Read Yayum Yayum by Nithyan in Tamil Science-Fiction | மாட்ருபர்த்தி

Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

யாயும் யாயும்

வருகைகதைமாந்தர்களை கேட்டு எந்தக் கதையும் எழுதப்படுவதில்லை.5000 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நிலத்தில் தேசங்கள் என எதுவும் பிரிக்கப்படாத காலகட்டத்தில்,தங்களுக்குள் இருந்த கசப்புகளை மறந்து அன்று மாலையில் ஐவகை நிலத்தின் தலைவர்களும் அந்தக் குன்றில் ஒன்றை பற்றி பேச ஒன்று கூடினர். மலைத் தலைவனின் குடிசைக்கு வெளியே அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. பிற குலத் தலைவர்கள் அனைவரும் அங்கிருந்த தின்னையிலும், பாறையின் மீதும் அமர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் வந்திருந்த அவர்கள் குல மக்கள், தங்கள் தலைவர்கள் பேசுவது கேட்கிற தூரத்தில் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தனர்.மலைவாசிகளின் தலைவன் மலையன் எழுந்து நின்று தன் முன் இருந்த பச்சைப் பசும் மலையைப் பார்த்தபடி தன் கையில் பிடித்திருந்த வேல்கம்பை சுழற்றிக் கொண்டிருந்தார். அவரது முதுமை அவரது தலைமுடியிலும் மார்பில் தொங்கிய தாடியிலும் மட்டுமே தெரிந்தது. உடல், இரும்பில் வார்த்தெடுத்தது போன்ற உறுதியில் இருந்தது. அந்த மலையில் வீசிய குளிர் காற்றில் மான் தோலால் செய்யப்பட்டிருந்த அவரது ஆடை அசைந்து கொண்டிருந்தது. மலையிலிருந்து வந்த தென்றல் அவர் முகத்தில் அடித்தது. கண்களை மூடி அந்தத் தென்றலை அனுபவித்து விட்டு, பிற தலைவர்களை நோக்கி பேசத் தொடங்கினான்.“நான் ஒரு கனவு கண்டேன்.” என்று துவங்கினார். அனைத்து தலைவர்களும் அவர் பேசப் போவதை கவனித்தனர். “நம் மனித இனம் மொத்தமாக இந்தப் பூமியிலிருந்து அழிவதை நான் அந்தக் கனவில் கண்டேன். உணவின்றி ஒரு வயதுக் குழந்தை இறப்பதைக் கண்டேன். அந்தக் குழந்தை இறந்தவுடன் அதைக் கொத்தித் திங்க ஒரு கழுகு காத்திருப்பதைக் கண்டேன்.காற்று முழுக்க விஷமாக மாறி, அதை சுவாசிப்பவர்கள் எல்லாம் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். நீர் முழுக்க விஷமாகி கடலிலிருக்கிற மீன்கள் எல்லாம் இறந்து மிதப்பதைக் கண்டேன். அந்த நீரை குடிக்கிற ஆடு மாடுகளும் இறந்து விழுவதைக் கண்டேன்.நம் வேளாண் குடிகள் சாலையில் நிர்வாணமாக சென்று கொத்துக் கொத்தாக தூக்கு மாட்டிக் கொள்வதைக் கண்டேன். பின்பு, யாவருக்கும் இங்கு உணவில்லாமல் ஒருவரையொருவர் கொன்று உண்பதையும் கண்டேன்.” என்றார்.மேலும், “இவையெல்லாம் என் தெய்வங்கள் நமக்கு கொடுக்கிற எச்சரிக்கை என்று தோன்றியது. அதைப் பற்றி விவாதிக்க உங்களை வரச் சொன்னேன்.” என்றார்.“ஒரு உறக்கமில்லாத முதியவனின் கனவை விவாதிக்க தான், எங்களை இவ்வளவு தூரம் அழைத்தீர்களா?” என்று கேட்டான் பாலைநிலத் தலைவனும் பெரும் கள்வனுமான வீரசேனன். பாலை என்ற தனித்த நிலம் தமிழ் நிலத்தில் இருந்ததில்லை. மழையில்லாத காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த மக்கள் தங்கள் தெய்வத்தை உதறி அந்த இடத்தை பாலை என்று அழைத்தனர். பசியிலிருப்பவன் முதலில் துறப்பது அறத்தை தான். