NINAIKKATHA NERAMETHU - 11 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 11

நினைவு-11

தன்னவனைப் பார்த்து விட்டால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் இருக்க முடியாதென்று நினைத்து தான் திவ்யாவும் இவ்வளவு நாட்களாக ஒதுங்கி இருந்தது. அதற்கே அவள் பட்டபாடு சொல்லிமாளாது.

ஆனால் தன்னவனை நேரில் சந்தித்தப் பிறகு, இனியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. சாப்பாட்டைக் கிண்டிக்கொண்டே யோசனையோடு திவ்யா அமைதியாக இருக்க,

"ஏன் திவி? இப்படி வாழ்ற வயசுல வெளிநாட்டுல போய் உக்காந்துகிட்டு காச மட்டும் சம்பாரிச்சு என்ன பண்ணப் போறீங்க?" திவ்யாவைப் பற்றி அவள் கூறியதை வைத்துக் கேட்டாள் நந்தினி.

'என்ற வூட்டுக்காரர் வெளிநாட்டுல‌ இல்லைங்கோ, எம்.டி. ரூம்ல தான் உக்காந்திருக்காருங்கோ அம்மணி!' என்று கூறினால் எப்படி‌ இருக்கும் என்று எக்குதப்பாக நினைத்தது திவ்யாவின் மனம்.

அப்படி நினைத்துப் பார்த்தவளின் முகத்தில் சட்டென்று சிறு புன்னகை முகத்தில் தோன்றவும் செய்தது. அதைப் பார்த்து தோழியின் மேல் கோபம் கொண்டாள் நந்தினி.

"நான் என்ன இப்ப காமெடியா பண்ணேன்? காலம் போன கடைசியில வந்து பொண்டாட்டி கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை‌ மணமான்னு பாண்டிய மன்னன் மாதிரி ஆராய்ச்சி பண்ண முடியாதுங்க மேடம்... என்ன பிராண்ட் ஹேர்டை வாங்கலாம்னுதான் ஆராய்ச்சி பண்ண முடியும்."

அவள் கூறியதைக் கேட்டு திவ்யா சிரித்து விட, நந்தினி அவளை தீவிரமாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.

"சரி... சரி, பார்வையில எரிச்சுடாதே! மலையிறங்கு தாயே! நீ சொல்றது எனக்குப்‌ புரியுது. என் மேல உள்ள அக்கறைல தானே சொல்லுற!"

"ஆமா திவி... வெளிநாட்டுல வேலைக்குப் போயிட்டு, அவங்க அங்க கஷ்டப்பட… அவங்க வொய்ஃப் இங்க கண்டவன் கண்ணுல விழுகறதும், கண்டகண்ட பேச்சுக்கு ஆளாகறதும்னு எத்தனை பேரைப் பாக்குறோம்?"

''ஏய் நந்தினி! இது என்ன புதுசா? வணிகம் செய்யத் தலைவன் போறதும், தலைவி பசலை படறத் தலைவனுக்காகக் காத்திருப்பதும்னு, இலக்கியம் படிக்கையில, எவ்ளோ நல்லா இருந்துச்சு. காத்திருக்கறது கூட ஒரு சுகம் தான் தெரியுமா? திரவியம் தேட திரைகடல் ஓடச் சொல்லியிருக்காங்க மேடம், நம்ம தாத்தாக்கள் எல்லாம்."

"திரைகடல் ஓடித்‌ திரவியம் தேடச் சொன்னாங்க தான். பொண்டாட்டி, புள்ளயத் தவிக்க விட்டுப் போகச் சொல்லல!" என கன்னத்தில் இடிக்காத குறையாக நொடித்தாள் நந்தினி.

அவள் சொல்வதும் உண்மை தான். அன்று வணிகம் செய்யச்‌ சென்றவர்கள் விற்கவோ அல்லது வாங்கவோ சென்றனர். வியாபாரம் சிறிதோ, பெரிதோ அவன்தான் முதலாளி. நினைத்த நேரத்தில் திரும்ப முடியும். 

இன்று வெளிநாட்டு மோகம் கொண்டு, வேலைக்குச் செல்பவர்கள் திரும்ப வேண்டும் என்றால் இன்னொருவனின் அனுமதி வேண்டும். ஒப்பந்தம் முடிய வேண்டும். இல்லை என்றால் தண்டத்தொகை கட்டவேண்டும்.

