7. காஃபி வித் அப்பா
மாயா தனது கைப்பேசியை எடுத்தாள். கீதா அழைத்திருந்தாள். " ஒரு நிமிஷம் ப்பா" என்று சொல்லிவிட்டு மாயா அந்த அழைப்பை எடுத்தாள்.
"ஹ்ம் சொல்லுடி"
"மச்சி நீ ஃபிஸிக்ஸ் அசைன்மெண்ட் முடிச்சுட்டியா டி?"
"நான் அசைன்மெண்ட் முடிச்சுட்டேன் டி. உனக்கு வாட்ஸ் அப் பண்றேன். நீ காப்பி பண்ணிக்கோ"
"..."
"..."
வாசகர்களுக்கு ஆர்வமில்லாத ஒரு சில தேவையில்லாத விஷயங்களைப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிற போது,
"ஹேய், அந்த ட்ராமா பத்தி யோசிச்சியா டீ?"
"இல்லடி, நான் தான் சொன்னேனே அதெல்லாம் முடியாதுன்னு"
"அதான், அப்பவே சொல்லிட்டயேடி. மறுபடியும் யோசிச்சியான்னு கேட்டேன்?"
"இல்லைடி மறுபடியும் அதைப் பத்தி யோசிக்க எனக்கு நேரமுமில்லை விருப்பமுமில்லை"
"ஏய், ரொம்ப பண்ணாதடி. நான் நடிக்கப் போறேன்னல்ல? நீயும் வா எருமை, நல்லா இருக்கும்."
"ஏன்டி, வேண்டாம்னு சொன்னா உனக்கும் புரியாதா? எனக்குப் பிடிக்கல டி"
முத்துக்குமரன் மாயாவின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
பின்னர் வந்து "என்னம்மா பிரச்சினை?" என்று கேட்டார்.
"அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா" என்றாள்.
"நீ வந்ததுள்ள இருந்து இதை மட்டும் தான் சொல்லிட்டு இருக்க. ஆனா, நீ வேற எதையோ யோசிச்சிட்டு இருக்க. ஒரு நிமிஷம் அந்தப் ஃபோனை இங்க கொடு" என்று சொல்லிவிட்டு அவர் மாயாவின் கைப்பேசியை பிடிங்கினார்.
கைப்பேசியில் கீதா, "அப்பா, நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டாள்.
"நான் நல்லா இருக்கேம்மா. நீ நல்லா இருக்கியாம்மா?. நல்லா படிக்கிறியா?"
"நான் நல்லா இருக்கேன்ப்பா. நல்லா படிக்கிறேன்."
"என்னம்மா பிரச்சினை. மாயா ஏதோ முடியாது முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கா?" என்று கேட்டார் முத்துக்குமரன்.
"பிரச்சினையெல்லாம் ஒன்னும் இல்லைப் பா. காலேஜ் ஆனுவல் டேக்கு ஒரு ட்ராமா போடுறோம். மாயாவை நடிக்கச் சொன்னதுக்கு மாட்டேன்னு சொல்றா. அது தான் ப்பா பேசிட்டு இருந்தோம்."
"நடிக்க மாட்டேன்னு சொன்னாளா? நீயும் மாயாவும் தான் பள்ளிக் கூடத்துல இருந்தே டிராமா மைம்னு ஏதேதோ பண்ணிட்டு இருப்பீங்களே. இப்ப என்னாச்சு?"
"அதான் ப்பா எனக்கும் தெரியல நான் முதல்ல அவள டிராமா கிளப்ல சேர சொன்னதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டா. இப்போ, நடிக்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நான் தான் அவ பேரை ப்ரபோஸ் பண்ணுனேன். ஆனா அவ ஒத்து வரவே மாட்டீங்கிறா. என்னப் பிரச்சனைனே தெரியல" என்றாள் கீதா.