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிற நில மக்களிடம் கொள்ளையடிப்பதை தொழிலாக கொண்ட மக்கள் அங்கு வாழ்ந்தனர். தங்களது வாழ்வின் மீதான வலியை மறக்கவும், அவர்கள் செயலின் மீதான குற்றவுணர்வை மறைக்கவும் அவர்களது நாக்கில் துடுக்குத் தனம் குடியேறியது. அவர்களின் தலைவனான வீர சேனனுக்கு அந்த துடுக்குத் தனம் அதிகமாக இருந்தது.“மரியாதையின்றி பேசும் இந்தக் கள்வன் இது போன்ற சபைக்கு ஏற்றவன் அல்ல. இவனுக்கு ஏற்ற தண்டனையை நான் தருகிறேன்.” என்று சொல்லி மருத நிலத் தலைவன் சேனன் தன் வேல்க்கம்புடன் அவன் மீது பாய்ந்தான்.இலையில் ஒட்டியிருக்கிற பூச்சியை எடுப்பது போல தன் புஜ வலிமையால் இருவர்களையும் பிரித்தார் மலையன்.“இங்கே உங்களை அழைத்தது சண்டையிட்டுக் கொள்வதற்கு அல்ல. எங்கள் தெய்வங்கள் இதற்கு முன்பு கனவில் காட்டிய அனைத்துமே, நடந்துள்ளது. அப்படியென்றால் மிக நிச்சயமாக இதுவும் நடக்கும்.” என்றார் மலையன்.“மலைத் தலைவர் சொல்வது உண்மை தான். கடந்த சில வருடங்களாக காட்டு மரங்கள் பெரிதாக வளர்வதில்லை. பூக்கள் பூக்காததால் தேன் அதிகம் கிடைப்பதில்லை.‌ என் கண்களால் நானே ஐந்து புலிகனின் மரணத்தைக் கண்டேன். புலிகள் இல்லாத காட்டில் எந்த உயிர்களும் செழிக்காது. புதிதாய் எதுவும் பிறப்பதில்லை. வயதானவை அனைத்தும் விரைவில் தீர்ந்து விடும் காட்டின் சமநிலை குழைந்து விடும் என அஞ்சுகிறேன்.” என்றார் முல்லை நிலத் தலைவர் காடன்.“எங்களுக்கும் அதே நிலை தான். முன்பு போல இப்போது எங்கள் வலைகளில் மீன்கள் அதிகம் கிடைப்பதில்லை. குறைந்த உணவைக் கொண்டே உயிரைப் பிடித்து வைத்திருக்கிறோம். எங்கள் மக்களில் கூட இப்போது யாரும் கருவுறுவதில்லை.” என்றார் நெய்தல் இனத் தலைவர்.“எங்கும் இதே பிரச்சினை தான், எம் குலப் பெண்களும் கருவுறுவதில்லை. கடந்த நான்கைந்து வெள்ளாமைகளும் விளைச்சலைக் கொடுக்கவில்லை. இது ஏதோ மூத்தோரின் தீச்சொல் என நினைத்து நாங்கள் அவர்களுக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார் மருத நிலத் தலைவர்.“பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒரு பகுதியென்றும், அதுவொரு சுழற்சி என்றும் தான் நம் மூத்தோர்கள் கண்டறிந்த மெய்ஞானம் சொல்கிறது. புதிதாக எதுவும் படைக்கப்படவில்லை என்றால், படைத்தவைகளும் அழியும், அந்த சுழற்சி உடைந்து மொத்த உயிர்க்கோளமே சிதையும்” என்றார் மலையன்.“எங்கள் இனத்தவருக்கு, அது‌ போன்ற எந்தக் கவலையும் இல்லை. வேண்டுமென்றால் சொல்லுங்கள் உங்கள் இனப் பெண்கள் கருவுற நாங்கள் உதவுகிறோம்.” என்று சொல்லி நகைத்தான் கள்வன் வீர சேனன்.அனைவருக்கும் அவன் மீது ஆத்திரம் இருந்த போதும், மலையனின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தனர்.“வீர சேனா, உன் சகோதரன் அழியும் போது அதைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்தால், நீ அழியும் போது உன்னைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள்.” என்றார் மலையன்.பெண்கள் எவரும் கருவுறாமல் இருப்பது மட்டுமல்ல இப்போது எதுவும் புதிதாக விளைவதில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். அதனால், அவர்கள் சொல்வதன் உண்மையை அவன் அதற்கு மேல் கேலி செய்யவில்லை.