நந்தினியின் பேச்சைக் கேட்டவளுக்கு, அவள் தன்மீது கொண்ட அக்கறைப் புரிந்தது. அவளுக்கு நெருங்கிய தோழிகள் என்று யாரும் இல்லை. பெற்றோர்களே அந்த இடத்தை நிரப்பி விட்டதால் அவளுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. 

இங்கு வேலைக்கு வந்ததில் இருந்து நந்தினி நெருங்கிய தோழி‌ ஆகிவிட்ட போதிலும், தான் அவளிடம் ஆரம்பத்தில் கூறியதையே தொடர்ந்து கொண்டிருப்பது அவளுக்கும் சற்று நெருடலாக இருந்தது. 

"திவி! பருவத்துல பயிர் செய்யறது வெள்ளாமைக்கு (விவசாயத்திற்கு) மட்டும் இல்ல, பருவத்தையும் பயிர் செய்யணும். அப்புறம் வெளிநாட்டுல சம்பாரிச்ச காச ஃபெர்ட்டிலிட்டி சென்டர்க்கு கட்றதுக்குத் தான் சரியா இருக்கும்."

'அய்யோ... இவ ரெம்பப் பொங்குறாளே! உண்மை தெரிஞ்சா என்னைய என்ன பண்ணுவானு தெரியலையே? இருந்தாலும் வெளிநாட்டுல வேலை‌ பாக்குற ப்ரதர்ஸ்! நோட் திஸ் பாய்ன்ட்!' என எண்ணிக் கொண்டாள்.

''யாரோ இங்க நான் பச்சப்புள்ளனு சொன்னாங்க. ஒன்னுமே தெரியாதுன்னாங்க?" என்று கூறிச் சிரித்தவளை, நந்தினி முறைக்க,

"ஓகே... ஓகேடா! இன்னைக்கே என்ற வூட்டுக்காரருக்கு ஒரு மனு போட்டு, வாழ்க்கைத் திட்டத்தை பரிசீலனை பண்ணச் சொல்றேன். போதுமா? இப்ப சாப்பிட்டு முடி போலாம்!" என்று சமாதானமாக இறங்கி வந்தாள் திவ்யா.

 *******

இந்தியா, மசாலாப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் விளங்கும் நாடு. ஆந்திரா உற்பத்தியில் முன்னனியிலும், கேரளா சிட்டி ஆஃப் ஸ்பைஸஸ் எனவும் அழைக்கப் படுகிறது. தங்கத்துக்கு ஈடாக விற்பனை செய்யப்படும்,

சிவப்புத் தங்கம்‌ என அழைக்கப்படும் குங்குமப்பூவின் உற்பத்தியகமும் இந்தியா தான். நாமெல்லாம் குங்குமம் பூவை எப்படிக் கலக்கிக் குடித்தாலும், 'நான் திராவிடனாக்கும்' எனும் வகையில் தான் நிறம் மாறாமல் நம் குழந்தைகள் பிறக்கும்.

உலகத்திலேயே அதிகக் காரமான, ரெட் பெப்பர் என அழைக்கப் பெறும் மிளகாய் விளைவதும் இங்கு தான். மசாலாக்களின் அரசனாகிய கருப்பு மிளகும், அரசியாகிய ஏலக்காயும் கேரளாவின் சிறப்பு. நம் நாட்டு மசாலாக்களின் மணமும், சுவையுமே உலக நாடுகள் அவற்றை விரும்பக் காரணம்.

அந்த குடவுனில் அனைத்து வகையான மசாலாப் பொருட்களும் நேர்த்தியாக பேக் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, சத்யானந்தன் அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். உடன் திவ்யாவும் நின்றிருந்தாள். காலையில் சொன்னபடியே அவளை அழைத்துக் கொண்டு பேக்கிங் செக்ஷனுக்கு வந்துவிட்டான் வந்திருந்தான் சத்யா.

பத்து கிராமிலிருந்து, கிலோ கணக்குகள் வரைப் பேக்கிங் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. ஒருபுறம் பேக்குகளில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதிகள் பதியப்பட்டுக் கொண்டிருந்தது. 

சூப்பர் வைசர் ராகவன் உடனிருந்து அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவ்வப்பொழுது திவ்யா மீதும் படிந்தது. அவளோ அவன் பார்வையைத் கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லை. செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வேறுபாடு தெரியாத நாயாகத்தான் அவனைப் பார்ப்பாள். 

