றத்திலும் தன்னையிழந்து திருட்டுத்தனமாய் கணவனை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

இவள் தூங்கி விட்டாள் என்று சத்யா அமர்ந்து அலுவலக ஃபைல்களைப் பார்க்க, இவளோ போர்வையில் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு அரை விழி மூடி அவனை ரசிப்பாள்.

முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே பரஸ்பர புரிதல்கள் பதிவு செய்யப்பட்டு கணவனானவன் ஆயிற்றே? மீண்டும் நண்பனாக மாற்றிக் கொள்வதென்பது அத்தனை சுலபத்தில் நடக்கும் காரியமா என்ன? அவளின் காதல் கொண்ட மனம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ரசித்தது.

நொடிக்கொருமுறை காதல் பார்வை வீசினாலும் தனது தேகநிலையை அனுசரித்தே கண்ணியம் காப்பவனின் மீது பித்தாகிப் போனாள் திவ்யா.

நண்பர்கள் உறவினர்கள் என அனைவரின் வீட்டு விருந்துக்குச் செல்லும் போதெல்லாம் இவர்களின் ஒற்றுமை மற்றும் புரிதல் கண்டு எல்லோரும் வியந்து போயினர்.

இந்த சில நாட்களில் சத்யாவிற்கும் கண்ணனுக்கும் இருக்கும் வேற்றுமை ஒற்றுமைகளை எல்லாம் பட்டியலிட்டு வீட்டில் சொல்லிச் சொல்லி சிரித்தாள் திவ்யா.  

இருவேறு பெயரில் ஒருவனே இவள் மனதை ஆட்சி செய்து வரும் அதிசயத்தை நினைத்து வியந்தாள்.

“நான் ரொம்ப மோசமான பொண்ணா கண்ணா?” அவள் திடீரென்று கேட்க, விளங்காத பார்வை பார்த்தான் கணவன்.

“எதை வச்சு இப்படி சொல்ற தியா?”

“எனக்கு கண்ணனையும் பிடிக்குது சத்யாவையும் பிடிக்குது. தப்பில்லையா அது?”

“ரெண்டும் நான்தானேடி!”

“ஆனா, வேற வேற மாதிரியில்ல இருக்கீங்க! உங்க நடை, உடை பாவனை எல்லாம் கண்ணன் கிட்ட நான் பார்த்ததில்ல... இந்த சத்யா முறுக்கிட்டு கோபப்பட மட்டுமே முந்திட்டு வரார்!” என முகம் சுருக்கி அவன் தோள் சாய்ந்தாள்.

“ஓஹ் காட்... பெரிய குற்றச்சாட்டா இருக்கே? அப்படி என்னென்ன சொல்லி அந்த கண்ணன் பய உன்னை கவுத்தானாம்... சொல்லு, நானும் டிரை பண்றேன்.” என்று குறும்பாய் கேட்டான்.

“இத்தனை நாள்ல சத்யாக்கு என்னென்ன பிடிக்கும் பிடிக்காது, உங்க ஸ்டைல் எல்லாம் எனக்கு அத்துப்படி... அப்படி என்னைப் பத்தி நீங்க என்னென்ன தெரிஞ்சு வைச்சுகிட்டீங்க?”

“இது நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கிற விசயம். இங்கே கண்ணா எங்கேயிருந்து வர்றான்?”

“ம்ம்... இந்நேரம் கண்ணா எனக்காக தன்னையே மாத்திக்கிட்டு என் முன்னாடி நிப்பாரு... ஆனா இங்கே? உங்களுக்காக நான் முழுசா மாறினாலும் நீங்க என்னமோ சுவத்தை பாக்கிற மாதிரி தான் என்னைப் பார்த்து வைக்கிறீங்க?” என்று குற்றப் பார்வையோடு சிலிப்பிக் கொள்ள, மனம் திறந்து சிரித்தான் சத்யானந்தன்.

பின் அவளை உற்று பார்த்துக் கொண்டே, “உன்னை நான் சரியா கவனிக்கலன்னு நல்லாவே குத்திக் காமிக்கிற... பரவாயில்ல, இனிமே தெரிஞ்சுக்கறேன், சொல்லு... உனக்கு என்னல்லாம் பிடிக்கும்?" என்று கேட்க, சுலபமாய் பதில் கிடைக்கவில்லை.

“நான் உங்க கிட்ட கேட்டா எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்? நான் எப்படி உங்களை அப்செர்வ் பண்ணிகிட்டேனோ... அப்படியே நீங்களும் என்னை அப்செர்வ் பண்ணி தெரிஞ்சுக்கோங்க...” என்று கெத்து காண்பிக்க,

“பழி வாங்காதே தியா... இந்த சத்யா பாவம்டி!”

“எனக்கு வீட்டுல இருக்கிற நேரம், லவ் பண்ற நேரமெல்லாம் கண்ணன் தான் வேணும். ஆபீஸ்ல மட்டும் போனாப் போகுதுன்னு சத்யா இருக்கட்டும். அந்த சிடுமூஞ்சி முதலாளி தொழில் பார்க்க மட்டுமே லாயக்கு” என்று சகட்டுமேனிக்கு அவனை தாக்கிப் பேசிவிட்டு உறங்கச் சென்று விட்டாள்.

“ஐயோ இவ பாட்டுக்கு ஏதோ ஒன்னு சொல்லிட்டு போயிட்டாளே... இவளோட கண்ணனுக்கு நான் எங்கே போவேன்? கண்ணனா இவகிட்ட நான் எப்படி பெர்ஃபார்ம் பண்ணேன்னு எப்படி யாரைக் கேட்டு தெரிஞ்சுக்க? இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா நான் இருந்த இடத்தில எல்லாம் சிசிடிவி கேமிரா செட் பண்ணச் சொல்லி இருக்கலாம். இப்ப என்ன பண்றது?’ புலம்பியவாறு மனைவியை தன்னை நோக்கி எவ்வாறு திசை திருப்புவதென யோசிக்க ஆரம்பித்தான் சத்யானந்தன்.