“நீங்க சொல்வது, உண்மை தான். நாம இப்போது என்ன செய்வது?” என்று கேட்டார் காடன்.“நாதியற்ற மனிதனுக்கு வானத்தைப் பார்த்து கெஞ்சுவதை விட வேற என்ன வழி இருக்க முடியும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நம் தெய்வங்களுக்கு பலி கொடுத்து பூஜை செய்தால், நாம் வரப் போகிற இந்த அழிவில் இருந்து தப்பிக்க முடியுமென்று நம்புகிறேன்” என்றார் மலையன்.அனைத்து குலத் தலைவர்களும் அதற்கு ஒப்புக் கொள்ள, அன்றிலிருந்து அடுத்த பௌர்ணமி நாளில் அவர்கள் குல தெய்வங்கள் அனைவருக்கும் ஒன்றாக பலி பூஜை நிகழ்த்தப்பட்டது. அவரவர் குல முறைப்படி பூஜைகள் செய்து, ஆடு, மாடு, பன்றி, முதல் நெல் என அனைத்தும் அவியாக்கப்பட்டன.அவியளிக்கப் பட்ட பின்பு அதை கடவுள்கள் ஏற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக விண்ணிலிருந்து மழை பெய்யும் என்று எதிர்பார்த்து வானைப் பார்த்து கொண்டு ஐந்து நிலத் தலைவர்களும் மலையன் குடிலின் வாசலில் அமர்ந்திருந்தனர்.“நாம் கொடுத்த பலியில் ஏதோ குறை இருக்கிறது போல, அதனால் தான் நமக்கு நம் கடவுள்களின் கருணை கிடைக்கவில்லை” என்றார் மருத நிலத் தலைவர். “இல்லை, கடவுள்களும் இல்லை. அவர்கள் நம்மீது கருணை காட்டுவதுமில்லை. நாம் நம் அழிவை நாமே எதிர்கொண்டு சமாளிப்போம். இல்லையேல் அழிவோம்.” என்றார் நெய்தல் நிலத் தலைவர். “நான் முன்னரே சொன்னது போல இவையனைத்தும் ஒரு தூக்கமில்லாத கிழவனின் உளறல் மட்டும் தான். இதை நாம் தான் தேவையில்லாமல் பெரிதாக்கி விட்டோம்.” என்றான் வீர சேனன்.மலையன் அவமானம் நிறைந்த முகத்தோடு ஆனால், அதே நேரத்தில் கண்களில் நம்பிக்கையோடு வானையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.மழை வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. பிற நிலத் தலைவர்கள் அந்த இடத்தை விட்டு நீங்க எத்தனித்த போது, வானிலிருந்து ஒரு மாபெரும் விண்கலம் ஒன்று வந்து அவர்கள் கூடியிருந்த முற்றத்துக்கு மேலே நின்றது.  அந்த விண்கலத்திலிருந்து ஒரு ஒளி தரையில் பட்டது அந்த ஒளியில் இருந்து பார்ப்போரை மயக்கி விடக் கூடிய அளவிற்கு அழகிய முகம் கொண்ட ஒருவன், உடல் முழுக்க சூழ்ந்த கவச உடையுடன் வந்து நின்றான்.திடீரென்று வானிலிருந்து வந்த அவனைக் கண்டு அனைவரும் பயந்தனர். “யார் நீ, யார் நீ” என்று கேட்டபடி அனைவரும் தங்களது வேல்க்கம்பை உயர்த்தினர். வந்தவன் தனது இடது மணிக்கட்டில் இருந்த கண்ணாடித் திரையை அழுத்தினான். அந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்பதை அவனுக்கு காட்டியது. அந்த திரையில் இருக்கிற மொழி மாற்றியை அழுத்தினான். இனி, அவன் அவனுடையை மொழியில் பேசினாலும் அதை அவர்களுக்கு தமிழில் மொழிபெயர்த்து சொல்லும். அவர்கள் பேசுவதையும் அவனுக்கு அவனுடைய மொழியில் மொழி பெயர்த்து சொல்லும்.“என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களுடைய பிரச்சினை என்னவென்று எனக்குத் தெரியும். நான் உங்களுக்கு உதவவே வந்திருக்கிறேன்.” என்றான்.சந்தேகத்துடன், “எங்கள் பிரச்சினையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார் காடன்.