"பிரச்சினை யெல்லாம் ஒன்னுமில்லை மா. புது இடம் புது ஆளுக. அதுவும் இல்லாம ஃபர்ஸ்ட் இயர் தான அதனால் தான் பயப்படுறான்னு நினைக்கிறேன்., நான் பேசிப் பாக்குறேன்."
"வேண்டாம் ப்பா நாங்க நிறையா தடவைப் பேசிப் பாத்துட்டோம். டீம்ல நடிக்கிறதுக்கு ஆள் இல்லை. அதனால் தான் கேட்டும் பார்த்தோம். அவளுக்கும் அதுல இன்ட்ரஸ்ட் இருக்கும்னு நினைச்சேன். ஏனோ அவளுக்கு நடிக்கப் பிடிக்கலை. ஒரு வேளை டீம்லா பசங்க இருக்கிறது அவளுக்கு அன் கம்ஃபோர்டபிலா இருக்கோ என்னமோ. அவளை ரொம்ப கம்ப்பள் பண்ண வேண்டாம்ப்பா. விட்டுறுவோம்"
"சரிம்மா, நான் ஒருக்கா பேசிப் பாக்குறேன். அவளுக்குப் பிடிக்காட்டி வேண்டாம். நான் மாயாகிட்ட பேசிட்டு அவளை கால் பண்ண சொல்றேன்" என்று சொல்லிவிட்டு கைப்பேசியை அணைத்தார்.
"ஏன்மா, உனக்கு தான் இந்த ட்ராமா, கதை சொல்றது, நடிக்கிறது இதெல்லாம் பிடிக்குமே. நீ ஏன்மா கலந்துக்கல?"
"ஏன்னோ, இந்த முறை இன்ட்ரஸ்ட் வரலை. அது போக மெயின் எக்ஸாம்ஸ்க்கு வேற படிக்கணும். அதான் ப்பா விட்டுட்டேன்" என்று அவரது கண்களைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டே சொன்னாள்.
மாயா உண்மையை மறைக்கின்ற போது எதிரே இருப்பவர்களுடன் கண்பார்வையை தவிர்த்து விடுவாள். இது மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், முத்துக்குமரன் அவளது தந்தை அவருக்கு மாயாவின் இந்த செய்கை நன்கு தெரிந்திருந்தது.
"ஏன்டா தங்கம் நேத்து நடந்ததைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கியா?"
"சேச்சே, இல்லைப்பா. நான் அதைப் பத்தியெல்லாம் யோசிச்சிட்டு இல்லைப்பா"
"பாப்பா நான் உன்னோட அப்பா. நீ என்ன நினைக்கிறேன்னு கூடவா எனக்கு தெரியாது? நேத்து ஒரு நாள் ஒரு நாய் உன்னைக் கடிக்க வந்துச்சு அதை நீ உனக்கு தெரிஞ்ச மாதிரி அடிச்சு தண்டிச்சுட்ட. அதோட அந்தப் பிரச்சினை முடிஞ்சுது. இன்னும் ஏன் நீ அதைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்க?
அதுவும் இல்லாம கல்லா மாறுனவன் ஒரு பெரிய ஆளோட பையன் கண்டிப்பா அவனை யாராவது தேடிட்டு வருவாங்க. கீதாவே சொல்றா நீ ஏதோ சரியில்லைனு. நீ இப்படியே இருந்தா சீக்கிரம் யார் கிட்டையாவது பிடிபட்டுருவோம். அதனால நீ எப்பவும் போல இருமா" என்றார் முத்துக்குமரன்.
மாயா, "இல்லைப்பா ஏதோ ஒரு பையன் என் பின்னால வந்ததுனால தான இவ்ளோ பிரச்சனையும், இப்போ அந்தக் கிளப்ல நிறையா பசங்க இருக்காங்க. அதான் ப்பா கொஞ்சம் பயமா இருக்கு". என்றாள்.