இங்கு சத்யாவின் பாடும் கொஞ்சம் திண்டாட்டமாகத்தான் இருந்தது. அவளைப் பார்த்ததால் வந்த தடுமாற்றத்தை, அவளைக் கொண்டே போக்க வேண்டும் என்று தான் தன்னுடன் வருமாறு அவளை அழைத்ததே!

முகம் ‌பார்த்து இயல்பாகப் பேசி விட்டால் தடுமாற்றம் போய்விடும் என்று நினைத்தான். ஆனால் மசாலாக்களின் நெடி தாக்காமலிருக்க முகக்கவசம் அணிந்து வந்தவளின் கண்களை மட்டும் கண்டவன், அவளது சுடர்விழியால் சாட்டையில்லாமலே சுழற்றப்பட்டான்.

இவளைக் கண்டால் மட்டும் ஏன் தான் சுயம் இழக்கிறோம் என்று புரியாமல் தவித்தான். விழிகளில் அமிழ்ந்துப் போகும் வித்தையை புதிதாய் அவளிடத்தில் கண்டான். ‘எப்பா... என்ன கண்ணு? என்னா பொண்ணு!’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

திவ்யாவும் இவனுக்கு தப்பாத நிலையில் இருந்தாள். அங்கு பெரும்பாலும் வேலை செய்வது பெண்கள் தான். அவர்கள் முகத்தில் தோன்றிய மாற்றத்தைக் கண்டவள், அவர்கள் பார்வை சென்ற திசையை நோக்க, அவள் கண்ணில் பட்டது ராகவனோடு பேசிக் கொண்டிருந்த அவளவன் தான். 

பிளாக் கலர் பேண்ட்டும் க்ரே கலர் முழுக்கை ஷேர்ட்டும் அவன் நிறத்தை எடுப்பாகக் காட்ட, வளர்வது குற்றமில்லை என்ற நோக்கில் வஞ்சனையில்லாமல் வளர்ந்து நிற்கிறான்.

இடது கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு பேசிக் கொண்டிருக்க, அவன் தோரணையில் அவளும் மதி மயங்க, அப்பொழுது தான் அப்பெண்களின் பார்வை அவளுக்கு உறுத்தியது.

‘கொஞ்சங்கூட வெவஸ்தை இல்லாததுங்க... இந்த வளந்து கெட்டவனை பாக்கணும்னே ஆடாம அசையாம நிக்கிராளுக!’ என அங்கே வேலைபார்க்கும் சாக்கில் சத்யானந்தனை சைட் அடித்த பெண்களை எல்லாம் தாளித்துக் கொட்டினாள் திவ்யா.

கொஞ்சம் மிளகாய்‌ கடித்த உணர்வு அவளுக்கு. காரம் சற்று அதிகமாய் கரித்தது. எப்போதடா இடத்தை விட்டு நகர்வோம் என்றிருந்தாள்.

பேக்கிங் செக்ஷனை விட்டு வெளியே வந்தனர். அவளையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான் சத்யானந்தன். அங்கு செய்ய வேண்டிய சில மாற்றங்களைப் பற்றிப் பேசி விட்டு, அது சம்பந்தமான விபரங்களைச் சேகரிக்க சொன்னான். 

"திவ்யா... டிரான்ஸ்போர்ட் பத்தித் தாத்தாகிட்டப் பேசியிருந்தீங்களாம்!" என திடீரென்று கேட்க,

"ஞாபகம் வச்சிருக்காரா சர்?" என்றாள் ஆச்சரியமாக.

"தாத்தா எதையும் மறக்க மாட்டார். நான் இன்னைக்கி இங்க வர்றதா சொன்னதும், அவர் தான் உங்க பேரைச் சொல்லி, எதுனாலும் உங்களைக் கேக்கச் சொன்னார்." 

"அப்டி இல்ல‌ சர்... நான் ஒரு‌ அக்கவுண்டன்ட் தானே? என்னோட சஜ்ஜஷனையும் ஞாபகம் வச்சிருக்காரே?" வெளிப்படையாகவே மெச்சிப் பேசினாள்.

"எப்பவுமே பிஸினஸ் பண்றவங்களுக்கு தன்னோடு பார்ட்னர்ஸ் ஒப்பீனியனை விட, கஸ்டமரோட ஒப்பீனியனும், வேலை பாக்குறவங்களோட கம்ஃபோர்ட்டும் முக்கியம்னு தாத்தா எப்பவுமே சொல்லுவாங்க." பெருமிதமாகவே சொல்ல,

"பெரிய மனுஷன்னா பெரிய மனுஷன் தான் சர்."