“புதிதாக எந்த உயிரும் பிறப்பதில்லை, என்பதே உங்கள் பிரச்சினை என்று அறிகிறேன். நான் சொல்வது சரியா?” என்று கேட்டான்.“ஆம். அதை நீங்கள் எப்படி சரி செய்ய முடியும்? நீங்கள் என்ன கடவுளா?” என்று கேட்டார் மருத நிலத்துத் தலைவர்.வந்தவன் சிறு புன்னகையுடன், “என்னால் சரி செய்ய முடியும்.” என்றான்.“நாதியற்றவனுக்கு வானிலிருந்து தான் துணை வரும் என்பது எங்கள் மூதாதையரின் வாக்கு. நாங்கள் இதற்கு முன் எப்போதும் வானிலிருந்து ஒரு உதவி வந்ததை பார்த்தது இல்லை. ஆனால், மிக நிச்சயமாக ஏதாவது உதவி எம் மூதாதையருக்கு வானிலிருந்து வந்திருக்கும், அதனால் தான் அவர்கள் வானை நோக்கி வணங்கினர். நீங்களும் வானிலிருந்து தான் வந்திருக்கிறீர்கள். உங்களால் எங்களுக்கு உதவ முடியுமென்று நாங்கள் நம்புகிறோம். உதவுக.” என்று கை கூப்பினார் மலையன்.“அப்படியே ஆகட்டும்.” என்று சொன்னபடி வந்தவன், தனது உறையிலிருந்து ஒரு ஆயுதத்தை எடுத்தான். இரு பக்கங்களும் தடித்த உலோக கம்பிகளால் செய்யப்பட்ட உள்ளீடற்ற கோள வடிவத்தில் இருந்தது அந்த ஆயுதம். அந்த ஆயுதத்தை தன் கைகளில் உயர்த்தி அந்த மலையை நோக்கி படி தன் வாயால் எதையோ முனுமுனுத்தான். அவன் கையிலிருந்த ஆயுதம் ஒளிரத் தொடங்கியது, பின் அதிலிருந்து ஒரு மின்னல் கிளம்பிச் சென்று அந்த இரு மலைகளுக்கிடையே இருந்த ஒரு காட்டில் இடியாக விழுந்தது.இடி விழுந்த உடனேயே, அங்கு சுகந்த மனத்துடன் பாரிஜாத மலர்கள் பூக்கத் தொடங்கின. அந்த மலரில் இருந்து வந்த வாசனை அனைவரையும் மயக்கியது. அவர்களது உடலில் அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்த பல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. அவர்களைச் சுற்றி எங்கும் இனிமை படர்ந்தது. அனைத்தும் அழகாய்த் தெரிந்தது. காமம் கட்டின்றி அனைவர் உள்ளும் பொங்கியது. உடலின் மொத்த ரத்தமும் ஒரு உறுப்பில் கூடியது. இன்பம் இன்பம் என்று உடல் ஏங்கியது. அனைவரும் தங்கள் சுற்றங்களை மறந்து, தங்கள் நாணங்களை மறந்து தங்களது துணைகளுடன் கலவியில் ஈடுபட்டனர். காமத்தை வென்றதாக நம்பிக் கொண்டிருந்த மூத்தவர்கள் கூட தாங்கள் இன்னும் அதை வெல்லவில்லை என்ற உண்மையை அறிந்தனர். அனைவரும் கூடினர். அனைத்து கட்டுப்பாடும் கொண்ட மனிதனிலிருந்த ஆதி மிருகம் விழித்துக் கொண்டது. அனைவரும் வெறும் உடலாக மாறி புணரத் தொடங்கியது.காட்டில் விழுந்த இடி, நாடு நகரம் முழுக்க பரவியது. பாரிஜாத மலரின் வாசம் எங்கும் பரவியது. வாசத்தை முகர்ந்த அனைவரும், தாங்கள் செய்து கொண்டிருந்த அனைத்து வேலைகளையும் விட்டு தங்கள் துணையைத் தேடி கூடினர். இதுவரை காதலைச் சொல்லாத காதலர்கள் கூட கலவியில் ஒன்று கூடினர். வேட்டைக்கு சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பிய போது, மிருகங்களிலும் ஒரு மாற்றம் கூடியிருப்பதை அந்த மிருகங்கள் உணர்ந்தன.அத்தனை மிருகங்களும் காமத்தில் திளைத்தன. செடிகளும் மரங்களும் மகரந்தங்களை காற்றில் அள்ளி வீசின. தேனீக்கள் அந்த மகரந்தங்களை தாவி தாவி பிற செடிகளுக்கு கடத்தின. ராணித்தேனீயை புணர்ந்து பல வேலைக்காரத் தேனீக்கள் இறந்தன. ஒவ்வொரு இறப்பிலும் ராணித் தேனீ நூறு தேனீக்களைப் பிறப்பித்தது. புல், செடிகள், பூச்சிகள், பாம்புகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் காமம் என்ற புள்ளியில் ஒன்று பட்டு நின்றனர். வந்தவன் வீசிய இடியால் அங்கு கரும்பாறை கூட கருவுறத் தொடங்கியது.