"எல்லோரையும் நம்புறது ஆபத்துன்னா, யாரையும் நம்பாம இருக்கிறது அதை விட ஆபத்து மா. உலகத்துல இருக்கற எல்லா பசங்களையும் கெட்டவங்களாவே நினைச்சிட்டா, அப்புறம் நீ இந்த உலகத்துல நிம்மதியாவே இருக்க முடியாது மா. நீ போய் தைரியமா நடி,பாடு, ஆடு, உனக்கு பிடிச்ச எதை வேணும்னாலும் செய். சந்தோஷமா இரு. நான் உன் கூட இருக்கேன் உனக்கு எதுவும் வராம நான் பாத்துக்கிறேன்." என்றார் முத்துக்குமரன்.
"அது மட்டுமில்லப்பா, நமக்கு வேறவொரு முக்கியமான கடமை இருக்கு. ஒரு பெரிய போருக்கு தயாராகிட்டு இருக்கோம். இந்த நேரத்துல இது தேவையான்னு சொல்லித் தான் நான் கலந்துக்க வேண்டாம்னு நினைச்சேன்ப்பா "
"நாம சண்டை போடுறது சாகுறதுக்கு இல்லம்மா, சந்தோஷமா வாழுறதுக்கு. உனக்குப் பிடிச்ச ஒன்னை செய்ய முடியாட்டி எப்படிம்மா நீ சந்தோஷமா இருப்ப?
என் பொண்ணு எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.
ஒருவேளை நாம இந்த சண்டையில செத்துப் போயிட்டாக் கூட இது வரைக்கும் வாழ்ந்த இந்த வாழ்க்கையில நாம சந்தோஷமா தான் இருந்தோம்னு ஒரு நிறைவு இருக்கணும். அதுக்காகவாவது நீ இந்த ட்ராமாவுல கலந்துக்கோ" என்று முத்துக்குமரன் கூறினார்.
மாயா இயல்பிலேயே ஒரு நடிகை. மேடை அவளுக்குப் பிடித்திருந்தது. பள்ளி நாட்களில் அவள் பல ட்ராமாக்களில் நடித்திருக்கிறாள் அந்த எல்லா ட்ராமாவிலும் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு அவளை ஊக்குவிக்கக்கூடிய ஆளாக முத்துக்குமரன் இருந்தார். அவரே சொன்னபிறகு மாயாவால் அதை மறுக்க முடியவில்லை. அதனால் இறுதியாக அவள் ஒத்துக் கொண்டாள்.
*
ட்ராமா டீம் அமைந்து விட்டது. அடுத்து என்ன ட்ராமா போடுவது என்பதைத் தீர்மானிக்க காலேஜ் ஃபவுண்டர் சிலை அருகே இருந்த தியான மண்டப வாசலில் அமர்ந்த படி விவாதிக்கத் தொடங்கினர்.
"மச்சி, 'துணிவு' படத்தை ஸ்பூஃப் பண்ணி ஒரு ஸ்கிட் பண்ணலாம் டா" என்றான் ஆட்டோமொபைல் அருண்.
" வேணாம்டா அந்த படமே 'மனி ஹெய்ஸ்ட்' சீரிஸை ஸ்பூஃப் வீடியோ பண்ணுன மாதிரி தான் இருக்கும்" என்றான் மகேந்திரன்.
"நாம ஏன்டா இந்த அண்ணாமலை, உதயநிதி, எடப்பாடி எல்லாத்தையும் வைச்சி ஒரு பொலிட்டிக்கல் சட்டையர் பண்ணக் கூடாது?" என்றான் மோகன்.
"அந்த மாதிரி யூட்யூப் ல ஆயிரம் வீடியோ இருக்கு. அதுவும் இல்லாம இதெல்லாம் அடிச்சுத் துவைச்ச கான்செப்ட் புதுசா எதாவது செய்யலாம் டா" என்றான் மகேந்திரன்.