"அப்படி சொல்லாதீங்க... அவரைப் பெரிய மனுஷன்னு சொன்னா அவருக்குப் பிடிக்காது. எப்பவுமே சின்னப்பையன் மாதிரி எங்கூட தான் மல்லுக்கு நிப்பாரு." என்று கூறி அவன் சிரித்த விதத்தில் அவளின் மனது, ‘என்னவனைக் கொஞ்சம் கொஞ்சேன்!’ என கெஞ்சியது.

‘மனம் ஒரு குரங்கு... என்ன சேட்டையெல்லாம் செய்யச் சொல்கிறது!’ ‘கொஞ்சநேரம் அடங்கியிரு குரங்கே!’ என்று மானசீகமாக கொட்டிவிட்டு அதனை அடக்கி வைத்தாள்.

"அது ஒரு வகையான மனோநிலை சர்... தனக்குப் பிடிச்சவங்ககிட்ட மட்டும்‌ தன் சுயத்தைக் காட்டுவது." மிகச் சகஜமாக அவர்களிடையே உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, திவ்யாவின் இந்தப் பேச்சில் நொடிநேரம் சிந்தனை வயப்பட்டான்.

'இப்பொழுது தன்னுடைய மனநிலை என்ன? இவளிடம்‌ அதுவும் இன்று பார்த்தப் பெண்ணிடம்… இப்படிப் பலநாள் பழகியவரிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கிறேனே?' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

"ஓகே சர்! ஐ வில் கலெக்ட் ஆல் தி டீடெய்ல்ஸ்." என்றவளிடம்

"குட்... நெக்ஸ்ட், இங்க வேலை பாக்கற பொண்ணுங்க சேஃப்டியும் முக்கியம். அப்யூஸ் கம்ப்ளைன்ட்ஸ் இருந்தா… தெரியப்படுத்தலாம். மறைமுக கம்ப்ளைன்டாகவும் கொடுக்கலாம். இதையும் சர்க்குலர் போட்ருங்க!" என்று உத்தரவாகவே கூறினான் சத்யா.

ராகவனின்‌ பார்வையையும், அதன் போக்கையும் கவனித்தவனின்‌ முடிவு இது. ஆணின் பார்வையின்‌ அர்த்தம் அறிந்தவன். அதுவும் திவ்யாவின் மீது அவன் பார்வைபட்டு மீண்ட பொழுதெல்லாம், அவனது மூளை ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றது.

‘வகையா மாட்டும்போது உனக்கு இருக்குடா!’ என கருவிக் கொண்டான்.

'இவளை யாரு இப்படி சேலை கட்டிட்டு வரச் சொன்னது?' என்று இயல்பாய் அவள் மீதும் ஆத்திரம்‌ வந்தது.

'டேய்! இது உனக்கே ஓவராத் தெரியல? அவ சேலை கட்டிட்டு வந்தா உனக்கென்ன? அதை அவ‌ன் பாத்தா உனக்கென்ன? நீயும் தானே காலையில‌ பாத்த?' என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது. 

ஆனால் அவன் அப்படிப் பார்க்கும்‌ பொழுது, தனக்கு ஏன் கோபம் வந்தது என்று யோசித்தான். 'இது எங்கே போய் முடியுமோ தெரியல? இனிமே இந்த ஆஃபிஸ்க்கு வரக்கூடாது. எதுவாக இருந்தாலும் வீட்ல, தாத்தாகிட்டயே கேட்டுக்குவோம்.' என்று‌ முடிவெடுத்துக் கொண்டான்.

"ஓகே... யு கேன் கோ!"

"ஓகே... சர்." எனக்கூறி எழுந்தவள் கதவை நோக்கி, பின்னழகில் பின்னலாடச் சென்றவளைக் கண்டவனது மனமும் சேர்ந்து ஆடியது.

அக்கினிப் பழமுனு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி‌ நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்க ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய ஒடம்பு‌ கேக்கல

‘ஒரேநாளில் தனக்குள் இத்தனை மாற்றமா?’ தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். பதில் தான் கிடைக்கவில்லை. தெரிந்தவளும் சொல்ல முயலவில்லை. காதலில் இப்படியொரு அவஸ்தை!

***

 

பகிரப்பட்ட

NEW REALESED