இடியை எறிந்த பின்பு, அங்கிருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்டதை நான் கொடுத்தேன். சரியாக இன்றிருலிருந்து பனிரெண்டு முழு நிலவுகள் கடந்த பின்பு, நான் மீண்டும் இங்கு வருவேன்.” என்று சொன்னான். அவன் சொன்னதும், அந்த விண்கலத்திலிருந்து அந்த மாய ஒளி வந்தது. அவன் மறைந்தான். விண்கலம் அங்கிருந்து சென்றது.அந்தப் பனிரெண்டு மாதங்களில் அவனைப் பற்றிய கதைகள் கைகால் முளைத்து நாடு நகரமெங்கும் பரவத்தொடங்கியது. மருத நிலத்து மக்கள் அனைவரும் வந்தவன் அவர்களது தெய்வம் ‘வேந்தன்’ என்று நகரங்களில் பேசத் தொடங்கினர். நகர மக்களின் சொற்களால் நிலைக்கப்பட்டு அவன் மருத நில மக்களின் கடவுளாக நிலை கொண்டான்.பனிரெண்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த நாடு முழுக்க பல பெண்கள் கருவுற்று தங்கள் குலங்களுக்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்தனர். விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்தும் பல்கிப் பெருகியிருந்தனர். வைப்பதற்கு கூட இடமில்லாமல் தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன. பாலை நில மக்கள் கூட கொள்ளையடிப்பதை குறைத்துக் கொண்டு தங்கள் மலைகளிலும் காடுகளிலும் விளைச்சலை எடுத்துக் கொண்டிருந்தனர். எப்போதும் இல்லாத நல்வாழ்வில் அந்த மக்கள் வாழத் தொடங்கினர்.வந்தவன் குறிப்பிட்ட முழுநிலவு நாளில் அனைவரும் மலையனின் இடத்தில் கூடினர். எதிர்பார்த்ததைப் போலவே மீண்டும் வானில் அந்த விண்கலம் வந்து நின்றது. அந்த விண்கலத்திலிருந்து அவன் மீண்டும் இறங்கி வந்தான்.ஐந்து நிலத் தலைவர்களும் தங்களால் முடிந்த, தாங்கள் விளைவித்தப் பொருட்களை காணிக்கையாக கொடுக்க முன் வந்தனர்.அவர்களை தனது புன்னகையால் எதிர்கொண்டான். தனக்கு அவர்கள் கொடுத்த காணிக்கைக்கும், அன்பிற்கும் நன்றி என்று கூறினான்.“அழிவின் விளிம்பிலிருந்த மக்களை காத்திருக்கிறீர்கள். நீங்கள் யார்?” என்று கேட்டார் மலையன்.“என் பெயர் இந்திரன். நான் பூமியைப் போலவே இருக்கிற வேறொரு கிரகத்திலிருந்து வருகிறேன்” என்றான்.“நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இப்போது நீங்கள் எங்கள் கடவுள். உங்களுக்கு நாங்கள் கடன் பட்டவர்கள். நாங்கள் உங்களுக்கு என்ன காணிக்கை தர வேண்டும்?” என்று கேட்டார் மலையன்.“நான் வேண்டுவதை மிக நிச்சயமாக உங்களால் தர முடியுமா?” என்று கேட்டான் இந்திரன்.“எங்கள் உயிரைக் கேட்டால் கூட தருவோம்” என்று சொன்னார் மலையன்.“உயிரினும் மேலான அன்பை நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள். எனக்கு உங்களது உயிர் வேண்டாம். எனக்கு வேறொன்று வேண்டும்” என்று சொன்னான் இந்திரன்.இந்திரன் தனக்கு வேண்டியதைக் கேட்டான். ஐந்து நிலத் தலைவர்களும் சிறிது கூட தயக்கமின்றி அவன் கேட்டதை தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.