"ஏன், மச்சி இப்போ எல்லோரும் ரொம்ப மொபைல் யூஸ் பண்றாங்க இல்லை. அதை வைச்சு டிஜிட்டல் வெல்பீயிங் பத்தி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணலாம்டா" என்றாள் கீதா.
"இது நல்லா இருக்கு நாம இதை ட்ரை பண்ணலாம்" என்று மகேந்திரன் சொல்வதற்குள்,
“கருத்து சொல்ற வேலையை வேண்டாம் விட்டுருவோம் டா” என்றான் அருண்.
"நாம ஏன்டா, ஒரு ஷேக்ஸ்பியர் டிராமா பண்ணக் கூடாது?" என்று கேட்டான் மகேந்திரன். அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த மாயா அவன் சொல்வதைக் கேட்டு நிமிர்ந்து மகேந்திரனைப் பார்த்தான்.
"ஷேக்ஸ்பியர் எழுதினதுல நாற்பதுக்கு மேல டிராமா இருக்கு. எதை எடுத்துப் பண்றது?" என கீதா கேட்டாள்.
"ரோமியோ ஜூலியட் பண்ணலாமா?" என்று கேட்டான் மகேந்திரன்.
மோகன் சிறகுகள் இன்றி பறக்கத் தொடங்கினான். இந்த நாடகத்தில் அவள் ஜூலியட் ஆகவும் அவளைக் காதலிக்கிற ரோமியோவாகத் தானும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆன் ட்யூட்டி வாங்கி விட்டு வகுப்பை மட்டம் போட வந்திருந்த டெஸ்லா, மகேந்திரனின் இந்த யோசனையைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.
"டேய், மண்டி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசுறியேடா? நம்ம சீனியர்ஸ் கிட்டயெல்லாம் ஒருக்காவாவது பேசியிருக்கியா?
போன பேட்ச் வரைக்கும்.
பாய் பாய் டாக்,
கேர்ள் கேர்ள் டாக்,
பாய் கேர்ள் நோ டாக் அப்படின்னு சொல்லிட்டுக் கிடந்த மேனேஜ்மெண்ட டா இது.
ஏதோ, கரஸ்பான்ட்டன்ட் மாறுனதுனால, நம்ம பேட்ச்சுல பொண்ணுங்க பசங்கல பேச விட்டுருக்கானுங்க. அவ்ளோ தான். அதுக்காக மொத்தக் காலேஜ்ஜையும் கூட்டி வைச்சிட்டு லவ் ட்ராமா போட்டோம், சீன் ஆயிடும் அதனால தயவு செஞ்சு வேற ஐடியா யோசிக்கலாம்." என்றான் டெஸ்லா.
டெஸ்லா சொல்வதை உதாசினப் படுத்தத்தான் மகேந்திரன் முதலில் நினைத்தான். ஆனால், அவன் சொல்வதில் விஷயம் இருக்கிறது.
"நீ சொல்றதும் சரி தான். அப்போ வேற என்ன டிராமா போடலாம்னு சொல்லுங்க" என்றான் மகேந்திரன்.
"அடப்பாவி டெஸ்லா. நல்லா வந்த ஒரு வாய்ப்பை உன் நார வாய வைச்சு நாசம் பண்ணிட்டியே டா" என்று மனதிற்குள் நினைத்தான் மோகன்.
ஆனாலும், நல்லோர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி. அவனுக்கு மிக நிச்சயமாக ஒரு வாய்ப்பு வருமென காத்திருந்தான்.
"அப்போ மேக்பத் டிராமா போட்டுரலாமா?" என்றான் மண்டி.
"ஹ்ம்... அதையே போட்டுக்கலாம். அதுல எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று அனைவரும் ஏக மனதாக அதனை ஏற்றுக் கொண்டனர். ரோமியோ ஜூலியட் கதையை எடுக்காததற்கு மோகனுக்கு மட்டும் வருத்தம் இருந்தது.